Showing posts with label Election. Show all posts
Showing posts with label Election. Show all posts

Sunday, 4 February 2018

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி. ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைகிறது என்ற செய்தியில் திராவிட லெமூரிய பெருமிதங்களைச் சற்றுத் தள்ளி வைத்து தமிழர்கள் கவலைப்பட நிறைய இருக்கிறது.

இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சி அதுவும் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலேயே தோற்றிருக்கிறது என்பதை பலர் மறந்திருக்கலாம்.

ஆனந்த விகடனின் காலப்பெட்டகத்தை தோண்டினால் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் தேர்தல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயேவோட்போடுவதற்கு பிரஜைகளுக்கு அபேட்சகர்கள் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவருகிறது. என்றாலும் இடைத் தேர்தலில் மொத்த தொகுதியையும் முழுக் குத்தகைக்கு எடுப்பதும் சாத்தியம்தான் என்ற சூத்திரத்தை எந்தக் கணித மேதையோனானப்பட்டவருக்கு போட்டுக் கொடுக்க திருமங்கலம் ஃபார்முலாவிலிருந்து நாம் இன்னமும் விடுபட முடியவில்லை.

-oOo-

சட்டமன்ற தேர்தலை விடுங்கள், பார் கவுன்ஸில் தேர்தலுக்கு ஓட்டுக்கு ஒரு பட்டாயா ட்ரிப் அல்லது 30000 ரூபாய் செலவழிக்கிறார்கள் என்று அட்வகேட் ஜெனரல் கூறிய செய்தியில் கொஞ்சம் அதிர்ந்து, ‘புறநானூற்றுப் பரம்பரைகளின் உயர்வு நவிற்சிக்கும் ஒரு அளவில்லையா?’ என்று நினைத்தேன்.

ஆனால் பார் கவுன்ஸிலுக்கு செல்வதற்கு ஆயிரம் முதல் வாக்குகள் தேவைப்படும் என்கிறார்கள். முப்பதாயிரத்தோடு பெருக்கிப் பார்த்தால் சாத்தியப்படும் போலத் தோன்றியதில் அதிர்ச்சியின் வீரியம் கொஞ்சம் குறைந்தது.

-oOo-

கணிதம்தான் எதை எல்லாம் சாத்தியப்படுத்துகிறது. பிரபஞ்சத்தின் வடிவம் முதல் மலர்களின் இதழ்கள் வரை கணித சூத்திரத்திற்குள் அடக்கி விடலாம் என்று யு டியுப்பில் பார்த்த டாக்குமெண்டரியில் சுவராசியமாக விளக்கினார்கள்.

வளைந்து வளைந்து செல்லும் ஒரு நதியின் உண்மையான நீளத்தை அதன் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையிலான நேர்கோட்டிலான நீளத்தால் வகுத்தால் கிடைக்கும் பொதுவான விடை ஏறக்குறைய 3.1 அதாவது இங்கு எப்படித் தட்டசுவது என்று தெரியாமல் இப்போது நான் தவித்துக் கொண்டிருக்கும்பை’!

வைகை இந்த சூத்திரத்தில் அடங்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. கேட்டால் வைகையை நதி என்று யார் சொன்னது அது ஒரு பெரியநாச்சுரல் ஸ்ட்ராம் வாட்டர் ட்ரயினெஜ்என்கிறான் ஒரு ஆண்டி மதுரையன்.

-oOo-

ஆனால் பார் கவுன்ஸில் தேர்தலில் ஸ்டேக் ஹோல்டர்ஸ் ஒவ்வொருவரும் போட்டுக் கொண்டிருக்கும் கணக்குகளை எந்த ஒரு ஐன்ஸ்டைன் சூத்திரத்திற்குள்ளும் அடக்க முடியாது.

அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பவர் தேர்தலில் போட்டியிட முடியாது. சரி. அது என்ன அரசியல் கட்சியை ஆரம்பித்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூடுதலாக ஒன்று?

கட்சியை ஆரம்பித்தவர் அந்தக் கட்சியில் உறுப்பினராகக் கூடவா இருக்க மாட்டார்; என்று கேள்வி கேட்டால், புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொள்ள இயலாத மட்டு என்று அர்த்தம்.

சம்பந்தப்பட்டவர் உருவாக்கியதை ஒரு கட்சி என்று சொன்னால், கட்சியின் லெட்டர் பேடே நம்பாது.

கட்சியை கலைத்து விட்டு தேர்தலுக்கு மனு போட்டு விடுவாரோ என்ற பயத்தில் மற்ற விதி உருவாகியிருக்கலாம்.

முன்பு தில்லி எய்ம்ஸில் டாக்டர் வேணுகோபால் என்பவர் இயக்குஞராக இருந்தார். தமிழ் தெரிந்திருந்தால் அதில் அவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தைஇட ஒதுக்கீடு’. அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்ற ஆசையில் அமைச்சரான அன்புமணி ராமதாஸ் இயக்குஞர் தகுதிக்கான விதியில் ஒரு மாற்றம் கொண்டு வந்தார். உச்ச நீதிமன்றத்தில் வேணுகோபாலுக்காக அருண் ஜெட்லி வைத்த வாதம், ‘இப்படி தனி ஒரு நபரை மட்டும் பாதிக்கும் விதி முறையற்றதுஎன்பதாகும்.

தனி மனித விதி தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பை (2008) 5 SCC 1ல் காணலாம்.

