Showing posts with label Docufilm. Show all posts
Showing posts with label Docufilm. Show all posts

Friday, 11 September 2015

தி ட்ரூ காஸ்ட் 2015

கிறிஸ்துமஸ் புதுவருடம் என்று இரு பண்டிகைகள் தொடர்ந்து வந்தாலும் புதுத் துணி என்னவோ பள்ளிப்பிராயம் முடியும் வரை ஒன்றுதான். ஏதோ ஒன்றிரண்டு தடவை புதுவருடத்திற்கு என்று தனியாக மேலும் ஒரு சட்டை கிடைத்திருக்கலாம்.

இப்போது சட்டை வேண்டுமென்று வீட்டில் கேட்டால், பையில் குறைந்தது நாலு சட்டை கூடவே இரண்டு டி-சர்டுகளும் இருக்கிறது. மூன்று வாங்கினால் இரண்டு இலவசமாம்.

இவ்வாறு புதிய புதிய டிசைன்களை மேலும் மேலும் குறைந்த விலைக்கு வேகவேகமாக விற்பதன் வணிக உத்தியை ‘பாஸ்ட் பேஷன்’ என்று அழைக்கிறார்கள். ஏறக்குறைய கடந்த இருபது ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் இப்பொருளாதாரத்தின் பின்னணியில் இருக்கும் வேதனைகளை பல்வேறு ஊடகவியலாளர்களும் சமூகவியலாளர்களும் இணைந்து ‘ட்ரூ காஸ்ட்’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கியிருக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் ‘ஐஐடியில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவது, மாண்டியில் கூலி கேட்டுப் போராடி மாண்ட கட்டிடத் தொழிலாளர்கள்தாம்’ என்று நான் கூறிய அதே கருத்துதான்.

தேவைக்கு ஒரு சட்டை வாங்கிய நாம் இன்று நான்கு சட்டை வாங்குவதற்குக் காரணம், வசதி கூடியுள்ளது என்பதை விட விலை குறைந்துள்ளது என்பதுதான் உண்மை என்கிறது படம்.

‘நீங்கள் அணியும் உடைகளில் எங்களது ரத்தம் இருக்கிறது’ என்று பங்களா தேச பெண் தொழிலாளி கூறுவது இதைப் படிக்கும் உங்களுக்கு வெற்றுக் கோஷமாகக் தோன்றாலாம். ஆனால் இப்படத்தைப் பார்க்கும் எவரையும் நாம் அணியும் நவீன ஆடைகள்தாம் இந்திய விவசாயிகளின் தற்கொலைகளிலிருந்து, பருத்தி விவசாயத்தை ஏதோ தொழிற்சாலை உற்பத்தி போல பூச்சிக் கொல்லிகளாலும், ரசாயண உரங்களாலும் மாற்றுவதன் விளைவாக அமெரிக்க விவசாயிக்கு ஏற்ப்பட்ட புற்று நோய் வரை காரணம் என்பதை எவ்வித கேள்வியும் கேட்க முடியாமல் நம்ப வைக்கிறார் இயக்குஞர்.

என் ஜி ஓக்களிடமும், வரையற்ற கார்ப்பரேட் எதிர்ப்பாளர்களிடமும் இதுதான் பிரச்னை. அவர்களது வாதத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று பட்டால் கூட அவர்கள் பேசி முடிக்கும் வரை தலையாட்டுவதைத் தவிர நமக்கு வேறு வழியிருக்காது.

அதுவும் இப்படத்தில் தோன்றும் நம் வந்தனா ஷிவா?

தேர்ந்த நடனக் கலைஞரைப் போல பேசும் கருத்திற்கு இசைந்து அவரது கண்களும் கைகளும் அபிநயம் பிடிக்கும் அழகு அவரது வாதத்திற்கு பலமடங்கு பலம் கொடுக்கிறது. அவர் தேர்ந்தெடுக்கும் ஆங்கில வார்த்தைகளும் வாக்கியங்களில் அவற்றை பொருத்தமாக அவர் கோர்ப்பதும் அழகுதான்.

எவ்வளவு முயன்றும், படத்தைப் பற்றிய எனது இந்த அறிமுகம் வறட்டுத்தனமாகவே செல்கிறது. ஆனால், படம் அப்படியல்ல. ஏறக்குறைய ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் பார்க்கும் அதே சுவராசியத்துடன் பார்க்கும்படி காட்சிகளும், இசையும், ஒளிப்பதிவும் அப்புறம் ஏதோ சொல்வார்களே ‘மேக்கிங்’ அதுவும் இருக்கிறது.

