Showing posts with label Jeyamohan. Show all posts
Showing posts with label Jeyamohan. Show all posts

Sunday, 14 February 2016

ஜெயமோகனுக்கு கிடைக்காத பிரியாணி

சனிக்கிழமை காலை.

காப்பிக் கோப்பையை மெல்ல பக்கத்தில் வைத்து செய்தித்தாளைப் பிரித்ததும், தொலைபேசி அழைத்தது.

‘கடையநல்லூரிலிருந்து பேசுகிறேன்’

‘ஆங், பாய் இன்னைக்கு வரச் சொல்லியிருந்தேன் இல்ல. சரி, வாங்க’

‘சரி, நாங்க வந்துவிடுகிறோம். அப்புறம்…உங்களுக்கு சாப்பாடும் கொண்டு வருகிறோம்’

‘ஐயோ, அது எதுக்கு? அதுவும் சனிக்கிழமை ஜூனியர்ஸ் ஆபீஸில் எல்லோருக்கும் இங்க வீட்டில்தான் சமைப்பாங்க. அவங்க எல்லாமே இங்கதான் சாப்பிடுவாங்க’

‘சார், சமைக்க வேண்டாம்னு சொல்லுங்க. எல்லோருக்கும்தான் எடுத்துட்டு வருகிறோம்’

கடைக்குச் செல்ல தயாராக நின்று கொண்டிருந்த மனைவியிடம், ‘உனக்கு இன்னைக்கு ஃப்ரீ் டே! பிரியாணி வருது' என்றேன்.

சாப்பிடும் போது மனைவி கேட்டார், ‘நானா எங்கப்பா வந்து ரொம்ப நாளாச்சே!’

நானா மேலப்பாளையத்தில் உள்ள கல்வத் நாயகம் தைக்காவைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களுக்கும் முன், இதே மாதிரிதான், ‘சார் இந்த கிறிஸ்மஸுக்கு உங்களுக்கு பிரியாணி தைக்காவிலிருந்து அனுப்பணும்னு வாப்பா சொல்லியிருக்காங்க’ என்று ஆரம்பித்தார்.

‘இல்ல நானா, நம்ம வீட்டுல ஒவ்வொரு கிறிஸ்மஸுக்கும் எல்லா நண்பர்களையும் அழைப்போம். அதனால நிறைய பேர் இருப்பாங்க, வாணாம்’ என்றேன்.

‘நீங்க சும்மா இருங்க சார். ஒரு ஐநூறு பேர் வருவாங்களா?’

‘ஐயோ, அவ்வளவு இருக்காது நானா. ஒரு நூறுக்குள்ள வருவாங்க’

கிறிஸ்துமஸ் அன்று மேலப்பாளையத்திலிருந்தே சமையல் பொருட்கள், ஆட்கள் சகிதம் மதுரை வந்து பிரியாணி சமைத்து, அடுத்த நாளும் வைத்து சாப்பிட்டோம்.

என் மனைவிக்கும் நானா கொண்டு வந்த பிரியாணி நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அவராகவே, ‘நானா பிரியாணி ஹைதராபாத் பிரியாணி. இது நம்மூரு சீரக சம்பா பிரியாணி’ என்றார்.

நான் ஏதோ நினைப்பில் ‘நானா ஷிர்க். இவங்க தவ்ஹீத்’ என்று எனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டு வீட்டில் சமைத்த பாயாசத்துடன் கணணி முன் உட்கார்ந்தால்,
இந்து- முஸ்லீம் மதஒற்றுமை எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய் நெடுநாட்களாகின்றன. கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்?
என்று ஜெயமோகன் தனது தளத்தில் எழுதியதை மையப்படுத்தி முகநூல் கொதித்துக் கொண்டிருந்தது.

நான் மட்டும் ஒரு இறைமறுப்பாளனாக இல்லாமலிருந்தால், அந்த நேரத்தில் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்பியிருப்பேன்.

மதுரை
09/02/16

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....