Tuesday 31 May 2016

அந்தமான், இந்தியாவின் பாவம்...

அந்தமானுக்கு சி(சு)ற்றுலா சென்றவன் போர்ட் ப்ளேரிலிருந்த மானுடவியல் அருங்காட்சியகத்திற்குச் சென்றிருக்கக் கூடாது. அப்படியே போயிருந்தாலும்தி ஜரவாஸ் ஆஃப் அந்தமான்என்ற புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடாது. வாங்கியிருந்தாலும் மதுரை திரும்பும் வழியில் கிடைத்த நேரத்தில் அதைப் படித்திருக்கக் கூடாது.

பணிச்சுமையை தளர்த்த சுற்றுலா போன இடத்திலிருந்து பெரும் சுமை ஒன்றை சுமந்து கொண்டு வந்ததைப் போல் இருக்கிறது, இந்தப் புத்தகத்தால் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்ட குற்ற உணர்வு.

இப்படி வைத்துக் கொள்ளுங்கள். எங்கிருந்தோ வந்த ஏலியன்ஸ் உலகை ஆக்கிரமிக்கிறார்கள். ‘நமக்குத்தான் அவ்வளவு பெரிய உலகம் இருக்கிறதே. நம்மை விட இரண்டாயிரம் ஆண்டுகள் அறிவிற் குறைந்த மனிதர்கள் வசிக்கும் இப்பூமி நமக்குத் தேவையாஎன்ற கேள்வி அவர்களிடம் எழவில்லை. மாறாகநம் குடியிருப்பை எதிர்க்கும் மனிதர்களை கொன்று தீர்ப்போம். மற்றவர்கள் ஒரு பக்கமாக வசித்துக் கொள்ளட்டும்என்றுதான் நினைக்கிறாரகள்.

அவர்களும் நம்முடன் இணைந்து வசிப்பதற்கு முதல்படியாக அவர்களுக்கு தனி முகாம்களை அமைப்போம்என்று சிலர் கருதினாலும்இணைத்த பின்னர் நம்முடன் சரிக்குச் சரியாக நின்று போட்டி போட அவர்களுக்கு இன்னமும் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கலாம்என்பது ஒரு பிரச்னையாக எழுகிறது. இறுதியில் ஒன்றும் பிடிபடாமல், ‘சரி அப்படியே விட்டு விடுவோம்என்று முடிவாகிறது.

அவர்களுக்கு ஒவ்வாத நம் உணவுப் பழக்கமும், நோய்களும் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை அழித்து விடும்என்று எச்சரிக்கிறார்கள் சிலர்.

வேறு வழியில்லை. நாம் இங்கு வந்து பலகாலமாகி விட்டது.. இந்தப் பூமியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை. இனி நாமாக கொல்லப் போவதில்லை. அவர்களாக கொஞ்சம் கொஞ்சமாக செத்தால் நாம் என்ன செய்ய முடியும்? அதற்காக காத்திருப்போம்என்று மனதில் எழும் குற்ற உணர்வை வெளியில் சொல்ல யாருக்கும் தைரியமில்லை.

இந்தியர்களாகிய நாமும் காத்திருக்கிறோம்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமானின் தெற்குப் பகுதியில் வசித்து வரும் ஜரவாஸ் இனத்தவரின் கடைசி மனிதன் எப்போது சாகப் போகிறான் என்று.

கற்கால இனத்தவர் என்று வர்ணிக்கப்பட்டிருந்ததை வைத்து எவ்வித நாகரீக உணர்வும் அற்றவர்கள் என்றுதான் அந்தமான் பழங்குடிகளைப் பற்றிய எனது எண்ணம் இருந்தது.

ஆனால், அவர்களிடையே மருத்துவராக சேவை செய்து அவர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் ரத்தன் சந்திர கர் என்ற மருத்துவர் ஜரவாஸ்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தொகுத்தவற்ற ஏதோ கதை போல சுவராசியமாக உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் என் எண்ணங்களை சிதற அடித்து இதைப் படிக்காமிலிருந்தால் நன்றாயிருந்திருக்குமோ என்றிருக்கிறது.

ஜரவாஸ்களுக்கு நாடில்லை. மதமில்லை. கடவுளுமில்லை முக்கியமாக ஜான் லென்னன் கனவு கண்டபடி உடமையும் (possession) இல்லாதிருந்தது. ஆனால் காதல் இருக்கிறது. திருமணம் இருக்கிறது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அறம் இருக்கிறது. பகலில் வேட்டையும் மாலையில் விளையாட்டும், பாடலும் ஆடலுமான கொண்டாட்டம் இருக்கிறது.