-oOo-

காலையில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கையில்நினைவோ ஒரு பறவைஅமேசான் அலெக்ஸாவிலிருந்து உருகி வழிந்து எழுத்துக்களை மறைத்தது.

சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் ஸ்ரீதேவி எல்லாம் பள்ளி நாட்களில் நம்மிடம் உறவாடி பின் எப்போதோ செத்துப் போய் விட்ட உறவினர்களைப் போல தூரத்து நினைவிலிரு்ப்பதாகத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்று பேப்பரை மடித்து வைத்து நினைத்துக் கொண்டிருந்தேன்

மதுரை
04/02/18

Sunday, 10 April 2016

காலப் பெட்டகம் (ஆனந்த விகடன்)

கடந்த ஞாயிறு ‘தி ஹிந்து’வில் ‘எ கே ப்ளான் தட் லெட் டு அண்ணாதுரை’ஸ் டிஃபீட்’ என்ற தலைப்பிலான செய்தியை பலர் கவனிக்கத் தவறியிருக்கலாம்.

1957ம் ஆண்டு திமுக முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று அண்ணாதுரை, கருணாநிதி உட்பட பதினைந்து பேர் சட்டசபைக்கு செல்கிறார்கள். பதினைந்து பேர்தான். ஆனால் அவர்கள் கொடுத்த கடுமையான குடைச்சலில் கடுப்பான காமராஜர் அடுத்த தேர்தலில் அந்தப் பதினைந்து பேரும் மீண்டும் சட்டசபைக்கு வந்து விடக்கூடாது என்று வகுத்த வியூகம்தான் கே ப்ளான் எனப்படுவது.

போக்குவரத்து முதலாளி, தொழிலதிபர் என்று பணபலம் மிகுந்த வேட்பாளர்கள் அந்த பதினைந்து பேர்களை எதிர்த்து நிற்க வைக்கப்பட்டதோடு, அந்த தொகுதிகளில் காங்கிரஸ் முழுக்கவனத்தோடு பிரச்சாரம் செய்தது.

பலன், கருணாநிதி தவிர மற்றவரக்ள், அண்ணாதுரை உட்பட தோல்வியடைகிறார்கள்.  காமராஜ் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது பலர் அறிவோம். அண்ணா தோற்கடிக்கப்பட்டது அவ்வளவாக அறியப்படாதது.

தேர்தலில் பணம் விளையாடுவது எல்லாம் இப்போதுதான்; அதெல்லாம் அந்தக் காலத்தில் இல்லை என்று இன்னமும் சாதிப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

‘ஓட் கொடுக்கும் சுதந்திரத்தைப் பூண்டிலகும் பிரஜைகளே! தற்காலம் தங்களிடம் வந்து அபேட்சகர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் செய்யும் ஜால்ஜூல்களுக்கும், பணம், பலகாரம்…………..முதலியவற்றிற்கும் மகிழ்ந்து உங்கள் ஓட்டுரிமைச் சீரைத் தீய வழியில் செலுத்தாதீர்கள்’

இப்படி வாக்காளர்களை வேண்டுவது ஆனந்த விகடன், வருடம் 1926.

‘தேர்தல் என்றால் என்ன? பொய் சொல்லுதலில் தேர்தல், லஞ்சங் கொடுத்தலில் தேர்தல், தேனொழுகப் பேசுவதில் தேர்தல், செய்ய முடியாத காரியங்களையெல்லாம் செய்கிறேனென்று வாக்குறுதி கொடுப்பதில் தேர்தல் முதலிய எல்லாம் அந்தந்த விஷயம் சம்பந்தப்பட்டவரையில் தேர்தல்தான். இவ்வளவு விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்தலிலும் வெற்றி பெறுவார்களென்பதில் சந்தேகமில்லை’

‘தேர்தல் நாடகத்தில் கோர ரஸம் என்றொரு அம்சமுண்டு.............................ஒருவரையே இரண்டு மூன்று தடவைகள் வோட் செய்யச் சொல்வதும்.......................................வாக்காளர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டு இப்பால் இறந்து போனவருக்குப் பதிலாக எவரை விட்டேனும் வோட் செய்யச் சொல்வதும் சில திருவிளையாடல்களாகும்’

1930ம் ஆண்டு வெளிவந்த ஆனந்த விகடனிலிருந்து.

1926 பின் நான்கு வருடங்கள் கழிந்து 1930ம் ஆண்டு என்று எவ்வித வித்தியாசமுமின்றி தொடர்ந்த பிரச்சார உத்திகள் இன்று வரை மாறவில்லை. கள்ள ஓட்டு தவிர...

ஆனந்த விகடன் தொடங்கப்பட்ட 1926ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலான இதழ்களிலிருந்து சுவையான பகுதிகளை தொகுத்து ‘காலப் பெட்டகம்’ என்ற பெயரில் 200 ரூபாய்க்கு 368 பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

முன்பு எல்லாம் பள்ளி நண்பர்கள் வீட்டுக்கு அதுவும் கலியாண வயதில் பெண்கள் இருக்கும் வீட்டுக்குப் போனால் கண்டிப்பாக பைண்டு செய்யப்பட்ட தொடர்கதைகள் இருக்கும். எனக்கு கதையைப் படிப்பதை விட அங்கங்கு கிடைக்கும் துணுக்குகளைப் படிக்கப் பிடிக்கும்.

அந்த அனுபவத்தை திகட்டத் திகட்டத் தருகிறது ஆனந்த விகடனின் ‘காலப் பெட்டகம்’

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....