“சார், எனக்குச் சொல்லியிருக்க வேண்டியதுதானே. நான் கொடுத்து அனுப்புகிறேன்” வெள்ளிக்கிழமை காலை ஃபோனில் பேசிய க்ளையண்ட் மாலையில் மீண்டும் பேசினார்.
“சாரி சார். நான் வரமுடியவில்லை. இன்னொருத்தரை அனுப்பியுள்ளேன். உங்கள் வீட்டுக்கு வெளியே நிற்கிறார்” என்றார்.
“இல்லை. பேங்கிலேயே கொடுப்பதாகச் சொன்னார்கள்’ என்றாலும் கேட்கவில்லை.
வெளியே சென்றால், இருட்டிலிருந்து ஒருவர், “சார் கொடுத்து விட்டாங்க. வரமுடியலயாம்” என்று நூறு ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை நீட்டினார்.
ஏதும் பேசாமல் வாங்கிக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தால், அவர்களது வேலையில் கவனமாயிருந்த க்ளார்க்கும், டைபிஸ்டும் கண்ணில் பட்டார்கள். மனதில் எதோ உணர்வு பொங்க, “செலவு பண்றதுக்கு பணம் வச்சுருக்கீங்களா, வேணும்னா கேட்டு வாங்கீங்க” என்றேன்.
-oOo-
“ஐம்பதாயிரம் பீஸ் வாங்கியிருந்தாக் கூட அப்படி இருந்திருக்காது. அந்தப் பத்தாயிரத்தை கையில் வாங்கும் போது ஏதோ குற்றம் செய்யறது மாதிரி அன் ஈஸியா இருந்தது” சனிக்கிழமை காலை வங்கிக்கு செல்லும் வழியில் மனைவியிடம் கூறினேன்.
வங்கி அலுவலகத்திற்குள் இன்னொரு ஆள் உள்ளே போக முடியாத அளவிற்குக் கூட்டம்.
அக்கவுண்ட் ஹோல்டர் என்ற ஹோதாவில் உடனடியாகக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு காரை கிளப்பிய போது, “இதுல ஒரு யூஸ். போர் வந்தால் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற பயிற்சி மாதிரி இருக்கிறது. வார்-டிரில்” என்று சொல்லிவாறே வங்கியிலேயே விட்டு விட்டு வந்த கூட்டத்தை பார்த்த போது மீண்டும் ஒரு வித குற்ற உணர்வு.
-oOo-
‘என்னத்தை கேஸ் படிக்கிறது’ சனிக்கிழமை மாலை எழுந்த வெறுப்புணர்வில் எங்காவது வெளியே ஒரு ரவுண்ட் போய் வரலாம் என்று குடும்பத்தோடு கிளம்பி மில்லேனியம் மாலுக்குள் புகுந்தால், ஒரு ஈ, காக்கை இல்லை.
அங்கிருந்த ஒரே வக்கீல் நண்பரும், ‘ஐநூறு வாங்க மாட்டேன்னு சொல்றாங்க சார், பில்லுதான் போடறீங்களேன்னு கேட்டாலும், அபிஷியல் பாலிஸியாம்” என்றார் கையிலிருந்த பாப்கார்னை கொறித்தபடி.
அவர் சொல்லியதற்காகவே ஏதோ ஒரு வெறியில் அந்தக் கடையில் நுழைந்து சில மாதங்களாகவே வாங்க வேண்டுமென்று தள்ளிப் போய்க் கொண்டிருந்த செருப்பு ஒன்றுக்கு இரண்டு ஜோடியாக வாங்கிக் கொண்டு, கவுண்டரில் நூறு ரூபாய்களாக கொடுத்த போது, அந்தப் பணியாளரின் முகத்தில் தோன்றியது வியப்பா, அதிர்ச்சியா அல்லது அது என் பிரமையா என்றிருந்தது.
“பாப் கார்ன் வாங்கிக் கொடுங்க” என்ற மனைவிக்கக பாப் கார்ன் சொல்லி விட்டு திரும்பினால் கடை சிப்பந்தி டை அணிந்த அவரது மேலாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார், “அங்க பார், நம்மளைப் பத்திதான் பேசுறாங்க போல. போலீஸுக்கு சொல்லப் போறாங்களோ”
நகைச்சுவையாகச் சொன்னாலும், நிசமாகவே இனம் புரியாமல் நிறைந்திருந்த அச்ச உணர்வைக் கண்டுதான் எனக்கு சிரிப்பாக இருந்தது.
செருப்பு டப்பாவை போட்டுக் கொடுத்த பையுடன் மால் படிகளில் இறங்கிய போது, வெறிச்சோடிக் கிடந்த சாலை முழுவதும் ஆயிரம் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வில் என் உலகம் நேற்று இரவு இயங்காமல் நின்று போயிருந்தது…
(13/11/16 அன்று எழுதப்பட்டது)
No comments:
Post a Comment