Friday 31 July 2015

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா?



ராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன் மற்றும் சில குற்றவாளிகள் தங்களது விடுதலைக்காகவும், தண்டனைக்குறைப்புக்காகவும் தமிழக அரசின் ‘கருணை’யை மட்டுமே எதிர் நோக்கியுள்ள நிலையில், அவர்களது, மற்றும் அவர்கள் சார்பில் களமிறங்கியுள்ளவர்களது நம்பிக்கைக்கு குறுக்கே நிற்கப்போவதாக கூறப்படுவது, சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சக்கீரா கொலை வழக்கில் நமது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு!

முதலில், கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதில் நீதிபதிகளுக்குள்ள மனவோட்டத்தினை அறிய, அந்த வழக்கின் தன்மையினை தெரிந்து கொள்வது அவசியம்.

-oOo-

சக்கீரா (Shakereh) மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவரின் பேத்தி. பல கோடி சொத்துக்களின் அதிபதி. முக்கியமாக, பெங்களூரு ரிச்மாண்டு சாலையில் இருந்த 38,000 சதுர அடியில் மற்றும் வெல்லிங்டன் வீதியில் 40,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பங்களாக்களை கூறலாம். சக்கீராவின் கணவர் இந்திய அயலுறவுத்துறை அதிகாரி (IFS). நான்கு பெண் குழந்தைகள்.

1983ம் வருடம் ராம்பூர் நவாபின் விருந்தாளியாக சென்றிருந்த பொழுது, சக்கீராவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நபர்தான் முரளி மனோகர் மிசுரா என்ற சுவாமி சாரதானந்தா (Swamy Shraddananda). சக்கீராவுக்கு தனது நிலங்களை நிர்வகிப்பதில் பிரச்னை இருக்கவே அதில் உதவி புரிவதற்காக பெங்களூருவுக்கு வந்த சாரதானந்தா, ரிச்மாண்டு சாலை பங்காளிவிலேயே குடும்ப உறுப்பினர் போல தங்கினார்.

ஈரான் நாட்டு தூதராக நியமிக்கப்பட்ட சக்கீராவின் கணவர், குடும்பத்தை பெங்களூருவிலேயே விட்டுச் செல்லும் நிலை ஏற்ப்பட்டது. தனது மாந்திரீக சக்தியினால் சக்கீராவுக்கு ஆண் வாரிசினை உருவாக்க முடியும் என்று அவரை நம்ப வைத்த சாரதானந்தா, பின்னர் சக்கீராவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

விரைவிலேயே சக்கீராவின் திருமணம் விவாகரத்தில் முடிய சாரதானந்தாவை மணமுடித்தார். மகள்கள் அனைவரும் வெளிநாட்டிலேயே தங்கி விட, சக்கீராவும் சாரதானந்தாவும் மட்டும் பெங்களூரிலேயே வசித்தனர்.

1991ம் வருடம் மே மாத இறுதியிலிருந்து சக்கீராவின் மகள் சாபா (Sabah), சாரதானந்தாவை, தனது அம்மா எங்கே என்று வினவும் பொழுதெல்லாம், அவர் ஐதராபாத் சென்றுள்ளதாகவும், கட்ச்சுவிற்கு (Kutch) வைர வியாபாரி ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளதாகவும் சாக்கு கூறிவந்தார். பின்னர் வருமான வரிப் பிரச்னைகளுக்கு பயந்து வெளி வராமல் இருப்பதாகவும் கூறினார்.

வெறுப்படைந்த சாபா, பெங்களூருவுக்கு நேரில் வந்தால் சக்கீராவை காணவில்லை. இந்த முறை சாரதானந்தா, சக்கீரா பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக கூறினார். அமெரிக்க மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டால், அவ்வாறு யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை!

சாரதானந்தா தளரவில்லை. சக்கீரா லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறினார். ஆனால், சாரதானந்தாவை மும்பையில் சந்திக்கச் சென்ற சாபா சாரதானந்தாவின் அறையில் சக்கீராவின் கடவுச் சீட்டைப் பார்த்து அதிர்ந்தார்.

உடனடியாக சாபா, பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர்களது விசாரணையில், சாரதானந்தா சக்கீராவின் சொத்திற்கு ஆசைப்பட்டு சக்கீராவை கொன்று அவரது பங்களாவிலுள்ள படுக்கையறையில் புதைத்து வைத்தது தெரிய வந்தது.

பெங்களூரு நகர அமர்வு நீதிமன்றம் (Sessions Court) திட்டமிட்ட கொலைக்காக, சாரதானந்தாவுக்கு மரண தண்டனை அளித்தது. அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை அளிக்கையில் குற்றவியல் நடைமுறை சட்டம் (Criminal Procedure Code) பிரிவு 366ன் உயர்நீதிமன்றம் தண்டனையினை உறுதி செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் சாரதனந்தா மேல் முறையீடு தாக்கல் செய்தார். சாரதானந்தா குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஒரு நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை எனவும் மற்ற நீதிபதி ஆயுள் காலம் முழுவதும் வெளி வர இயலாத ஆயுள் தண்டனை எனவும் கூறினர்.

எனவே, தண்டனை குறித்து மட்டும் தீர்ப்பு கூற வழக்கானது மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

அவ்வாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் அளித்த தீர்ப்புதான், தற்பொழுது பிரச்சினையாக எழப்போகிறது.