‘அமெரிக்காவில் எதையும் விமர்சிக்கலாம். ஆனால் முதலாளித்துவத்தை முடியாது’ என்று மார்க்ஸீய பொருளாதாரவாதியான ரிச்சர்ட் உல்ஃப் படத்தில் கூறினாலும், அமெரிக்க சந்தைப் பொருளாதாரம் வங்க தேச தொழிலாளர்களையும் இந்திய விவசாயிகளையும் சுரண்டுவதை விமர்சிக்கும் படம் தயாரிக்கப்படுகிறது.

இங்கு பார்க்கக் கூட இயலுவதில்லை.

Friday, 20 March 2015

காயிதே மில்லத் ஆவணப்படம்

சென்னை புதுக்கல்லூரி. 

மாணவர்களிடையே ஒருவர் சென்று புகைப்படம் ஒன்றினைக் காட்டி இது யார் என்று வினவுகிறார். முகமது அலி ஜின்னாவிலிருந்து, நாகூர் அனிபா வரை ஆளாளுக்கு ஒரு பெயரைக் கூறுகின்றனர். 

அடுத்தக் காட்சியில் இஸ்லாமியக் கல்விக் கழகம் பாளையங்கோட்டையில் நடத்தும் அனாதை இல்ல சிறார்கள், தொடர்ந்து வேறு ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும் கல்வி நிறுவனம் என அனைத்து இடங்களிலும் கூறப்பட்ட அதே மாதிரியான பதில்களால் எழுந்த கேலி உணர்வு தொடர்ந்த காட்சிகளில், ‘அந்தப் படத்திலிருப்பவர் ‘கண்ணியத்துக்குறிய காயிதே மில்லத்’ என்று கலைஞர் கருணாநிதியின் பேச்சினூடாகவோ அல்லது ஏதோ திராவிட இயக்க கூட்ட பேச்சுகளிலோ கேட்டதைத் தவிர வேறு எதுவும் எனக்கும் அவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்ற புரிதலில் வெட்கமாக மாறியது.

விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய சமுதாய அரசியல் தலைவராக விளங்கிய தமிழர் ஒருவரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் நான் இருந்திருப்பதைப் போல பலர் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஒரு முறை கூட பிரச்சாரத்துக்கு செல்லாமல் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியிலிருந்து மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு தேர்தெடுக்கப்பட்டவரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக விளங்கியவருமாகிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை அறிமுகப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றினை, ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் இயக்கி தயாரித்துள்ளார்.

அவரது உழைப்பில் உருவான சென்னை புதுக்கல்லூரி மற்றும் தமிழகமெங்கும் இருக்கும் பல இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அவரைப் பற்றி தெரிந்திராமல் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. ஏனெனில், அவர் பேசிய பேச்சின் ஒலிப்பதிவோ அவரைப்பற்றிய ஒளிப்பதிவோ ஏதும் நம்மிடையே இல்லை. ஆயினும் அவரைப் பற்றி மற்ற அரசியல் தலைவர்களைப் பேச வைத்து திறமையான எடிட்டிங் மூலம் அலுப்புத் தட்டாத வண்ணம் இயக்கியுள்ளார் விடுதலை சிறுத்தை கட்சியைத் சேர்ந்த ஷாநவாஸ்.

ஆனால், வழக்காமாக தனது ஏற்ற இறக்கமான தமிழ் உச்சரிப்பால் நம்மை கொள்ளை கொள்ளும், அப்துல் ஹமீது’வின் பின்னணிக் குரலில் சற்றுத் தடுமாறியிருக்கிறார்.

காயிதே மில்லத் அவர்களின் சிறப்புகள் பல கூறப்பட்டாலும், அவர் நெல்லை பேட்டை’யில் பிறந்தவர் என்பதும், இந்திய அரசியல் நிர்ணய சபையில் பழமையான மொழியையே நமது நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்ட போது அதன் உறுப்பினராயிருந்த காயிதே மில்லத் அவர்கள் ‘இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ் பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

என்னவிருந்தாலும் திருநெல்வேலிக்காரரல்லவா?

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....