Sunday 29 November 2015

எபிசோடா யு சிவோத்து பெராக்கா ஜெலேயா (போஸ்னியா)

பார்க்கும் எவரையும், அவர் மனதின் ஏதாவது ஒரு மூலையில் கொஞ்சமேனும் மனிதாபிமானம் ஒட்டியிருப்பின் போதும், கவரும் சிறந்த ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க என்ன தேவை?

சிக்கலான கதை. அசத்தலான க்ளைமாக்ஸ்? ‘ம்ஹூம் ஒரு சம்பவம் போதும்’

மாஸ் நடிகர்கள்? ‘எதற்கு சம்பவத்தில் பங்கு கொண்ட சாதரணர்கள் போதும்’

விலையுயர்ந்த காமிராக்கள்? ‘ஏன், 2.5லட்ச ரூபாய்க்கு கிடைக்கும் கானன் 5Dக்கு என்ன குறைச்சல்’

இசை? ‘அதுதான் ஓடும் காரிலும், குழந்தைகளின் கூச்சலிலும்தான் இசையிருக்கே. தனியாக ஏன் இசையமைக்க வேண்டும்’

என்று கேட்பது போல Epizoda u zivotu beraca zeljeza (2013) என்ற போஸ்னிய படத்தை எடுத்து விருதுகளை அள்ளிக்குவித்துள்ளர் அதன் இயக்குஞர் டானிஸ் டனோவிச். இப்படி படம் எடுத்துள்ளார் என்றவுடன் ஏதோ கடைநிலை இயக்குஞர் என்று நினைத்துவிட வேண்டாம். பலரும் நன்கு அறிந்த ‘நோ மேன்ஸ் லாண்ட்’ மற்றும் நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டுள்ள ‘ட்ரையேஜ்’ ஆகிய படங்களை இயக்கிய உலகப் புகழ் பெற்ற இயக்குஞர்.

துரதிஷ்டம் பிடித்த ரோமா, ஜிப்ஸிஸ் என்றால் அனைவருக்கும் தெரிந்த இனத்தைச் சேர்ந்த நஸீபும் அவன் மனைவி செனாடாவும் அவர்கள் இரு பெண் குழந்தைகளோடு வசிப்பது போஸ்னியாவின் புறநகரில். பழைய இரும்புகளை பொறுக்கி விற்பதுதான் அவன் தினப்படி வருமானம். ‘ஏதாவது நோய் வந்து அவன் படுத்து விட்டால் அந்த குடும்பம் என்ன செய்யும்’ என்று நினைத்து முடிக்க வில்லை, செனாடாவுக்கு வயிற்று வலி. உதிரப்போக்கு.

நகர்புற மருத்துவமனைக்குச் சென்றால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை இறந்து போனதாகவும், மேலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட வேண்டுமென்கிறார்கள். அவனிடம் பணமுமில்லை. அவளுக்கு மருத்துவ காப்பும் இல்லை. இரண்டு முறை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கஷ்டப்பட்டு சென்றாலும் பலனில்லை. பின்னர் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்து அழைத்தாலும், சோர்விலும் வெறுப்பிலும் செனாடா அவர்களுடன் செல்ல மறுத்து விடுகிறாள். இறுதியில் அவளது தம்பி மனைவியின் காப்பீட்டைக் காண்பித்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினால், கரண்டு பில் கட்டாததால் வீட்டில் மின்சாரம் கட்!


நஸீப் அவனது பழைய காரை உடைத்து அதை விற்ற பணத்தில் மனைவிக்கு மருந்தும், கரண்ட் பில்லும் கட்ட மீண்டும் வீட்டில் உற்சாகம் பொங்குவதோடு படம் முடிகிறது.

உதிரப் போக்கோடு மருத்துவத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் காட்சிகள் இல்லையென்றால், நடக்கும் சம்பவங்களை அப்படியே படம் பிடிக்கிறார்கள் என்றுதான் நினைத்திருப்பேன். போருக்குப் பின்னதான போஸ்னியாவில், ரோம இன மக்கள் உதாசீனப்படுத்தப்படுவதை உலகின் பார்வைக்கு மீண்டும் கொண்டு செல்வதற்காக நஸீப்-செனாடா தம்பதியினரின் அனுபவத்தை அப்படியே திரைப்படத்திற்கான எவ்வித அழகியலும் இன்றி, நாமும் அவர்களின் குடும்பத்தின் ஒருவராக நின்று நடப்பவைகளை பார்ப்பது போல இயக்கப்பட்டுள்ளது.

அதுவும் படம் முழுவதும் அந்த இரட்டைப் பெண் குழந்தைகளின் குதியாட்டமும், கொண்டாட்டமும், கூச்சலும்; சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

பிற திரைப்படங்களின் போஸ்டரைக் கூட காப்பியடிக்கும் அளவிற்கு அறிவு வறட்சியில் தவிக்கும் நம்மவர்கள்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, இப்படியெல்லாம் கூடவா திரைப்படங்களை இயக்க முடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....