‘வாவியன்’ என்றால் மின் விளக்கு விசிறி போன்றவற்றை இரு சுவிட்சுகளால் இயக்கும் வசதி’ என்கிறான் கதைநாயகன்/வில்லன் என்கிய்ன் குனாதின். கதைக்கும் நாயகன் அவர்தாம். ஆம். கதாசிரியரும் அவர்தாம்.
மனைவியின் பணத்துக்காக ஆசைப்பட்டு அவளை கொலை செய்ய முயலும் த்ரில்லிங்'கான கதையை எழுதியதால் பாக்யராஜ் அவரே நடிக்கவில்லையா, அது போல ஒரு கதையை எழுதி விட்டு இவரும் தானே நடிக்கவில்லை என்றால் எப்படி?
படத்தின் தொடக்கத்தில் அவனது காரில், ஓட்டுநர் சுவிட்ச் போட்டால் பக்கவாட்டில் தானாகவே திறந்து மூடும் கதவை பொருத்துகிறான். எனக்கு கூட ‘அட இப்படி ஆட்டோமேட்டிக் கதவு உள்ள கார்கள் ஏன் இங்கு இல்லை’ என்று தோன்றியது. படத்தைப் பார்த்ததும்தான் ஏன் இல்லை என்று புரிந்தது.
கதாநாயகன் எப்படியாவது மனைவியை தீர்த்துக் கட்ட வழி பார்த்து அதை நிறைவேற்றினாலும், மனைவி இரண்டு நாட்களில் தப்பித்து வருகிறார் என்றாலும் அநியாயத்துக்கு எண்பதுகளின் தமிழ்ப்பட கதாநாயகிகளைப் போல கணவன் மேல் பாசமோ பாசமாக பொறுத்துப் போகிறார். ஒரு கட்டத்தில் நாமே திரைக்குள் போய் அவனை நாலு சாத்து சாத்தி விட்டு வரலாமா என்றிருக்கிறது.
இதற்கு தமிழ்ப்படமே பார்க்கலாமே என்றால், பார்க்கலாம்தான். ஆனால், தமிழ்ப்படங்களில் இத்தனை கொடுமைகள் செய்யும் கணவன் ‘தடா’லென திருந்தி விடுவான் அல்லது செத்து விடுவான். அப்படியில்லாமல், கணவனது பொருளாதார பிரச்னைகள் மனைவி மூலமாகத் தீர்கையில், எவ்வித மன்னிப்புமின்றி கண்ணீருமின்றி அன்பான தந்தையாகவும் சற்று அனுசரணையான கணவனாகவும் இயல்பாக குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான்.
இயக்குஞர்கள் இருவர், சகோதரர்கள். ஹாலிவுட்டின் கோயன் சகோதரர்கள் போன்று துருக்கியில் டேலான் சகோதரர்களாம். (ப்ளாக்) காமெடி ரகப் படமென்றாலும், கோயர் சகோதரர்களின் படம் போன்றே ஏதோ சில்லிட வைக்கும் அமானுஷ்யமான பய உணர்வை படம் நெடுக இவர்களாலும் ஊட்ட முடிகிறது.
தமிழ்ப்படங்கள் பிடிக்கும் எவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்...
No comments:
Post a Comment