இறந்து போனால் சுவர்க்கம் இருக்கிறது. அந்த சுவர்க்கத்தில் ஜரவாஸ் மட்டுமல்ல அவர்களால் கொல்லப்படும் மிருகங்களும் கூடவே 'நாகரீக' மனிதர்களுக்கும் இடம் கொடுக்கும் பெருந்தன்மை இருக்கிறது.

இப்போது நம்மவர்கள்நாகரீககைக்கடிகாரத்தையும் உபகரணங்களையும் பரிசளிக்க முதன் முறையாகஉடமைஎன்ற எண்ணம் தோன்றி மற்றவர்கள் காட்டில் குடியமர்த்தப்பட்டுள்ள நம்மவர்களின் வீடுகளில் கூட்டமாக வந்து திருடுவதை தடுப்பதில் பிரச்னையாகிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேக வைக்கப்பட்ட அரிசியாலும் தேங்காயாலும், வாழைப்பழங்களாலும் இதே பிரச்னையாகி அவர்களை திருடர்களாக்கியிருக்கிறோம்.

எவ்வித தொலைநோக்குமின்றி பிரிட்டிஷார் குற்றவாளிகளை குடியமர்த்தும்பீனல் காலனியாக அந்தமானை பயன்படுத்தினர். சுதந்திரத்திற்குப் பிறகு குற்றவாளிகளை மீளக்குடியமர்த்தி அந்தமானை வெறுமே ராணுவ தளமாக மட்டும் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால், நாமோ பர்மா, வங்களாம், இலங்கை என்று அகதிகளையும் குடியமர்த்தி, அதற்கு மேலும் இந்தியர்களை பஞ்சம் பிழைக்கவும் அனுமதித்து காவலர்களுடன் (Bush police) குடியேறியவர்களும் இணைந்து ஜரவாஸ்களை வேட்டையாடி அவர்களின் குடியிருப்புகளை அழித்திருக்கிறோம். அவர்களும் பதிலுக்கு காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நம்மவர்கள் எவரையும் கொன்று இறுதியில் திருடும் போது காயமடைந்து நம்மால் காப்பாற்றப்பட்ட சிறுவன் ஒருவன் மூலமாக 1996 முதல் சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது.

ஜரவாஸ் வசிக்கும் காட்டுப் பகுதியும் சரி. இன்னமும் நம்மை கொஞ்சமும் நெருங்க விடாது செண்டினலீஸ் என்பவர்கள் வசிக்கும் செண்டினலீஸ் தீவும் சரி இந்தியாவின் எந்த சட்டமும் அரசு இயந்திரமும் செல்லுபடியாகாத பகுதிகள். அவர்களைப் பொறுத்தவரை அப்பகுதிகள் இந்தியாவும் இல்லை. அவர்களும் இந்தியர்கள் இல்லை.

எனவேதான் பல்லாயிரம் ஆண்டுகளாக அந்தமானில் பிழைத்திருந்து வெறும் இருநூறே ஆண்டுகளில் ஆங்கிலேயரக்ளாலும் தொடர்ந்து நம்மாலும் அழிக்கப்பட்ட அந்தமானீஸ் நடத்தியபேட்டில் ஆஃப் அபர்தீன்என்று வர்ணிக்கப்படும் சண்டை இந்தியாவின் சுதந்திரப் போராக நம் வரலாற்றில் எழுதப்படவில்லை.

ஜரவாஸ் மொழி நமக்கு இன்னமும் முழுவதும் புரிபடவில்லை. புரிந்திருந்தால் இனிமையான குரலில் அவர்கள் பாடும் பாடலுக்கிடையேஆயிரம் உண்டிங்கு ஜாதி. இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதிஎன்ற வரிகளும் இருப்பது தெரிய வந்திருக்கலாம்.


Saturday 21 May 2016

திருநெல்வேலி சீமைச் சரித்திரம்

வாஜ்பாய் அரசு அணுகுண்டு வெடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்த ஒரே விஷயம், மருத நாயகம் படத்தை கமல்ஹாசன் எடுக்க முடியாமல் போனதுதான்.

வீரபாண்டிய கட்டபொம்மன், திரைப்படம் என்ற வகைக்கு நல்ல படம்தான். என்றாலும் இன்னொரு வீரபாண்டிய கட்டபொம்மன் உருவாவதில் எனக்கு உவப்பில்லை. உண்மையில் கட்டபொம்முவின் வாழ்க்கையை விட பன்மடங்கு சாகசமும், வஞ்சகத்தால் வீழ்ந்த அதீத சோகமுமாக முழு திரைக்கதைக்கான அனைத்து அம்சங்களும் பொருந்தியது அவனது தம்பி ஊமைத்துரை மற்றும் யூசுப்கான்(மருதநாயகம்), மருது சகோதரர்கள் ஆகியோரது வாழ்க்கை.