-oOo-

சக்கீராவின் கொலை, மனதைத் தைப்பதாக இருந்தாலும் இந்தியா முழுவதும் அவ்வப்பொழுது நிகழக்கூடிய சாதாரண ஒரு குற்றம்தான். சக்கீரா கொலையில் திவான் என்ற இடத்தில் தாசில்தார் அலுவலக எழுத்தர் எனவும், பெங்களூரு என்ற இடத்தில் மதுரை எனவும், தூதர் என்ற இடத்தில் வங்கி காசாளர் எனவும், கோடி என்ற இடத்தில் ஆயிரம் எனவும், லண்டன் என்ற இடத்தில் சென்னை என்றும் நிரப்பினால், தண்டனைக்காக நீதிபதிகள் இவ்வளவு தூரம் குழம்பியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

எனவேதான், இதனினும் கொடூர கொலைகாரர்கள் ஆயுள்தண்டனையோடு தப்பிக்கையில், சாரதானந்தாவுக்கு மரணம்தான் தண்டனை என்ற முடிவுக்கு நீதிமன்றங்கள் வந்திருக்கலாம்.

கொலை செய்யப்படுபவர்களின் தகுதியும் இங்கு பல சமயங்களில் தண்டனையினை, குறிப்பாக மரண தண்டனையினன நிர்ணயித்திருக்கின்றன என்ற எனது சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் மற்றும் ஒரு வழக்கு சக்கீராவின் கொலை.

மேலும், அடுத்தவரின் மனைவியை அபகரிக்கும் ஒரு செயல், கொலைக்கான தண்டனையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இங்கு கருதப்படுகிறது. நானாவதி, குறைந்த தண்டனையோடு தப்பித்ததற்கும், சாரதானந்தா தூக்கு மேடை அருகே சென்று திரும்பியதற்கும், இதுவே முக்கிய காரணி!

-oOo-

சக்கீராவின் வழக்கினைப் படிக்கும் எவருக்கும், சாரதானந்தாவின் மீது கோபம் எழலாம். ஆயினும், அவரை தூக்கிலிடுவது தவறான ஒரு முன்னுதாரணமாகி விடுமோ, என்ற குற்றவுணர்வு தண்டனையை பற்றி தீர்மானிக்க வேண்டிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எழுந்திருக்கலாம்.

சரி, தூக்கு இல்லை என்றால்...ஆயுள் தண்டனை. ஆனால் ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளில் வெளியே வந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது. சாரதானந்தா ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தாகி விட்டது. அவ்வளவுதானா தண்டனை?

இது என்ன, மரண தண்டனை இல்லையென்றால் 14 ஆண்டுகள்தானா?. இரண்டு வகை தண்டனைக்களுக்குமான இடைவெளி இவ்வளவு தூரமா, என்ற நீதிபதிகளின் மனவோட்டத்தின் வெளிப்பாடுதான், சாரதானந்தாவை அவரது ஆயுட்காலம் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற தண்டனை.

இதற்காக, சாதாரண ஆயுள் தண்டனை, மரணதண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனை என்று ஆயுள் தண்டனையை, சட்டத்தில் அவ்வாறு இல்லையெனினும் இரண்டு வகையாக பிரிக்கும் முயற்சியில் நீதிபதிகள் ஈடுபட்டு பல்வேறு முன் தீர்ப்புகளை ஆராய்ந்து, எவ்வாறு சாரதானந்தாவை ஆயுள் வரை சிறையில் வைத்திருக்க இயலும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளனர்.

ஆனால், தங்களது தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டப்படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியும் சாத்தியமானதுதானா என்றும் நீதிபதிகள் முழுமையாக ஆராயவில்லை என்றே நினைக்கிறேன்.

தங்களது தீர்ப்பினை அவ்வாறு செய்ல்படுத்துவது சாத்தியமா? அதன் பின் விளைவுகள் என்ன என்று ஆராயாமல் விட்டது கூட முக்கியமல்ல...அப்படியே ஒருவரை ஆயுள் முடியும் வரை, வெளியே வருவதற்கு எவ்வித வாய்ப்பின்றியும் சிறையில் வைத்திருப்பதன் கொடூரத்தைப் பற்றி கொஞ்சம் கூட  தங்கள் தீர்ப்பில் கவலைப்படாமல் போனதுதான், அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயம்.

தன் வாழ்நாள் முழுவதும் இனி இந்த நான்கு சுவர்களுக்குள்தான் என்ற நினைப்பில் ஒருவன் வாழ்வது, மரண தண்டனையை விட கருணை மிக்கதா என்ன?

இந்தச் சூழ்நிலையில் நளினிக்கு காட்டப்பட்டது உண்மையிலேயே கருணையா என்ற கேள்வி எழுகிறது.

-oOo-

ஆயுள் தண்டனைக்கான அர்த்தம், குற்றவாளியின் ஆயுள் வரைதான் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 45 ஆயுள் என்பது ஒரு மனிதனின் ஆயுளைக் குறிக்கும் என்று விளக்கமளிப்பதிலிருந்து ஆயுள் தண்டனை என்பதற்கு வேறு எவ்வித விளக்கமும் கூற இயலாது.

இதையே மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே தன்னை 14 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்க வேண்டுமென்று கோரிய பொழுது உச்ச நீதிமன்றம் கூறியது. (கோபால் விநாயக் கோட்சே எதிர் மகாராஷ்டிர அரசு AIR 1961 SC 400). ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையில் தள்ளுபடி (remit) அளிப்பதற்கு அரசிடம் உள்ள அதிகாரத்தினை ஒத்துக் கொண்டே அந்த தீர்ப்பினை அளித்தது.

கோபால் கோட்சே அடுத்த ஆண்டே அரசால் விடுதலை செய்யப்பட்டார் என்பது வேறு கதை!

ஆனால் தற்பொழுது சக்கீராவின் வழக்கில், கோபால் கோட்சே வழக்கின் தீர்ப்பினைப் பற்றி ஆய்ந்த நீதிபதிகள், சில வகையான ஆயுள் தண்டனைகளுக்கு இவ்வாறு அரசு தண்டனையிலிருந்து தள்ளுபடி செய்யும் அதிகாரத்தினை செலுத்தவிடாமல் உண்மையிலேயே ஆயுள் முழுமைக்கும் என்று மாற்ற வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளுக்கு அவ்வாறு தள்ளுபடி வழங்குதல் கூடாது என்கின்றனர்.

