‘தமிழ்நாடு போலீஸ் போர்ஸ்’. அரசு முத்திரையுடன் இயங்கும் முகநூல். காவல்துறை பெருமைகளைப் பேச உருவாக்கப்பட்டுள்ள சுவர் என்றாலும், அங்கு எழுதப்படுபவை சமயங்களில் ‘பகீர்’ என்றிருக்கிறது.
‘இதை தடுக்க ஒரே வழி காவல் துறை சார்பில் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை என்கவுண்டர் மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். அதற்கு நான் மேலே சொன்ன அமைப்புகள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்போதும் நிலைநாட்டபடும்’
சக ஊழியர் கொல்லப்படுகையில் எவருக்கும் எழும் இயல்பான கோபம்தான் இந்த வரிகள் என்றாலும், எந்த சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப்படுவதற்காக என்கவுண்டர்தான் தண்டனை என்கிறார்களோ, அதே சட்டத்தில்தான் அந்த வகை தண்டனை அதாவது எக்ஸிகியூஷன் ‘திட்டமிட்ட கொலை’க் குற்றம் என்று கூறப்படுகிறது.
காவல்துறைக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை, ஏன் வாய் திறக்கவில்லை என்று கேள்விகளாக அடுக்கப்படுகிறது. ஆய்வாளர் பெரியபாண்டிக்கு தமிழகத்தின் அனைத்து ஊடகங்களிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசு மரியாதை குறைவில்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை, கல்வி உதவி என ஒரு அரசால் அளிக்கப்படக்கூடிய உயர்ந்தபட்ச உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவைகளுக்குப் பின்னரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் காவல்துறை ஊழியர்கள் அறியாத சில அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் திரைப்பட நாயகர்களாக பேசப்படுவதில்லை.
கடந்த பத்தாண்டுகளில் பணி நிமித்தம் இறந்த காவல்துறை ஊழியர்களை விட அதிகமான எண்ணிக்கையில் துப்புரவுத் தொழிலாளிகள் இறந்திருக்கிறார்கள். இன்றும் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களுக்கு நீர் தரும் அணைக்கட்டுகள் எதுவும் உயிர்ச்சேதமின்றி கட்டப்பட்டதில்லை. அது அனலோ அல்லது புனலோ தொழிலாளர் தொடங்கி பொறியாளர்கள் வரை உயிர்ப்பலி கேட்காமல் எந்த ஒரு மின்சார நிலையமும் எழுப்பப்பட்டதில்லை.
டெங்கு எய்ட்ஸ் எதுவானாலும் சரி, உறவினர்களே ஒதுங்கிச் சென்றாலும், ஒதுங்கிப் போக வழியின்றி அவர்களோடிருக்கும் அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்தான் ஆபத்து இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஆபத்து.
கண்ணுக்குள் திகிலூட்டும் ஆபத்து என்றால் அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து எட்டு மணி நேரம் பயணித்தால் தெரியும்.
‘தினமும் காலையில் ஃபோன் பண்ணி பிள்ளைங்க ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்களான்னு கேப்பாரு. அன்னைக்கு ஃபோன் வரல’ பெரியபாண்டி மனைவியின் கண்ணீலிருந்த அதே இயலாமைதான் ‘சொத்துக்கூட்டவா போனாவ, சோத்துக்கு போனாங்க’ என்று நேற்று தொலைக்காட்சியில் கேட்ட நீரோடி கிராம மீனவப் பெண்ணின் கதறலிலும் இருந்தது.
சோத்துக்குப் போனவன் இன்னமும் புதைக்கப்படக் கூட இல்லை….
மதுரை
17/12/17