ஆனால் கட்டபொம்மன் திரைப்படம் நம் எண்ணங்களை ஆக்கிரமித்ததில் மற்றவர்களின் சாகசங்களை அறிந்து கொள்ளாமலேயே இருந்து விட்டோம்.

கிஸ்தி கொடுக்காமல் ஆங்கிலேயருக்கு டிமிக்கி கொடுப்பதில் கட்டபொம்முவோடு சேர்ந்து ஆங்கிலேயர்களின் கோபத்துக்கு முதலில் ஆளாகினாலும், பின்னர் அந்த துஷ்ட புத்தியை நீக்கிவிட்டு ஸுபுத்தி கொண்டு அவர்களுக்கு உதவியதால் சலுகைகளைப் பெற்று நீடித்த எட்டயபுர ராஜாவின் அவையில் பணியாற்றியவர் எஸ்.குருகுஹதாசப் பிள்ளையவர்கள். அவர் 1931ம் ஆண்டில் எழுதிய திருநெல்வேலி சீமைச் சரித்திரம் என்ற நூல், காவ்யா வெளியீடு. நூலகராக இருக்கும் நண்பர் அளித்தார்.

பிஷப் கால்ட்வெல்லின் திருநெல்வேலிச் சரித்திரம் உட்பட பல நூல்கள்/ஆவணங்களின் அடிப்படையில் பாளையக்காரர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும், குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கும் இடையேயான உறவுகளும் உரசல்களும் வேகவேகமாக கூறிச் செல்லப்பட்டாலும் இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி சண்டைகளையும் கட்டபொம்மன் மீதான விசாரணையையும் விரிவாக விவரிப்பதோடு முடிகிறது.

பிரிட்டிஷ் ராஜவிஸ்வாசம் மிகுந்த முப்பதுகளின் தமிழை சகிக்கப் பழகிக் கொண்டால், கிடைக்கும் அரிய பல தகவல்கள் இதையெல்லாம் போய் சொல்ல யாராவது உடனடியாக கிடைக்க மாட்டார்களா? என்று இருக்கும்.

முதலில் திருநெல்வேலி ஜில்லா என்றழைக்கப்பட்டது இராமநாதபுரம், மதுரை ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்ததாம். பின்னர் மதுரையை உள்ளடக்கி இராமநாதபுரம் ஜில்லா உருவாக்கப்பட்டு அடுத்தபடியாகத்தான் இராமநாதபுரத்திலிருந்து மதுரை ஜில்லா தனியே பிரிக்கப்பட்டதாம்.

என்னதான் நவாபுகளும், விஜயநகரபேரரசும் ஆட்சி நடத்தினாலும் மதுரைக்குத் தெற்கே அரசு அதிகாரம் முழுமையாக செலுத்த முடியாதலால் சீர் குலைந்து போன சட்டம் ஒழுங்கை சீர்படுத்த கிபி 1500 வாக்கில் பாளையங்கள் ஏற்ப்படுத்தப்பட்டாலும், பாஞ்சாலங்குறிச்சி 1700களின் தொடக்கத்தில் ஏறக்குறைய அதாகவே உருவாக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி சண்டைகளுக்குப் பின்னர் ஆங்கிலேயர்களால் வரைபடத்திலிருந்தே அழிக்கப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் காரணமும், கட்டபொம்மு வம்சத்தவர்கள் பாண்டிய என்ற பட்டத்தை தங்களுக்காக்கியதும் சுவராசியம்.

பொதுவாக தாய்நாடு, நாட்டுப் பற்று என்பதெல்லாம் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. பாளைய சைனியங்கள் ஏறக்குறைய கூலிப்படைகள் (mercenaries) போல சம்பளத்திற்கு கூப்பிட்ட இடங்களில் சண்டையிட்டாலும் ஐபிஎல் டீம் அபிமானம் போல பாளையங்கள் மீதும் சண்டைத் தலைவர்களான (war lords) பாளையக்காரர்கள் மீது பற்றுதலைக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சண்டையில் காயமடைந்து கிடக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரனை தூக்கிச் செல்ல வருகிறாள் அவனது தாய். அவனோ அருகில் கிடக்கும் ஊமைத்துரையை தூக்கிச் செல்லுமாறு வேண்டுகிறான். அவளும் மகனை விடுத்து ஊமைத்துரையை தூக்கிச் சென்று காப்பாற்றியதால் எட்டயபுரத்தார்கள் கையில் அவன் சிக்காமல் அடுத்த போரினையும் நடத்தியது உட்பட தங்களுக்காக போரிட்ட ஆங்கிலேய மற்றும் 'நேட்டிவ்' வீரர்களின் சாகசங்களையும் பதிவு செய்துள்ளனர்.