மரணதண்டனைக்கு மாற்றான ஆயுள் தண்டனை என்று ஒன்று குற்றவியல் சட்டங்களில் இல்லை எனலாம். இந்த தீர்ப்பின் ஆரம்பத்திலேயே, நீதிபதிகள் மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த இயலுமா என்பதுதான் இந்த வழக்கில் உள்ள் பிரச்னை என்றே ஆரம்பிக்கின்றனர்.

தவறு இங்கேயே ஆரம்பிக்கிறது. ஒரு குற்றத்திற்கு மரண தண்டனை என்றால் மரண தண்டனைதான். மரண தண்டனை வழங்க வேண்டிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்க இயலும் என்றால், அது அனைத்து மரண தண்டனை கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இல்லை அம்னெச்டி இண்டர்நேசனலின் ‘மரணதண்டனன என்பது இங்கு ஒரு லாட்டரி’ என்ற குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றமே ஒத்துக் கொள்வது போல ஆகிவிடும்!

கீழமை நீதிமன்றத்தில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டிய குற்றத்திற்கு மரண தண்டனை தவறுதலாக வழங்கப்பட்டு அதனை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றுவது ஏதோ கருணைப் பிச்சையல்ல. மாறாக அது குற்றவாளியின் உரிமை!

கீழமை நீதிமன்றம் செய்த தவறுக்காக, குற்றாவாளிக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற ஆயுள் தண்டனையிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது என்பது தர்க்க ரீதியில் மட்டுமல்ல, தார்மீக ரீதியிலும் சரியான ஒரு செயலல்ல என்பதே எனது கருத்து.

-oOo-

நீதிபதிகள், இவ்வாறு தள்ளுபடி இல்லாமல் ஒருவரை ஆயுள் முழுமைக்கும் சிறையில் வைத்திருப்பதற்காக கூறும் மற்றொரு கருத்தும் கவனிக்கத்தகுந்தது. அதாவது, ஒரு குற்றத்தின் தன்மையானது மரண தண்டனை வழங்குவதற்கு சற்று குறைவாக இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில் 14 ஆண்டுகள் என்பது மிகக் குறைவான தண்டனையாக கருதும் நீதிபதி, மரண தண்டனை அளிக்க தூண்டப்படலாம். எனவே இவ்வாறு 14 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளியினை சிறையில் வைத்திருக்கும் வண்ணம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இங்கு நீதிபதிகள் கவனிக்க தவறுவது, ‘மக்களாட்சி அமைப்பில், நாகரீகமான குற்றவியல் முறையில், நீதிமன்றத்தின் பணியானது குற்றவாளி செய்த குற்றத்திற்கு அதிகபட்சம் இந்த அளவிற்கு தண்டிக்கலாம் என்று நிர்வாகத்திற்கு அனுமதி வழங்குவதோடு நின்று விடும்’ என்பதே!

குற்றத்திற்கு தண்டனை வழங்குவது என்பது, சமூகத்தின் ஒழுங்கினை குற்றச்செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கே!. அதற்காக குற்றவாளியை எவ்வளவு தூரம் தண்டிக்கலாம் என்பது மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ள நிர்வாகம் மற்றும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களின் மனக்கவலை.

எனவே நீதிமன்றங்கள் இவ்வளவு தூரத்திற்கு நீங்கள் தண்டித்துக் கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில்தான் குற்றவியல் நடைமுறைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

-oOo-

சில குற்றவாளிகளை நீதிமன்றம் அனுமதித்த அதிகபட்ச அளவில் தண்டிக்கவும், சில குற்றவாளிகளை விடுதலை செய்வதிலும் அரசிற்கு உள்ள தேவைகளை உணர்ந்தே, நமது அரசியலமைப்புச் சட்டத்திலேயே குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநருக்கும் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. (பிரிவு 72 மற்றும் பிரிவு 161).

இந்த அதிகாரமானது, அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளதால், இவற்றை உச்ச நீதிமன்றம் பறிக்க இயலாது. ஷக்கீரா தீர்ப்பிலும் நீதிபதிகள் ‘இந்த தீர்ப்பானது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பற்றியதல்ல (Here it needs to be made absolutely clear that this judgment is not concerned at all with the Constitutional provisions that are in the nature of the State's sovereign power) என்று 56ம் பத்தியில் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.

எனவே அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி நளினியை அல்லது சராதானந்தாவை விடுதலை செய்ய குடியரசுத் தலைவரோ அல்லது மாநில ஆளுநரோ முடிவெடுக்கையில் உச்ச நீதிமன்றத்தினால் அதனை தடுக்க இயலாது.

அரசியலமைப்பு சட்டம் சரி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அரசிற்கு உள்ள அதிகாரத்தினை இந்த தீர்ப்பின் மூலம் பறிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி...

-oOo-

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு (pardon) அளிப்பதற்கு குடியரசுத்தலைவர் மற்றும் மாநில அளுநர்களுக்கு உள்ள அதிகாரம் தவிர, அரசாங்கத்திற்கு தண்டனையைக் குறைக்கும் (commute) அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தினை பயன்படுத்தி, அரசு நினைக்கையில் நளினிக்கோ அல்லது சராதானந்தாவுக்கோ தண்டனனயை குறைக்கலாம். இங்கு நாம் விவாதிக்கும் தீர்ப்பு, அரசின் இந்த அதிகாரத்தின் குறுக்கேயும் நிற்க முடியாது. ஏனெனில், நீதிபதிகள் அரசின் இந்த அதிகாரத்தினைப் பற்றி தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டாலும், அரசு இந்தப் பிரிவு அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தண்டனையை குறைக்க இயலாது என்றும் கூறவில்லை.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இதே அதிகாரம் இந்திய தண்டனன சட்டம் பிரிவு 54 மற்றும் 55ன் கீழும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரிவு 433Aன் படி ஒருவரின் மரணதண்டனையானது ஆயுள் தண்டனையாக இந்தப் பிரிவின்படி குறைக்கப்பட்டால், அவர் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறையில் கழிக்காமல் விடுதலை பெற முடியாது. இந்த 14 ஆண்டு கட்டுப்பாடே ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் என்ற தவறான எண்ணம் சாதாரண மக்களில் மனதில் தோன்ற காரணம்.

