Friday 20 March 2015

காயிதே மில்லத் ஆவணப்படம்

சென்னை புதுக்கல்லூரி. 

மாணவர்களிடையே ஒருவர் சென்று புகைப்படம் ஒன்றினைக் காட்டி இது யார் என்று வினவுகிறார். முகமது அலி ஜின்னாவிலிருந்து, நாகூர் அனிபா வரை ஆளாளுக்கு ஒரு பெயரைக் கூறுகின்றனர். 

அடுத்தக் காட்சியில் இஸ்லாமியக் கல்விக் கழகம் பாளையங்கோட்டையில் நடத்தும் அனாதை இல்ல சிறார்கள், தொடர்ந்து வேறு ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும் கல்வி நிறுவனம் என அனைத்து இடங்களிலும் கூறப்பட்ட அதே மாதிரியான பதில்களால் எழுந்த கேலி உணர்வு தொடர்ந்த காட்சிகளில், ‘அந்தப் படத்திலிருப்பவர் ‘கண்ணியத்துக்குறிய காயிதே மில்லத்’ என்று கலைஞர் கருணாநிதியின் பேச்சினூடாகவோ அல்லது ஏதோ திராவிட இயக்க கூட்ட பேச்சுகளிலோ கேட்டதைத் தவிர வேறு எதுவும் எனக்கும் அவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்ற புரிதலில் வெட்கமாக மாறியது.

விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய சமுதாய அரசியல் தலைவராக விளங்கிய தமிழர் ஒருவரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் நான் இருந்திருப்பதைப் போல பலர் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஒரு முறை கூட பிரச்சாரத்துக்கு செல்லாமல் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியிலிருந்து மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு தேர்தெடுக்கப்பட்டவரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக விளங்கியவருமாகிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை அறிமுகப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றினை, ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் இயக்கி தயாரித்துள்ளார்.

அவரது உழைப்பில் உருவான சென்னை புதுக்கல்லூரி மற்றும் தமிழகமெங்கும் இருக்கும் பல இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அவரைப் பற்றி தெரிந்திராமல் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. ஏனெனில், அவர் பேசிய பேச்சின் ஒலிப்பதிவோ அவரைப்பற்றிய ஒளிப்பதிவோ ஏதும் நம்மிடையே இல்லை. ஆயினும் அவரைப் பற்றி மற்ற அரசியல் தலைவர்களைப் பேச வைத்து திறமையான எடிட்டிங் மூலம் அலுப்புத் தட்டாத வண்ணம் இயக்கியுள்ளார் விடுதலை சிறுத்தை கட்சியைத் சேர்ந்த ஷாநவாஸ்.

ஆனால், வழக்காமாக தனது ஏற்ற இறக்கமான தமிழ் உச்சரிப்பால் நம்மை கொள்ளை கொள்ளும், அப்துல் ஹமீது’வின் பின்னணிக் குரலில் சற்றுத் தடுமாறியிருக்கிறார்.

காயிதே மில்லத் அவர்களின் சிறப்புகள் பல கூறப்பட்டாலும், அவர் நெல்லை பேட்டை’யில் பிறந்தவர் என்பதும், இந்திய அரசியல் நிர்ணய சபையில் பழமையான மொழியையே நமது நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்ட போது அதன் உறுப்பினராயிருந்த காயிதே மில்லத் அவர்கள் ‘இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ் பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

என்னவிருந்தாலும் திருநெல்வேலிக்காரரல்லவா?

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....