இன்று ஆங்கிலேயர்கள் பொது எதிரியாக அறியப்படுவதால், எட்டயபுரத்தார் துரோகத்துக்கு உதாரணமாகக் கொள்ளப்பட்டாலும், பிடிபட்ட எட்டயபுர வீரன் ஒருவனை ஊமைத்துரையை அஞ்சலி செய்யுமாறு வாய்ச்சியாடல் என்ற சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டாலும் எட்டனைத் தொழுதகை கட்டனைத் தொழாது என்று மறுத்து உயிர்விட்டானாம்.

ஆங்கிலேயர்கள் என்னதான் கட்டபொம்மு, ஊமைத்துரை, யூசுப்கான், மருது சகோதரர்கள் ஆகியோரை கொன்றொழித்தாலும், அவர்களது தீரத்தையும், அடங்கிப் போகாத குணத்தையும் வியப்புடன் மேலிடத்துக்கு அனுப்பிய ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் கூட எதிரியை வியக்கும் இவ்விதமான பதிவுகள் ஏற்ப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.

சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக பாஞ்சாலங்குறிச்சி மீது போர் தொடுத்து கட்டபொம்மனையும் முக்கியமாக அவனது துர்மந்திரி சுப்பிரமணியபிள்ளையும் தூக்கிலிட்டது அதற்கு முன்னதான விசாரணை ஆகியவற்றைப் படித்தால் அப்படியே சதாம் மீதான ஈராக் யுத்தம், தொடர்ந்த விசாரணை மற்றும் தண்டனை நினைவுக்கு வரும்.

தூக்கிலிடப்படுவதற்காக கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட குற்றம், நான் முன்பு நினைத்தது போல இராமநாதபுரத்தில் கலெக்டர் ஜாக்ஸனை பேட்டி கண்டபின் தப்பியோடும் பொழுது ஆங்கிலேய வீரனை கொன்றது அல்ல. மாறாக கலெக்டரின் சம்மன்களை தவிர்த்ததும், கிஸ்தி கொடுக்காமல் நாள் கடத்தியதும்தான். முதல் விசாராணை மட்டுமே. கட்டபொம்மன் அவை எவற்றையும் மறுக்கவில்லை என்பதால் குறுக்கு விசாராணை எதுவும் நடைபெற்றதாக குறிப்பு இல்லை. அப்படி ஒரு நடைமுறை இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. முடிவு அவனுக்குத் தெரிந்திருந்தது என்பதால், என்ன ஐயா சொல்லக் கிடக்கிறது. சும்மா இருங்கள் என்று அடக்கி விட்டானாம்.

பிடிபட்டு தூக்கிலடப்பட்ட பொழுது கட்டபொம்மனின் வயது முப்பது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே எட்டயபுரத்தாரை கவிழ் கண் பார்வையி'லும் சிவகிரியாரை சீறிய பார்வையிலும் அடிக்கடி நோக்கிக் கொண்டும், தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகையில் இருபுறமும் நிற்க வைக்கப்பட்டிருந்த மற்ற பாளையக்காரர்களை பூ கிடக்கிறார்கள் என்ற அலட்சியத்துடன் கட்டபொம்மன் பார்த்துக் கொண்டே சென்றதையும் எட்டயபுர அரண்மனையின் விசுவாசமிக்க ஊழியர் ஒருவர் மறுபதிவு செய்வதுதான் இப்புத்தகத்தின் சிறப்பு.

ஸ்ரீவைகுண்டம் அணை வேலை நடக்கையில் கிடைத்த புதையலை பங்கு வைத்தவர்களைப் பிடித்து ஓரளவுக்கு கைப்பற்றியதில் கிடைத்த கிபி 1200ம் காலத்திய அரேபிய நாணயங்கள், தமிழை கற்கத் தடுமாறிய பிரான்ஸிஸ் சேவியர் மற்றும் பிற மிஷனரிகள் என்று இன்னும் சொல்ல பல விஷயங்கள் இப்புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

ஆனால் பாரஸ்ட் கார்டாக இருந்த வாஞ்சி என்ற பாதகன் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றது சுருக்கமாக கூறப்படினும், அதற்கான காரணத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை.


இப்போது என் கவலை எல்லாம், இந்தப் புத்தகத்தை நூலகத்துக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....