-oOo-

குற்றவாளிக்கு மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு தவிர தண்டனை தள்ளுபடி (remission) என்பதும் உள்ளது. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432ன் படி குற்றவாளியானவர் தனது தண்டனையினை தள்ளுபடி செய்ய கோரலாம். இந்த தள்ளுபடியானது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மட்டுமல்லாமல், சிறை விதிகள், மற்றும் பிற விதிமுறைகளின்படியும் கோரலாம்.

இவ்விதமான தள்ளுபடிகளை கணக்கிட ஒருவரது சிறைக்காலம் அறுதியிட்டாலே இயலும். உதாரணமாக, ஒருவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனை என்றால், ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என அவருக்கு விதிகளின்படி கிடைக்கும் தள்ளுபடியினை கணக்கிட்டு விடலாம்.

ஆனால் ஆயுள்தண்டனை என்பதில் தள்ளுபடி அளித்தாலும், ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகவே இருக்கும். கணிதத்தில் ‘இன்பினிட்டி’ (infinity) போல. இதைத்தான் நீதிபதிகள் சுட்டிக்காட்டி ஆயுள் தண்டனைக்கு தள்ளுபடி என்பது கிடையாது என்று குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக, அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு காலம் என்று கருதி ஒரு உத்தரவு பிறப்பித்து பின்னர் 20 ஆண்டுகளுக்கான தள்ளுபடிகளை கணக்கிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு சுமார் 6 காலம் அதிகபட்சம் தள்ளுபடி கிடைக்கும். இவ்வாறான முறையில்தான் அரசு ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை 14 ஆண்டுகளில் விடுதலை செய்கிறது. அதனால்தான் கோட்சே, நளினி போன்றவர்கள் தாங்கள் 14 ஆண்டு காலம் சிறையில் கழித்து விட்டதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.

இந்த முறையினையே உச்ச நீதிமன்றம் சராதானந்தாவின் வழக்கில் தவறு என்று கூறுகிறது. அதாவது அரசு எவ்விதம் இவ்வாறு ஆயுள் தண்டனை என்பது 20 வருடம் என கருதுகிறது என்ற கேள்வியினை எழுப்பி அதற்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்கிறது.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 57ல் தண்டனையை வகுக்கும் தேவை நேர்ந்தால் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் என கணக்கிடலாம் என்று உள்ளது. உதாரணமாக பிரிவு 511ன் படி ஏதாவது குற்றத்தினை செய்ய முயன்றால் அந்த குற்றத்திற்கான தண்டனையில் பாதி தரலாம் என்று உள்ளது. அதே போல ஒருவர் குற்றம் செய்ய தூண்டி (abet) பின் அந்த குற்றம் செய்யப்படாமல் போனாலும், தூண்டியவர் அந்தக் குற்றத்திற்கான தண்டனையில் கால் பகுதி தரலாம் என்று பிரிவு 116 கூறுகிறது. இம்மாதிரி காரணங்களுக்காகவே 20 வருட கணக்கே தவிர ஆயுள் தண்டனை 20 ஆண்டு என்று எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தக் கருத்து சரியானதே!

ஆயினும் நீதிமன்றம் கவனிக்கத் தவறிய ஒரு விடயம், இன்றுள்ள நிலையிலேயே, அரசு குற்றவாளியின் ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு கால தண்டனையாக கருதி (deem) அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தாலொழிய குற்றவாளி மேலும் தள்ளுபடி பெற்று வெளிவர இயலாது. எனவே அவ்வாறு இல்லாமல் அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டுகால தண்டனையாக குறைத்தால், தள்ளுபடி சாத்தியமாகலாம். இரண்டு உத்தரவிற்கும் அரசு மனது வைக்க வேண்டும்.

இதன் விளைவு, அவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஒருவர் அரசை நிர்பந்திக்க முடியாது. அரசு மனது வைத்தால்தன் இவை இயலும். எனவே ஆயுள் தண்டனை பெற்றவர் மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ பெறுவது அவரது உரிமையல்ல என்பது போலவே தோன்றுகிறது.

அவ்வாறு என்றால், அடிப்படையில் சராதனந்தாவின் தீர்ப்பு புதிதாக எதனையும் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும். சாகும் வரை வெளியில் விடக்கூடாது என்ற கட்டளையும் தேவையில்லாத ஒன்று. ஏனெனில், குற்றவாளியை விடுதலை செய்ய அரசு நினைக்கையில் தனது மன்னிக்கும் அல்லது தண்டனைக்குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து விடலாம்.

அதே போல வழக்கில் நீதிபதிகள் முக்கிய பிரச்னையாக எழுப்பிய மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையை சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த முடியுமா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகி விடுகிறது. எந்த ஒரு ஆயுள் தண்டனைக்குமே, நீதிபதிகளின் கருத்துப்படி தள்ளுபடி வழங்க இயலாது என்பதால், அனைத்து ஆயுள் தண்டனைகளும் அரசு மனது வைக்கும் வரை ஆயுள் வரைக்குமே!

