1985ம் ஆண்டு. தில்லி அசோகா ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் இந்திய அரசின் விருந்தாளியாக தங்க வைக்கப்பட்டிருந்தார் அவர்.
தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதை விட காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதுதான் சரியானதாக இருக்கும். மத்திய அரசு உளவுப்பிரிவின் கண்காணிப்பில் இருந்த அவருக்கு வெளி உலகத்துடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது.
உளவுப்பிரிவின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த நட்சத்திர ஹோட்டலுக்குள் வெள்ளை முழுக்கை சட்டையை நேர்த்தியாக டக் செய்யப்பட்டிருந்த கருப்பு நிற கால்சாராயுடனும், மிடுக்கான தோற்றத்துடன் சென்ற அவரை யாரும் தடுக்கவில்லை. அடர்த்தியான அந்த மீசையும், அவரது கம்பீரமான நடையும் மற்றவர்களை
கட்டிப்போட்டிருக்கலாம்.
அவரது உடையை, உயரமான தோற்றத்தை வைத்து ‘ஏதோ ஒரு மத்திய உளவுத்துறை அதிகாரி’ என்று மற்றவர்களை நம்ப வைத்து இரண்டாவது தளத்திலிருந்த அந்த அறைக் கதவு வரை சென்று விட்டதாக’ பின்னர் பேட்டியில் அவர் கூறினார்.
அவர் எப்போதுமே இப்படித்தான். ஆரம்பம் நன்றாக இருக்கும். பினிஷிங்தான் கொஞ்சம் சறுக்கிவிடும். அன்றும் அறை எண் 205ன் கதவுக்கு இந்தப் புறம் அவர் தடுக்கப்பட்டார். எனினும் போராடினார். தமிழகத்தில் பல இளைஞர்களைக் கவர்ந்த முறுக்கும் வீரமும் அப்போது அவரிடம் அபரிதமாக இருந்தது.
இறுதியில், வேறு வழியின்றி ஹோட்டல் லாபியிலிந்து அறையிலிருந்தவரிடம் இண்டர்காமில் பேச அனுமதிக்கப்பட்டார். இண்டர்காமில் அவர் பேசியதாகச் சொன்னது அவருக்கே வினையாகி ‘மல்லிகை’யின் வாசலுக்கு அவரை கூட்டிச் சென்றது தனி கதை.
தங்க வைக்கப்பட்டிருந்தவர் விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரன். சந்திக்கச் சென்றவர் திமுகவின் போர்வாள் என்று அப்போது அறியப்பட்ட வைகோ.
-oOo=
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோவில் அண்ணனுக்கு பைபாஸ் சர்ஜரி. பார்வையாளர் நேரம் தவிர யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால் அம்மா, அநாசயமாக காவலாளியை கடந்து சென்று வருவார்கள்.
அப்பல்லோவிலேயே பெரிய இருதய சிகிச்சை நிபுணர் அவர்தான். ‘அவரது சிஸ்டர் என்று சொல்லி வைத்திருக்கிறேன்’ என்றார்கள். அம்மாவைப் பற்றி ஏற்கனவே நான் அறிந்திருந்ததால் இது அவர்களுக்கு சாத்தியம்தான் என்று நினைத்தேன்.
‘சர்வ வல்லமை கொண்ட மத்திய அரசின் உளவுத்துறை கண்ணிலேயே மண்ணைத்தூவிய வைகோவிற்கு, கேவலம், அம்மாவால் சமாளிக்க முடிந்த அப்பல்லோ எம்மாத்திரம்’ என நினைத்தேன்.
ஒபாமாவிடம் ஆட்டோகிராப் வாங்கிய போதே, நான் சுதாரிச்சுருக்கணும்.
இப்போ, விசிட்டிங் கார்டை வாங்கிட்டு வந்து நிற்கிறார்!
No comments:
Post a Comment