“அப்பா, ஹாரி போட்டர் புத்தகம் வேணும்”
“சரி”
“முதல் நாளே வேணும்”
“ம்ம்...பார்க்கலாம்”
“அப்ப கண்டிப்பா வாங்கித்தருவீங்களா?”
“சரி...வாங்கலாம்”
“எனக்கு ஒன்று, அக்காவுக்கு ஒன்று”
உரையாடலை தொடராமல் எனது மகளையே சிறிது நேரம் பார்த்தேன்...
-oOo-
“இந்த ரெளலிங் எப்படி உன்னை ஒரு முட்டாளாக்கி வச்சிருக்காங்க, பார்த்தியா? முதல் நாள் ஹாரி போட்டர் புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய். ஒரு வாரம் வெயிட் பண்ணினால், பிளாட்பாரத்தில் பைரேட்டட் எடிஷன் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். அல்லது பேப்பர் பேக் எடிஷன் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும். புத்தகத்தை வெளியிட இத்தனை நாள் ஆனதே, இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போனது என்று நினைத்துக் கொண்டால் ஐநூறு ரூபாய் மிச்சப்படுத்தலாம் என்று உன்னை யோசிக்க விடாமல் தடுப்பது அவர்களது வியாபார தந்திரம்”
“சரி, முதல் நாளே வாங்க வேண்டும் என்பது கூட அதிகபட்சமான ரசிகத்தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்ற எண்ணம், முட்டாள்தனமின்றி வேறென்ன?”
“வேறு எந்த பொருட்களுக்கும் இல்லாத ஒரு தன்மை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகத்தை, எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம், எத்தனை நபர்களும் படிக்கலாம். It can be consumed any number of time, without its
utility diminished. எனவேதான் எந்த புத்தகத்திற்கும் விலை நிர்ணயிக்க முடியாது. இப்படி அக்காவும் தங்கையும் ஒரே நாளில் ஒரே புத்தகத்தை வாங்குவோம் என்பது, புத்தகத்தின் இந்த மதிப்பையே குறைப்பதாகாதா?”
“அவர்களுக்கு உன்னைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால், குறைந்த விலைக்கு விற்கட்டுமே! தெரியுமா? இந்திய நாட்டில் பெரும்பான்மையோரின் ஒரு மாத சம்பளம் ஆயிரம் ரூபாயினை தொடுவதில்லை என்பது”
“இந்த வியாபாரிகள் உன்னை சிந்திக்க விடுவதில்லை. ஹாரி போட்டர் வெளியாகும் நாளில், ஏதோ உலகமே மாறி விடப்போகிறது என்ற மாயத்தோற்றத்தினை உருவாக்குகிறார்கள். இவர்களுக்காக இப்படியான கருத்தாக்கத்தை உன் போன்ற சிறுமிகளிடம் உருவாக்குவதற்கு பெரிதும் உதவுவது ஊடகங்கள்...”
“ஏதோ ஹாரி போட்டருக்காக இந்தியாவே ஏங்கிக் கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தினை, இவ்வாறு முழுப்பைத்தியம் பிடித்து அலையும் ஒரு சிறு கூட்டத்தினைக் காட்டி மற்றவர்களையும் முட்டாளாக்குகிறார்கள். முதல் நாளே வாங்கிப் படிக்காவிடில், போச்சு...என்ற நினைப்பினை உனக்கு ஊட்டி விடுகிறார்கள். அவ்வளவுதான்”
-oOo-
“ஒரு புத்திசாலி நுகர்வோர் எப்படியிருப்பான்? சந்தைக்கு வரும் ஒரு பொருளில் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை அறிந்து, பின்னரே வாங்க முடிவெடுப்பான். ஆனால், உன் போன்ற ரசிகர்கள்? பொருள் தரமோ, இல்லையோ...அது எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக வாங்க முடிவெடுக்கிறீர்கள்”
“இவ்வாறு உங்களை முடிவெடுக்க வைப்பதில்தால், இந்த வியாபாரிகள் வெற்றி பெறுகிறார்கள். அதற்க்காகத்தான் முதல் இரண்டு மூன்று நாட்களிலே விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்று இவர்கள் அலைகிறார்கள். ஏனென்றால் சரக்கு மோசமாக இருந்து, அந்த எண்ணம் வெளியே பரவி விட்டால்?”
“பார்த்துக் கொண்டேயிரு, இதோ ஹாரி போட்டர் சாகிறான் இல்லை பிழைக்கிறான், இதுதான் கதை, அடுத்த மாதம் வெளிவருகிறது என்று சரடு விட்டுக் கொண்டு ஒரு போதை நிலைக்கு உங்களைப் போன்றவர்களை கொண்டு சென்று விட்டார்கள். ஆனால், எழுதி வைத்துக் கொள். ஹாரி போட்டர் வெளியான மூன்று நாட்களில் உன்னைச் சுற்றியுள்ள உலகம் முன்பு போலவே சுழன்று கொண்டிருக்கும்”
“நீ புத்திசாலி வாசகியா இல்லையா? நீயே தீர்மானிக்கலாம்”
“சரி என்னமோ போங்க…ஒன்னாவது வாங்கித்தாங்க”