-oOo-

ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டு காலம் என்பது அல்ல என்றாலும், பல முறை உச்ச நீதிமன்றம் குற்றவாளியை குறைந்தது 20 ஆண்டு காலமாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை தங்களது தீர்ப்புக்கு ஆதரவாக நீதிபதிகள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று கூறிய பிறகு, நீதிமன்றம் சாகும் வரை என்பதோ அல்லது 20 ஆண்டு காலம் என்பதோ, அரசுக்கு ஒரு அறிவுறுத்தல் என்றே எடுத்துக் கொள்ள இயலும்.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சாகும் வரை விடுவிக்கக் கூடாது என்று இரு வழக்குகளில் கூறியுள்ள தீர்ப்புகளும் சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் என்று நீதிபதிகள் மனதளவில் தீர்மானித்து விட்ட நிலையில், அவர் சாகும் வரை சிறையிலேயே இருக்க தயாராக இருக்கிறார் என்ற வாதம் வைக்கப்பட அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஏறக்குறைய ஒரு சமரசத்தீர்வு போல அவருக்கு எவ்வித தள்ளுபடியோ அல்லது தண்டனைக் குறைப்போ தரக்கூடாது என்று தீர்ப்புக் கூறியுள்ளது (சுபாஷ் சந்தர் எதிர் கிருஷ்ணன் லால் (2001) 4 SCC 458). தள்ளுபடி சரி தண்டனைக்குறைப்பு பற்றி நீதிமன்றம் கூறியுள்ளது எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. ஏனெனில், தண்டனைக்குறைப்பு அளிக்க அரசு குற்றவாளியின் அனுமதியை பெற வேண்டியதில்லை. எனவே அவர் தனக்கு தண்டனைக் குறைப்பு தேவையில்லை என்று கூறியுள்ள போதிலும் அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தலாம். இன்னும் ஒரு பத்தாண்டுகள் கழித்து கிருஷ்னலால் தீராத நோயினால் பெரும் அவதிப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவரை விடுதலை செய்வதே மனிதாபிமானம் என்று அரசு நினைக்கையில் நீதிமன்ற தீர்ப்பு அதற்கு எவ்வளவு தூரம் தடையாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆயினும் இவ்வாறான உத்தரவு மனித உரிமைக்கு எதிரானதா என்ற கேள்வி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஜெயவந்த் தத்தராய சூர்யராவ் எதிர் மகராச்டிரிய அரசு (2001) 10 SCC 109 என்ற வழக்கிலும் இவ்வாறு ஒரு தண்டனை வழங்கப்பட, தூக்கிலிருந்து தப்பித்தாயிற்று என்று அப்பொழுது தண்டனையினை ஏற்றுக் கொண்ட சுபாஷ்சிங் தாக்கூர் தற்பொழுது அந்த தண்டனை தவறு என்று நீதிப்பேராணை (writ) மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் மறு ஆய்வு செய்யப்படும்.

-oOo-

ஆனால் இங்கு முக்கியமான வித்தியாசம், நளினிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கவில்லை. குடியரசுத் தலைவரின் மன்னிப்பு! சராதானந்தா உட்பட மற்றவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகையிலேயே இவ்வாறு தள்ளுபடி கிடையாது என்று கூறியுள்ளது. நளினிக்கு அவ்வாறான எவ்வித கட்டுப்பாடும் கிடையாது...

ஆயினும், தள்ளுபடி என்பது எந்த ஆயுள்தண்டனைக்கும் கிடையாது என்பதுதான் சராதானந்தாவின் தீர்ப்பில் இருந்து நாம் அறிவது. எது எப்படியோ, நளினி வெளியே வர வேண்டுமென்றால் அரசு மனது வைக்க வேண்டும். தள்ளுபடி என்பது மேற்கண்ட தீர்ப்பின் மூலம் பிரச்னைக்குறிய ஒன்று. அரசு அவரது தண்டனையை குறைப்பதுதான் வழி...

இல்லை என்றால், நளினிக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் கருணை, உண்மையில் ஒரு கானல் நீரே!

(24/10/08 அன்று எழுதப்பட்டது)

Tuesday 28 July 2015

CONTEMPT WHEN THE TRUST IS IN DEFICIT

Disbelief was my first reaction; that our High Court has initiated contempt proceedings against ‘Tamil Hindu’ and its columnist Samas for allegedly scandalizing the Court through his column. I found the extract of that ‘contemptuous column’, which to my relief presents few well known statistics on the socio economic status of the prisoners all over India. The author, while concluding tried to take a pot shot upon the justice delivery system; not in his own words but by hiding behind what Periyar EVR said several years ago; so much for the courage of our columnists!

A rather dull and insipid attempt, I must say from what I had read in that extract but still our High Court found it to be offensive enough, warranting criminal contempt proceedings.

The High Court in my opinion, by initiating this contempt proceeding is setting a wrong precedent and this may ultimately end up in wasting the precious time of the Court; an introspection would have soothed the conscience, if it is really scandalized. This proceeding will compel the High Court into examining and to answer whether its anger violates the right of the common public to know and the duty of the press to inform and educate.

From what I have observed in all these years at the High Court, the usually pliant TN press is maintaining a good equation with the High Court even at the cost of its own credibility. Carefully avoiding what is awkward and inconvenient, the press normally concentrates only on reporting the judgments with prominence; justified as such reporting of judgments shall help in educating common man about their rights and obligations and in keeping the faith in the Judiciary. The question Samas asked in his column and his statistics is insignificant in comparison to what is being written and discussed about the Judiciary in the Social media or in the corridors of the Courts.

The High Court shall remind itself what the Supreme Court famously said in Arundhati Roy’s case that the ‘Court's shoulders are broad enough to shrug off the comments’ I would like to differ, add or supplement; the comments are to be carried like a cross and no to be shrugged off and be forgotten; Jesus did not shrug off the sins of humanity but stepped forward to accept responsibility by bearing the cross himself.

These are testing times for the Judiciary not only in Tamilnadu but all over India. We cannot hide the nagging feeling with which we are dogged that the Judiciary is suffering ‘Trust Deficit’ among the common public; irrespective of the legal niceties involved in the Jeyalalitha assets case and the Salman Khan bail controversy what we hear from the ordinary citizens whom we encounter in the street is not encouraging but embarrassing.

