‘கபாலி’ வார இறுதியில் பார்த்து விடலாம் என்றிருந்தது முடியாமல் போய் விட்டது. திரைப்படங்களைத் தேடியதில் ‘இது என்ன பிஎஃப்ஜி, கேள்விப்பட்டதில்லையே’ என்று பார்த்தால் ஸ்பீல்பெர்க் படம்!
இன்னும் ஒரு வாரம் ஸ்பீல்பெர்க் தாங்குவாரா இல்லை ரஜினி/ரஞ்சித் தியேட்டர்களில் தங்குவார்களா, என்று மனம் வேகமாக கணக்குப் போட்டாலும், ‘நாம் என்ன தீர்மானிப்பது; மகள்தான் தீர்மானிப்பதால் கபாலியை ஒரு வாரம் தள்ளி வைத்தாயிற்று.
தியேட்டர்களில் மற்றவர்கள் விழுந்து விழுந்து ரசித்தாலும், அதிரடியான காட்சிகளை எதிர்பார்த்துச் சென்ற என்னை ஸ்பீல்பெர்க் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்பீல்பெர்க்’கும் வயதாகி விட்டது என்பது ஒரு புறம் இருந்தாலும், எனக்கும் வயதாகி விட்டது என்பதுதான் காரணம்.
கபாலியை பார்க்க ஆர்வம் கொண்டது, ‘இரண்டாவது பாதியில் படம் மெதுவாகச் செல்கிறது’ என்று வைக்கப்பட்டுள்ள விமர்சனம்தான். ஏனெனில் மெதுவாக என்று கூட இல்லை மிக மிக மெதுவாகச் செல்லும் சில படங்கள் ‘நான் பார்த்து மறக்கவியலாத பத்துப் படங்க’ளில் இடம் பெற்று விடும். அந்த சில’விலும் முதல் படம் என்றால் ‘ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அனடோலியா’ என்ற மிக மிக
மிக மெதுவாக நகரும் துருக்கிய படம்தான்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. ஆயினும் இப்படத்தைப் பற்றி பேசுவதை தவிர்த்து வருவது தற்செயலானதல்ல; இந்தப் படம் தந்த அனுபவத்தை எனது எழுத்துகளில் கடத்த முடியுமா, என்ற நம்பிக்கயின்மைதான்.
அனடோலியா துருக்கியிலுள்ள மலைப்பிரதேசம். நடுநிசி நேரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் இரு கார்கள். ஒரிடத்தில் நிறுத்தி காரிலிருந்து சிலர் இறங்கி ஒருவனை அழைத்துச் செல்கிறார்கள். எதையோ தேடுகிறார்கள். மீண்டும் ஏறி சிறிது தூரம் சென்று தேடுகிறார்கள். கொஞ்ச நேரத்தில் நமக்கு புரிந்து விடுகிறது. காவலர்கள் கொலையாளி ஒருவனை அழைத்துச் சென்று கொலையுண்டவனின் பிணத்தைத் தேடுகிறார்கள் என்பது.
முக்கிய பாத்திரம் அரசு குற்றவியல் வழக்குரைஞர். இங்கிருப்பது போல அல்லாமல் துருக்கியில் பிராஸிகியூட்டர்தாம் புலனாய்வு அதிகாரி. ஒரு மருத்துவர். காவல் ஆய்வாளர், சில காவலர்கள். பிராஸிகியூட்டர் அஹிம்சாவாதி. கைதியை அடித்து விசாரிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். பல மணித் தேடலுக்குப் பிறகு அருகிலிருக்கும் கிராமம் ஒன்றிற்குச் செல்கிறார்கள். கிராம தலைவரின் வீட்டில் கைதி உட்பட அனைவரும் உணவருந்துகிறார்கள். பின்னர், ‘இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று காவலர்கள் கைதியை அங்கிருக்கும் ஷெட் ஒன்றிற்குள் அழைத்துச் சென்று கவனிக்க வேண்டிய முறையில் கவனித்ததில் துப்பு கிடைத்து பிணத்தை புதைத்த இடத்திற்கு செல்வதற்குள் விடிந்து விடுகிறது.
பிணம் தோண்டி எடுப்பதிலிருந்து ப்ராஸிகியூட்டர் பிண ஆய்வு (inquest) நடத்துவது பின்னர் மலைநகர மருத்துவமனையில் பிணத்தைச் சேர்த்து இறந்தவனின் மனைவி வந்து பிணத்தை அடையாளம் காட்டி பிணக்கூராய்வு (post mortem) செய்து முடித்து, தூரத்தில் இறந்தவனின் மனைவியும் மகனும் திரும்பிச் செல்வதை மருத்துவர் பார்ப்பதோடு எவ்வித பதட்டமும் அவசரமுமின்றி நிசம் போலவே நகரும் திரைக்கதை.
நான் இந்தப் படத்தை பார்க்க ஆரம்பித்த நேரம் கூட நடுநிசிதான். தனிமையில் எவ்வித புறவயமான இடைஞ்சல்களும் இன்றி பார்த்து முடித்தால், ஏதோ நானும் அவர்களோடு இரவு முழுவதும் அனடோலிய மலைப்பாதைகளில் பயணித்தது போலவே உணர்வு, எனது அனுபவம் நிசமா அல்லது நிழலா என்று குழப்பமாகவே பல நாட்களுக்கு நீடித்துக்
கொண்டிருந்தது.
படம் காட்சிகள் மூலமாகவே கதையை நம்முன் நகர்த்துகிறது என்றாலும், இரண்டாம் முறை பார்க்கையில் கதை மாந்தர்களிடம் நிகழும் சொற்ப உரையாடல்களின் மூலம் மேலும் இரண்டு கதைகள், சொல்லப்படுவதை அறிந்தேன்; அதுவும் அந்த பிராஸிகியூட்டரின் மனைவியின் மரணத்தைப் பற்றிய முடிச்சு மெல்ல மெல்ல அவிழ்வதைப் புரிந்து கொள்ள காட்சிகளிலில் இருந்து நமது கவனத்தை ஒரு விநாடி கூட தவிர்க்காத கவனம் தேவை. குறியீடு விரும்பிகளுக்கு தங்களது மூளையை கசக்கி சுகித்துக் கொள்ள பல காட்சிகள். இறந்தவனின் நுரையீரலில் இருக்கும் மண் தூசியை பிணக்கூராய்வு அறிக்கையில் குறிப்பிட வேண்டாம் என்று மருத்துவர் ஏன் முடிவெடுக்கிறார் என்பது வரை சில புதிர்களுக்கான விடைகளை நாமே கதையாக எழுதிக் கொள்ள வேண்டியதுதான்.
இரவு தேநீர் கொண்டு வரும் கிராமத் தலைவரின் சிறு பெண்ணின் முகம் விளக்கொளியில் கவிதை என்றால். அப்போது கவனிக்காதது போலிருந்து விட்டு மறுநாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிராஸிகியூட்டர் டாக்டரிடம், ‘அழகு’ என்று சிலாகிக்கும் காட்சியும் கவிதைதான்.
‘நூரி பில்கே சேலனின் அனடோலியா படத்தை வைத்து ரஜினியின் கபாலி’யை பார்க்கப் போகிறாயாக்கும்? என்று விசனப்படுபவர்களுக்கு ரஜினி நடித்த பாட்சா என்ற படுமொக்கை மசாலா படத்தையே முக்கால்வாசி பார்த்திருக்கிறேன் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.