Monday 9 March 2015

பயங்கரவாதிக்கும் தேவையா, சட்ட உதவி?


மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘பிடிபட்ட தீவிரவாதியான அஜ்மல் கசாப்’புக்கு வழக்குரைஞரின் உதவி அளிக்கப்படலாமா, கூடாதா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தானாக முன்வந்து மனு தாக்கல் செய்த வழக்குரைஞரின் வீடு சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது.

சிவசேனை தொண்டர்கள், நாட்டுப்பற்றை தங்களது செயலுக்கான காரணமாக வாதிட்டாலும், அவர்களது கருத்து தொலை நோக்குப் பார்வையில் (in long term) நாட்டு நலனுக்கு சாதகமாக இருக்கப் போகிறதா என்றால், சந்தேகமே!

ஊடகங்கள் என்ன, பல சமயங்களில் நீதிபதிகளே, ‘இந்த வழக்கிற்கு’ அல்லது ‘இந்த வழக்காடிக்கு’ நீங்கள் எப்படி ஆஜராகலாம் என்று கேட்கிறார்கள். வழக்குரைஞர் சங்கங்களும் தங்கள் பங்குக்கு ‘இன்னாருக்கு யாரும் ஆஜராகக் கூடாது என்று தீர்மானம் இயற்றுகிறார்கள்.

எந்த ஒரு சட்டமுறையின் அடிப்படை விதி ‘Audi Altrem Partem’ என்பதாகும். இதன் அர்த்தம் ‘இரு தரப்பிரனரையும் கேட்க வேண்டும்’ என்பதாகும். இந்த விதியினை மீறி சர்வாதிகாரமென்றாலும் சரி, மக்களாட்சியென்றாலும் சரி எந்த ஒரு நீதி விசாரணையையும் நடத்தி விட முடியாது.

எனவே மும்பையில் பிடிபட்ட தீவிரவாதிக்கும் தனது தரப்பு வாதத்தினை வைக்க வாய்ப்பளித்துதானாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் வாய்ப்பானது, வெறும் கண்துடைப்பாக இல்லாமல் உண்மையான ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சட்டமுறையினை அறிந்த ஒரு வழக்குரைஞரின் உதவி தேவை.

அவ்வாறான உதவி வழங்கக் கூடாது என்பது, ஏறக்குறைய ‘விசாரணையே கூடாது. அப்படியே தூக்கில் போட்டுவிட வேண்டியதுதான்’ என்று கூறுவதற்கு சமமானது. பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமை மிக்க ஆயுதம் சட்டத்தின் முறையே (due process of law) தவிர கங்காரு நீதிமன்றங்கள் இல்லை. அவை உடனடி வலி நிவாரணி போல செயல்படலாம். நோய் தீர்க்கும் மருந்தாக இருக்க முடியாது..

குற்றம் சாட்டப்படுபவருக்கு, ஒரு வழக்குரைஞரின் உதவி மறுக்கப்படும் விசாரணை முறையும் உண்டு. அதாவது அலுவலர் (Employee) ஒருவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கீன நடவடிக்கை விசாரணைகளில் (disciplinary proceedings/ domestic enquiry) வழக்குரைஞரின் உதவியினை உரிமையாக கோர இயலாது. ஆனால், நிறுவனம் (Management) ஒரு வழக்குரைஞரை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டால், குற்றம் சாட்டப்பட்டவரும் (delinquent) வழக்குரைஞரின் உதவியினை உரிமையாக கோர இயலும்.

மும்பை பயங்கரவாதி விடயத்திலும், அரசு தனது வழக்குரைஞர் (Public Prosecutor) மூலம் வழக்கு நடத்துகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்குரைஞரின் உதவி கூடாது என்றால், அந்த விசாரணை இயற்கை நீதிக்கு உட்பட்டதாக அமைய வாய்ப்பில்லை.

முக்கியமாக இந்த விடயம், விவாதத்திற்குறிய ஒன்றாக வைக்கப்படுவது, ஒரு வழக்குரைஞரின் பணி என்பது சரிவர புரிந்து கொள்ளப்படாத நிலையினையே உறுதிப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.

நமது நாட்டிலுள்ள சட்ட முறையின்படி ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள்ளாக மட்டுமே வாதிட கடமைப்பட்டவர். ஆனால், தற்பொழுது இங்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் போல, வழக்குரைஞர்கள் சில சமயங்களில் தொலைக்காட்சி முன் தங்களது கட்சிக்காரரின் செயலை நியாயப்படுத்தி பேட்டி கொடுக்கும் ஒரு விரும்பத்தகாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் கூட இதை உணர்வதில்லை!

நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்குரைஞர், தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறினால், அடுத்த கணமே அவர் அந்த கட்சிக்காரருக்காக ஆஜராகும் உரிமையை இழப்பார் என்பதுதான் உண்மை. தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று அவரால் கூற முடியுமென்றால், அவரது கட்சிக்காரர் செய்த செயலைப் பற்றி அறிந்த ஒரு சாட்சியாக மாறுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள இயலும். அந்த வழக்கில் அவரே ஒரு சாட்சியாக மாறும் பொழுது, அதில் வழக்குரைஞராக நீடிக்கும் அருகதை அவருக்கு இருக்க முடியுமா என்ற கேள்வி எழும் வாய்ப்பு உள்ளது.


இவ்வாறாக ஒரு வழக்குரைஞர், கட்சிக்காரரின் நலனுடன் தன்னுடைய நலனினையும் (identifyin with the cause of the client) பொருத்தும் ஒரு நிலையில், இத்தகைய விவாதங்கள் எழுவது இயல்பே!

ஆனால் ஒரு வழக்குரைஞர் என்பவர் சட்ட முறைகளை அறியாத ஒருவருக்காக பின்னணி (அல்லது முன்னணி) குரல் கொடுப்பவர் மட்டுமே.

வழக்குரைஞர்களின் தொழிலை வரைமுறைப்படுத்தும் சட்டம் வழக்குரைஞர்கள் சட்டம் (The Advocate’s Act’1961) இந்த சட்டத்தின் கீழ் வழக்குரைஞர்களுக்கான நடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன (Standards of Professional Conduct and Etiquette). இந்த விதிகளில் ‘ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரர் செய்த குற்றத்தினைப் பொருத்து தனது சொந்தக் கருத்து எதுவாக இருப்பினும், யாரும் தகுந்த ஆதாரங்கள் இன்றி தண்டிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்து, தனது கட்சிக்காரரை பாதுகாக்க வேண்டும்’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

(15. It shall be the duty of an advocate fearlessly to uphold the interests of his client by all fair and honourable means without regard to any unpleasant consequences to himself or any other. He shall defend a person accused of a crime regardless of his personal opinion as to the guilt of the accused, bearing in mind that his loyalty is to the law which requires that no man should be convicted without adequate evidence)


இனியும், பயங்கரவாதிக்கு வழக்குரைஞர் உதவி கூடாது என்பது, நமது நாடு எவ்விதமான சட்ட முறைகளினால் உலகின் கண்களில் உயர்ந்து நிற்கிறதோ, அதற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு வாதமே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

இறுதியில், இந்த விடயத்தில் சுப்பிரமணியசுவாமி கூறிய ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. ‘பிடிபட்டவரை வெளிநாட்டு எதிரி (enemy alien) என்று அறிவித்து விடுங்கள். அவ்வாறு அறிவித்து விட்டால் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (Constitution of India) பிரிவு 22(1)ன்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தனக்கு பிடித்தமான வழக்குரைஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையினை பிடிபட்டவருக்கு மறுத்து விடலாம்’ என்பதாகும்.

உண்மைதான். ஆயினும் இதன் மூலம் பயங்கரவாதி தனது வழக்குரைஞரை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையினை மறுக்கலாம். ஆனாலும், அரசு அவருக்காக ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். வழக்குரைஞரின் உதவியே கூடாது என்று கூற முடியாது!

அது இயற்கை விதிக்கு (Natural Justice) மாறானது!

மதுரை
22/12/08

1 comment:

  1. இந்தியாவின் மகள் தொலைக்காட்சி ஆவணப்படத்தில், குற்றவாளிகளுக்காக ஆஜரான வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மிகுந்த விமர்சனத்துக்காகியுள்ளது. அவை பத்தாம்பசலித்தனமானவை. முக்கியமாக அவர்களின் பேட்டி, ‘குற்றவாளிகளுக்கு ஆஜராகும் வழக்குரைஞர்களும், அக்குற்றங்களுக்கு ஆதரவானவாரவே இருப்பார்’ என்ற சமூகத்தின் பொதுவான நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது.

    நாட்டை உலுக்கும் முக்கியமான குற்ற வழக்குகளில், இவ்வாறு குற்றவாளிகளின் செயலோடு ஒத்துப் போகும் வழக்குரைஞர்கள் மட்டுமே ஆஜராக முன் வரும் அபாயகரமான நிலைக்கு அதே பொதுவான நிலைப்பாடும், ஒரு வழக்குரைஞரின் பணியை சரியாக புரிந்து கொள்ளாத ஊடகங்களுமே காரணம். சில வருடங்களுக்கு முன்பு அஜ்மல் கசாப் வழக்கில் எழுந்த விவாதத்தை ஒட்டி முன்பு எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது.

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....