Civil contempt may be armor, protecting the majesty of the court but Criminal contempt is a sword; the problem is that it takes the shape of a double edged sword and only when it is comfortable to wield, the court has to take it.

This is definitely not the best time for the courts to test such expertise…

கேபிஎன் விபத்தில் நசுங்கிய பத்திரிக்கை தர்மம்

இரண்டு நாட்களாக காலையில் முதல் வேலை வீட்டிற்கு வரும் ஹிந்து, டைம்ஸ், தினகரன் ஆகிய மூன்றிலும் அந்த செய்தியை தேடுவதுதான். நேற்றும் இல்லை இன்றும் இல்லை. அதற்கு முன்னாள் தொலைக்காட்சிகளில் வரிச் செய்தியாக ஓடியது, பின்னர் அதுவும் நின்று போனது.

கேபிஎன் நிறுவன பலத்தில், பத்திரிக்கை தர்மங்கள் கூட விபத்து நடந்த பேருந்தின் அடியில் நசுங்கிப் போய்விட்டது போல.

அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லையோ என்று கூட ஒரு கணம் நினைத்தேன். ஆனால் முகம் நசுங்கி இறந்து போன ஒன்று விட்ட தம்பியை புதைத்து விட்டு வந்த கல்லறைத் தோட்ட மணம் அதை மறுக்கிறது.

இருபது பேர் சாவு, குழந்தை சாவு, புது மாப்பிள்ளை சாவு என்று தினந்தோறும் கண்ணில்படும் விபத்துச் செய்திகளை வெறுமே கடந்து சென்றாலும், இறப்பின் வலி நம் முகத்தின் மேலேயே அறைகையில் அவ்வளவு எளிதில் ஒதுக்க முடியவில்லை.

பத்து வருடம்! கல்யாணமாகியல்ல காதலித்து அதுவும் சொந்த அத்தை பொண்ணை. போன வாரம்தான் திருமணம் நிச்சயமாகியது. பெண் கொழும்பு. இங்கு நடந்த ஒரு திருமணத்தில் முதன் முதலில் பார்த்து பிடித்துப் போய் திருமணம் மதுரையிலா கொழும்புவிலா என்ற இழுபறியில் பத்து ஆண்டுகள் ஓடிப் போய் ஒரு வழியாக நிச்சயமானதை, சித்தப்பா ‘இந்தியா இலங்கை ஒப்பந்தம் 'மோடியால் அல்ல இந்த டாடி’யால்’ என்று தனது முகநூலில் பதிந்திருந்த நிலைத்தகவலைப் பார்த்து ரசித்த புன்னகை கூட இன்னும் மிச்சமிருக்கிறது.

இவ்வளவு நாட்களாக வாட்ஸப்பில் பார்த்ததோடு சரி. ‘டிசம்பரில்தானே கல்யாணம். நிச்சயமான அன்றும் கூட்டத்தில் பேச முடியவில்லை’ என்று வெள்ளிக்கிழமை கொழும்பு கிளம்பிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு மணி நேரமாவது பார்த்து தனிமையில் பேச விரும்பி வியாழன் ராத்திரி பெங்களூரில் இருந்து கிளம்பி வந்தவனை பயணிகளோடு சேர்ந்து தானும் தூங்கிப் போன கேபிஎன் டிரைவர் கரூர் தாண்டாமலேயே முடித்து வைத்து விட்டார்.

‘உன் கையை கூட நான் பிடிச்சுப் பாத்ததில்லையே’ என்று பத்து வருடங்களாக அவனை காதலித்து வந்தவள் அழுததாக சொன்னார்கள். இனி அந்த வார்த்தைகள் என்னைத் துரத்தும்...

தொடர்ந்து பெரிய விபத்துகளைப் பார்த்து விட்டாலும் விபத்து பற்றிய செய்திகளை பத்திரிக்கைகளில் வர விடாமல் செய்து விட்ட கேபிஎன்’ நிர்வாகத்தையும் துரத்தட்டும்.

Thursday 23 July 2015

ப்ளேஸஸ் இன் தெ ஹார்ட் (1984)

அப்போதுதான் பதினோராவது வகுப்பில் சேர்ந்திருந்தேன். சித்தப்பா அலுவலக காரியமாக டெல்லி வரை சென்றிருந்ததால், சித்தி வீட்டில் இருந்தேன். வாரம் ஒருமுறை சாவி கொடுக்க வேண்டிய சுவர்கடிகாரம் நின்று விட்டது. அதை எப்படி ஓட வைப்பது என்று எனக்கும் தெரியாது, சித்திக்கும் தெரியவில்லை. திரும்பி வந்து சில மாதங்களிலேயே சித்தப்பா இறந்து போன போது, ‘அந்த கடிகாரத்துக்கு எப்படி கீ கொடுப்பது என்று கூட எனக்குத் தெரியாதே’ என்று சித்தி அழுதார்கள்.

‘ஹி ஒன்லி பெய்ட் ஆல் த பில்ஸ்’ எதிர்பாராத விபத்தில் கணவனை இழந்த பின் இரு சிறு குழந்தைகளுடன் நிற்கதியாக நிற்கும் எட்னா ஸ்பால்டிங் (சாலி ஃபீல்ட்) ப்ளேஸஸ் இன் த ஹார்ட் (1984) படத்தில் அப்பாவியாகக் கேட்கும் பொழுது இந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.

ஆனால், பரிணாம வளர்ச்சிப்படி நெருக்கடியான சூழ்நிலையில் தாய்மை குழந்தைகளுக்காக விழித்துக் கொள்வதையும் வியக்கத்தக்க வகையில் பிழைத்திருக்கும் ஆற்றலை (survival instinct) வெளிப்படுத்துவதையும் நிசத்திலேயே பலமுறை பார்த்து விட்டதால், அப்பொருளாதார நெருக்கடியிலும் எட்னா பருத்தி விவசாயத்தில் இறங்குவதும், சிக்கலிலிருந்து மீள்வதும் அதிசயமாகவல்லாமல் இயல்பானதாவே இருந்தது.

