‘நான் ஒரு வழக்குரைஞராவேன்’ என்பதை அறிந்திராத நேரம் அது. அப்பாவின் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்ததில் கண்ணில் பட்டது அந்தப் புத்தகம்.
‘மேரேஜ் அண்ட் மாரல்ஸ்’ என்ற தலைப்பை விட ‘பெட்ரண்ட் ரஸ்ஸல்’ என்ற பெயர் என்னை வாசிக்க வைத்தது.
புத்தகத்தில் படித்த ஒரு செய்தி பல வருடங்கள் கழித்து வழக்குரைஞரான பின்னர் நினைவுக்கு வந்தது.
அதாவது ‘இங்கிலாந்தில் மனநோய், உடலுறவுக்கு தகுதியின்மை, வேற்று நபருடனான உடலுறவு போன்ற கடினமான காரணங்களுக்காக மட்டுமே கிறிஸ்தவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படுவதால், திருமண பந்தத்திலிருந்து விடுபட விரும்பும் தம்பதிகள் மேற்கண்ட காரணங்களை பொய்யாக நீதிமன்றத்தில் கூறி விவாகரத்து பெற வேண்டிய நிலையில் இருப்பதாக’ கூறும் ரஸ்ஸல் ‘மதகட்டுப்பாடுகள் நேர்மையுடன் நடக்க விரும்புவர்களைக் கூட எப்படி பொய்யர்களாக மாற்றுகிறது’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.
நான் வழக்குரைஞராக பணியேற்ற காலகட்டத்தில் மேலை நாடுகளில் ‘திருமண பந்தத்தை முறிக்க விரும்பும் நபர் காரணம் ஏதும் கூறாமலேயே விவாகரத்து பெற உரிமை அளித்து’ சட்டங்கள் இயற்றப்பட்டு விட்டது என்றாலும், இங்கு கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை பெட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய நிலை நிலவி வந்தது.
இந்து திருமண சட்டத்தில் தம்பதிகள் இருவரும் இசைந்தால் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் (Divorce by mutual consent) உரிமை சட்டமாறுதல் மூலம் சேர்க்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்தவ சட்டத்தில் இல்லை. கிறிஸ்தவ மதத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள் கூட ‘சின்ன மெளன’த்துடன் மேற்கண்ட பொய்யான காரணங்களைக் கூறி விவாகரத்து பெற்று வந்தது எனக்கு ரஸ்ஸலை நினைவுபடுத்தியது.
ரஸ்ஸல் கூறியது போல இங்கும் சிலர், ‘மனநிலை பிறழ்ந்தவள்’ ‘உடலுறவுக்கு தகுதியில்லாதவன்’ என்ற நீதிமன்ற ஆணை மூலம் கிடைத்த பட்டங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் ஆனால் வாழ்நாட்கள் முழுவதும் சுமந்து திரிய வேண்டியிருந்தது.
பலத்த எதிர்ப்புகள், விவாதங்களைத் தாண்டி கிறிஸ்தவ சட்டத்திலும் தற்போது இருவரும் இசைந்து விவாகரத்து பெற்றுக் கொள்வது சாத்தியமாகி உள்ளது.
ஆயினும் இருவரில் யாராவது ஒருவர் விவாகரத்திற்கு சம்மதிக்காத பட்சத்தில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் நீதிமன்ற தாழ்வாரங்களில் தங்களின் இளமையையும் தாம்பத்ய வாழ்க்கையையும் தொலைக்க நேரிடுகிறது. ஏதாவது காரணத்தால் முப்பது வயதில் பிரிய நேரிடும் தம்பதிகளின் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று விவாகரத்து பெற்று அடுத்த திருமணத்தைப் பற்றி சிந்திப்பதற்குள் குறைந்தது ஐம்பது வயது பூர்த்தியடைந்து விடுகிறது.
எனவே ‘திருமண பந்தம் எவ்விதத்திலும் சேர்க்கவியலாத வண்ணம் முறிந்து போதல்’ (irretrievably broken down) என்பதையும் விவாக ரத்திற்கு காரணமாக சேர்ப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதை ஓரிரு தடவை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தற்பொழுது உள்ள நிலையில் விவாகரத்து பெறும் வரை காத்திருக்க இயலாதவர்கள் தங்கள் விரும்பிய நபரோடு திருமணமில்லா வாழ்க்கை (Long term relationship) வாழும் முறைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட முறையால் பிற்காலத்தில் எழும் சட்டச்சிக்கல்கள் பலரையும் பாதிக்கும் நிலை வருகையில் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கக் கோரும் சேர்க்கவியலா வண்ணம் முறிந்து போத’லும் விவாகரத்திற்கான காரணமாக சேர்க்கப்படும் நிலை உருவாகும்.
சரி, அப்படிப்பட்ட சட்ட மாறுதலுக்குப் பின்னர், சட்டத்தின் பயணத்தில் அடுத்த அடியாக எது இருக்க முடியும்?
வேறு என்ன, திருமண வாழ்க்கை என்பதே தம்பதிகளுக்கிடையேயான மன எழுச்சியைப் பொறுத்தது. ஏதோ ஒரு காரணத்தால் ஒருவருக்கு மற்றவர் மீதான ஒவ்வாமையை, நீதிமன்ற ஆணையா நீக்கப் போகிறது. எனவே, பிரிந்து செல்ல விரும்பும் நபர் மற்ற அனைத்து தனிநபர் சார்ந்த ஒப்பந்தங்களைப் ( Contract of personal service) போல திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளலாம் என்ற சட்ட மாற்றம்தான்.
அதாவது விவாகரத்து என்பது, வேண்டியவுடன் எவ்விதமாக காரணமும் கேட்காமல் நீதிமன்றம் அளித்து விடுவது.
நடைமுறைக்கு ஏற்றது, முற்போக்கானது (practical and progressive) என்ற காரணங்கள் கூறப்பட்டு அடுத்த இருபது ஆண்டுகளில் இது நிகழலாம்.
இப்போது?
ஒருவேளை பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், ‘விவாகரத்திற்கு இஸ்லாமியர்களின் ‘தலாக்’ போன்ற எளிதான சிக்கலில்லாத நடைமுறைதான் முற்போக்கானது’ என்று அனைத்து மதத்தினருக்கும் பொதுவான வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சாத்தியப்படலாம்.