தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் தாத்தா என்றால் தூத்துக்குடியில் மட்டும் கிறிஸ்மஸ் பப்பா. மதுரை பக்கங்களில் ‘பெருசு’ என்று விளிப்பதற்கு அருகில் தூத்துக்குடி பப்பா வரும் என்று வைத்துக் கொள்ளலாம்.
அது போல மற்ற ஊர்களில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்ற கேரல் இசைக்குழுவினருடன் நடந்து போனால், தூத்துக்குடியில் பெருவாரியான பப்பா’க்கள் மினி சரக்கு வேனில் போவார்கள்.
அதுவும் எப்படி, சும்மா சீரியல் லைட் ஜொலிக்க கோன் ஸ்பீக்கரில் சத்தமாக பாட்டு காதைக் கிழிக்கும். சுற்றிலும் மீனவ விடலைச் சிறுவர்கள் புடை சூழ பப்பாக்களை வண்டிகள் சுமந்து செல்லும். நான் சொல்லிக் கொண்டிருப்பது கால் நூற்றாண்டுக்கு முன்பு.
மழை பெய்தவுடன் ஆங்காங்கே தோன்றும் சிவப்பு பட்டுப்பூச்சிகளைப் போல கிறிஸ்துமஸ் சீசன் வந்தாலே, அதுவும் கிறிஸ்துமஸ் நாள் நெருங்க நெருங்க சாயங்காலமானால் போதும் கிறிஸ்துமஸ் பப்பாக்கள் வண்டி கட்டிக் கொண்டு ஆங்காங்கே ஸ்பீக்கர்களில் சத்தமாக பாட்டு சகிதம் கடை கடையாக வசூலில் இறங்குவார்கள்.
பப்பாக்களை கடைக்காரர்கள் எப்படி எதிர் கொள்வார்கள் என்று மோகன் சார் அழகாக சொல்லுவார்.
‘கடை முதலாளி இந்து என்றால் கடைக்குள் தாத்தா வந்த உடனே அப்படியே எழுந்து நின்று தாத்தாவைப் பார்த்து பக்தியுடன் ஒரு கும்பிடு. ஏன்னா, அவருக்கு கிறிஸ்மஸ் தாத்தா ஏதோ ஒரு கிறிஸ்டியன் சாமி. அப்புறம் கல்லாவிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அதே பக்தியுடன் தந்துட்டு கிறிஸ்மஸ் தாத்தா தர்ற பத்து பைசா சாக்லேட்டை ஏதோ பிரசாதம் மாதிரி இரண்டு கைல வாங்கிக்குவார்’
‘அடுத்து கிறிஸ்டியன் கடை. அவருக்கு கிறிஸ்மஸ் தாத்தாக்களை நல்லாத் தெரியும். தாத்தா வந்ததை அவர் கொஞ்சம் கூட கவனித்ததாக காட்டிக் கொள்ளமாட்டார். அவர் பாட்டுக்கு வியாபரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். தாத்தா கூட வந்தவன் எல்லாம் என்ன பண்றதுன்னு முழிப்பானுங்க. அப்புறம் மெல்ல தாத்தா கடைக்காரர் முன்னால நின்னு டான்ஸ் ஆடுவார். இப்பவும் கண்டுக்க மாட்டார். தாத்தா வேற வழியில்லாம கொஞ்ச நேரம் ஆடிட்டு பேசாம போயிருவார். இடையில ஒன்னு ரெண்டு கெட்ட வார்த்தை கூட்டதிலிருந்து வரும் அதுல வேணா மிஞ்சிப் போனா ஒரு பத்து பைசாவை கடைக்காரர் கொடுப்பார். அவ்வளவுதான்'
இணையத்தில் கிறிஸ்துமஸ்
அன்று இந்தப் படத்தைப் பார்த்த போது இந்த ஏடிம் மெஷின் முன்பிறவியில் அந்த கிறிஸ்டியன் கடைக்காரராக இருந்திருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன்…