தற்செயலாக எட்னா’விற்கு உதவியாக வரும் ‘டானி க்ளோவர்’ ‘ஜான் மல்கோவிச்’ போன்ற பாத்திரங்கள் நிசத்தில் கடவுளின் ப்ரசன்னம் என்பதாக உணரப்படுகிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த படம் என்பதால் எட் ஹாரிஸ் உட்பட அனைவரையும் இளமையாகப் பார்ப்பது தனி அனுபவம்.

முதற்காட்சியில் எட்னா’வின் கணவர் இறந்து போவதைத் தவிர பின்னர் வேறு பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை. தெளிந்த நீரோடை போல முப்பதுகளின் மத்தியில் அமெரிக்க கிராமம் ஒன்றில் நிகழ்வதால் அக்கால காட்சியமைப்புகளே என்னைப் பெரிதும் கவர்வதாயிருந்தது.

கணவனின் பிரிவு, பொருளாதார நெருக்கடி, வெள்ளை இனவெறி என்பதற்கும் மத்தியிலும் நம்பிக்கை கீற்றோடு ஃபீல் குட் உணர்வுகளால் படம் நிறைவடைகிறது. இன்று நாடு நாடாக பறந்து கொண்டிருக்கும் சித்தியின் வாழ்க்கையைப் போலவே!

Sunday 19 July 2015

கான் கேர்ல் 2014

குழந்தைகள் பேசும் பொழுது தவறுகளைத் திருத்தாதீர்கள் என்று படித்திருக்கிறேன். அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் பேசும் வார்த்தையின் உச்சரிப்பையோ அல்லது இலக்கணத்தையோ திருத்தினால், அடுத்த முறை அதைப் பேசும் பொழுது கவனியுங்கள், சிறிய இடைவெளியும் தயக்கமும் இருக்கும்.

இடையில் பல திரைப்படங்கள் பார்த்தாலும், எழுதாததற்குக் காரணம் ‘ஊர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் பொழுது இவர் சினிமா பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்று படித்த முன்னிகை அல்ல. வேலைப்பளுவும், வேறு பலவும்தான் என்பதற்கு படங்களை மட்டும் நான் போடுவதை வைத்து புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும், ‘கான் கேர்ல்’ படம் பற்றிக் குறிப்பிட வேண்டும். சாதாரணமாக ஆரம்பித்து ஏறக்குறைய ‘பேஸிக் இன்ஸ்டிக்ண்ட்’ மாதிரி உணர்வுகளை ஏற்ப்படுத்துகிறது. அதுவும் சில வசனங்கள் நிறுத்தி மீண்டும் ஒரு முறை படித்து கடக்க வேண்டியிருக்கிறது.

“You're delusional. I mean, you're insane, why would you even want this? Yes, I loved you and then all we did was resent each other, try to control each other. We caused each other pain”

“That's marriage”

கான் கேர்ல்’ த்ரில்லர் என்று வகைப்படுத்தப்பட்டாலும், த்ரில்லிங் மிஸ்ஸிங். அதை ஈடு செய்தது மைக்கேல் டக்ளஸ் கிழவனாக, ஆனால் படு பயங்கர கிழவனாக நடித்த பியாண்ட் த ரீச்’. ஏற்கனவே பல திரைப்படங்களில் கையாளப்பட்ட ‘டாம் அண்ட் ஜெரி’ வகை ஓட விட்டு வேட்டையாடும் கதைதான். ஆனால் வித்தியாசமாக, அமெரிக்கவின் வறண்ட பாலைவனமான மேஹேய் வனாந்திரத்தில்.

அல் பசினோ ரசிகர்கள் கோபிக்க வேண்டாம். சாரி, ரொம்ப எதிர்பார்த்து பார்த்த ஸ்கார்ஃபேஸ் சுவராசியமாக இருந்தாலும் இறுதியில் ஹிந்திப் படம் போல முடிந்து போனது.

மதுரை
10/07/15

மாகி 2015

‘பள்ளிகளில் தவறிழைக்கும் சிறார்களை ஒழுங்குபடுத்த காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் தண்டனை முறைகள் அவர்களை திருத்துவதற்குப் பதிலாக மேலும் மேலும் தண்டனைக்கு பழக்கப்படுத்துகின்றன எனவும் அதற்கான மாற்று முறைகளை சிந்திக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று டைம்ஸில் செய்திக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்க மனோதத்துவ நிபுணரான ரோஸ் கிரீன் ‘த எக்ஸ்போஸிவ் சைல்ட்’ ‘லாஸ்ட் அட் ஸ்கூல்’ என்ற தனது புத்தகங்களில் இந்தப் பிரச்னையை எப்படிக் கையாளுவது என்பதை அலசுகிறாராம்.

நமது கல்வியியல் (பி.எட்., டி.டி.இ) மாணவர்கள் மாற்று முறைகளைப் பற்றி சிந்திக்கிறார்களா என்பது தெரியாவிட்டாலும், சீனியாரிட்டி லிஸ்ட், புரோமஷனல் பேனல், இன்கிரிமெண்ட், லீவ் சாலரி, டிரான்ஸ்பர், மைக்ரேஷன், க்ராஸ் டிகிரி பற்றி சிந்திப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சிந்திக்க நேரமில்லாதவர்கள், குறைந்த பட்சம் நானும் ரான்யாவும் நேற்று இரவு பார்த்த ஆர்னால்டு ஸ்வார்ட்ஸ்நேகரின் ‘மாகி’ என்ற படத்தையாவது மாற்றுத் தண்டனையாக யோசிக்கலாம்.

உத்தம வில்லனை’யே கடைசி வரை பார்த்த ரான்யா கூட பாதியில் தூங்கி விட்டாள்.

‘மாகி’ குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்பது உண்மைதான் போல...

மதுரை
12/07/15

Friday 17 July 2015

வுமன் இன் கோல்ட் 2015

“ஏதாவது ஒரு கேஸுல மொத்தமா சம்பாதிச்சுட்டு வாழ்க்கையில செட்டிலாயிரணும்’ சில சமயம் வழக்குரைஞர்கள் தங்களுக்குள் கிண்டலடித்துக் கொண்டாலும், அமெரிக்காவில்தான் அது சாத்தியம்.
வழக்குரைஞர் தொழிலில் தடுமாறிக் கொண்டிருந்த ராண்டால் ஷூன்பெர்க்’குக்கு அவரது நாற்பதாவது வயதில் ஒரே வழக்கில் கிடைத்த வருமானம் 120 மில்லியன் டாலர்கள்!

மாரியா அல்ட்மான்’னுக்கு திருமணமான அதே நேரத்தில், ஹிட்லர் ஆஸ்திரியா’வை நாஜிக்களின் பிடியில் இணைத்துக் கொண்டிருந்தார். மரியாவின் குடும்பம் வியான்னாவில் பெரும் செல்வந்தர்கள். ஆனால் யூதர்கள். விரைவிலேயே நாஜிக்களின் பிடியிலிருந்து தப்பி மரியா அமெரிக்காவில் குடிபுக வேண்டியிருந்தது. மரியா குடும்பம் சேர்த்து வைத்திருந்த கலைப்படைப்புகள் முக்கியமாக ஆஸ்திரிய ஓவியரான கஸ்டவ் க்ளிம்ட் என்பரின் ஓவியங்கள் நாஜிக்களால் திருடப்பட்டு இறுதியில் போருக்குப் பின்னர் ஆஸ்திரிய அருங்காட்சியகத்திலேயே தஞ்சமடைந்தன. அந்த ஓவியங்களிலேயே முக்கியமானது ‘ஆஸ்திரிய மோனாலிசா’ என்று கருதப்பட்ட ‘அடேலே’. க்ளிம்ட் 1907ம் ஆண்டு மரியாவின் அத்தையாகிய அடேலே’வை தங்கத்தாலேயே உருவாக்கிய ஓவியம்.

ஓவியத்தை திரும்பப் பெற ஆஸ்திரிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் நீதிமன்ற கட்டணமே 1.5மில்லியன் டாலர்கள் கட்ட வேண்டும். மரியாவிடம் அவ்வளவு தொகை இல்லை.

சரி, அமெரிக்காவிலேயே வழக்கு தொடர்ந்தால், ஆஸ்திரிய அரசாங்கம் முதல் நிலையிலேயே வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. உச்ச நீதிமன்றம் தனது 2004ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றங்களுக்கு அந்த வழக்கை விசாரிக்க ஆள்வரை (Jurisdiction) உண்டு என்று தீர்ப்பளிக்க ஆஸ்திரிய அரசாங்கம் வேறு வழியின்றி ஆர்ப்பிட்டிரேஷன் மூலம் ஆஸ்திரியாவில் தீர்த்துக் கொள்ளலாம் என்று சமரசத்துக்கு வர, வழக்கு ஆஸ்திரியாவில் நடைபெற்றது.

இறுதியில் தீர்ப்பு மரியாவுக்கு சாதகமானது. 2006ம் ஆண்டில் அடேலே உட்பட மற்ற மரியா குடும்ப ஓவியங்கள் அமெரிக்காவிற்கு பயணமாயின.

பரமபத விளையாட்டு போல வெற்றியும் தோல்வியுமான மரியாவின் இந்தப் போராட்டம் ‘வுமன் இன் கோல்ட்’ என்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதையும், இசையும், காட்சியமைப்புகளுமாக சுவராசியமாகத்தான் உள்ளது என்றாலும், இனம்புரியா உணர்வுகளைத் தூண்டும் வண்ணம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏற்கனவே கிழவியான ஹெலன் மிர்ரன் கொஞ்சம் வயதாகத் தோன்றுவது அதிசயமில்லை. ஆனால், கொஞ்சமே வயதான கேட்டி ஹோம்ஸ் ஏன் இப்படி கிழவி மாதிரி ஆகிவிட்டார். டாம் க்ரூஸ் ‘ஸைன்டாலஜி’ மூலம் சூனியம் கீனியம் வைத்து விட்டாரா?

எப்படியோ, இந்தப் படத்தில் நமது வழக்குரைஞர்களுக்கு ஒரு பாடம் உள்ளது. ஒரே வழக்கில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று அல்ல. அமெரிக்கா மாதிரி 40% அல்ல 10% கட்டணம் பேசினாலே இங்கு குற்றம்.

பாடம், ஆர்பிட்டிரேஷன் பற்றியது. சொத்து வாங்க ஒப்பந்தம் எழுதுகையில், வாங்குபவர் உங்கள் கட்சிக்காரர் என்றால், ‘ஒப்பந்தத்தில் எழும் பிரச்னைகளை ஆர்பிட்டிரேஷன் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுத கோரவும்’. ஒப்பந்தப்படி சொத்தினை கிரயம் பெற தாக்கல் செய்யப்படும் ஏற்றதை ஆற்றும் (Specific Performance) வழக்குகளுக்கு தடையாக இருப்பது 7.5% என்ற நீதிமன்ற கட்டணம்தான். ஆர்பிட்டிரேஷன் என்றால் அந்தப் பிரச்னை அல்ல.

‘ஆர்பிட்டிரேஷன் க்ளாஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நானும் இரண்டு மூன்று கட்சிக்காரர்களிடம் கூறிப்பார்த்து விட்டேன். ‘அது எதுக்கு சார்?’ என்கிறார்கள்...

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....