“ஆமாம், நாங்கள் பணம் வாங்கினோம். அதனால் என்ன? பணம் கொடுத்து விட்டதாலேயே சட்டப்படி….சட்டப்படி……. சொல்லுங்கள் அவர்களுக்கு எங்களை பலாத்காரம் செய்யும் உரிமை வந்து விடுமா?”
தொடர்ந்த குறுக்கு விசாரணையின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் உடைந்து போய் ஃபாலக் அலி (கீர்த்தி குல்காரி) கதறும் அந்தக் காட்சியில்தான் இந்த ஆண்டில் வெகுவாக பாராட்டப்படும் ‘பிங்க்’ மற்ற திரைப்படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது.
ஆனால் படம் பார்த்த பலர் ‘ஃபாலக் அலி ஏற்றுக் கொண்டது போல உண்மையிலேயே தோழிகள் பணம் வாங்கினார்களா?’ என்ற சந்தேகத்தை இணைய விவாதங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதில் படத்தின் இயக்குஞரும், கதாசிரியர்களுமான அனிருத்த ராய் செளத்திரி, சூஜித் சிர்கார் ஆகிய இருவரும் படத்தில் தாங்கள் சொல்ல நினைத்த கருத்தை கடத்துவதில் சிலரிடம் தோல்வியடைகிறார்கள்.
ஆம். இதுவரை நாம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை ஒரேடியாக மீறி அடுத்த கட்டத்திற்கு நம்மை தயார்ப்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்லதான்.
அந்த அச்சத்தில்தான், இங்கு இருப்பதிலேயே தாராள எண்ணம் கொண்டவராக அறியப்படும் கமல்ஹாசன் கூட தனது பாபநாசம் படத்தில் மிகவும் பாதுகாப்பாக பயணித்து, பெண் பிள்ளைகளுக்கு எதைச் சொல்ல வேண்டியிருக்கிறதோ அதைச் சொல்லியிருக்கக் கூடிய அருமையான வாய்ப்பினை நழுவ விட்டிருப்பார்
கமல்ஹாசனை சொல்லிக் குற்றமில்லை. ‘உங்கள் புகைப்படத்தினை யாராவது தவறாக பயன்படுத்தினால், யாரும் செய்யததையா நான் செய்து விட்டேன் என்ற தைரியம் கொண்டு எங்களிடம் வந்து புகார் செய்யுங்கள்’ என்ற விழிப்புணர்வை பெண்களுக்கு ஊட்ட வேண்டிய நமது சசைபர் க்ரைம் காவல் அதிகாரிகள்
கூட ‘பெண்கள் தங்களது படங்களை இணையத்தில் பொதுவில் வெளியிடாதீர்கள்’ என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விட்டால் ‘ஸ்மார்ட் ஃபோன்கள் அதிகரித்து விட்டதால் பெண்கள் பர்தா அணிந்து வெளியே வருவதுதான் நல்லது’ என்றும் சொல்வார்கள் போல.
ஆனால் பாபநாசம் சுயம்புலிங்கத்தின் மகளைப் போல எல்லா பிள்ளைகளும் தவறு ஏதும் செய்யாமலேயே இக்கட்டில் மாட்டிக் கொள்பவர்கள் இல்லை. விளையாட்டுத்தனமான தைரியத்தில் தாங்களும் இசைந்து செய்த செயல்களினால் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் மகள்களுக்குத்தான் பெற்றோரின், சமூகத்தின் அரவணைப்பும், புரிதலும், தைரியமும் தேவைப்படுகிறது.
‘பிங்க்’ அந்தப் புரிதலை கூர்மையான அதன் வசனங்கள் மூலம் தருகிறது.
தில்லி அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் மூன்று தோழிகள். இரவு கேளிக்கைக்கு சென்ற இடத்தில் பழகிய ஆண்களோடு இரவு உணவிற்காக தனி விடுதிக்கும் (Resort) செல்கிறார்கள். தோழிகளின் தாராள குணத்தால் உந்தப்படும் ஆண்கள் அவர்களை பலாத்காரம் செய்ய முயல அவர்களில் ஒருவரான மினால் அரோரா (தப்ஸீ) ரஜ்வீர் சிங்’கை பாட்டிலால் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.
சமாதான முயற்சிகள் தோல்வியடைய அரசியல்வாதியின் மகனான ரஜ்வீர் சிங் செல்வாக்கால் மினால் மீது கொலை முயற்சி வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்ட திரைக்கதையில் ‘தாங்களே இசைந்துதான் தோழிகள் ரஜ்வீர் சிங்குடன் சென்றார்கள் என்ற ரீதியில் நடத்தப்படும் நீதிமன்றத்தில் நடத்தப்படும் குறுக்கு விசாரணையின் வெப்பத்தை தாங்க முடியாத ஃபாலக், ‘ஆமாம் காசு வாங்கினோம்’ என்று அது உண்மையோ பொய்யோ ஏற்றுக் கொள்கிறார்.
ஆனாலும் அவர்களது வழக்குரைஞரான தீபக் ஷெகால் (அமிதாப் பச்சன்) ‘ஒரு பெண் இல்லை என்று சொன்னால் இல்லைதான். ஒரு ஆண் அந்த இடத்தில் நிறுத்தி விட வேண்டும்’ என்று வாதிட்டு வழக்கை வெல்வதுதான் கதை.
தில்லி நிர்பயா வழக்கில் ‘அந்த இரவில் அந்தப் பெண்ணுக்கு வெளியே என்ன வேலை’ என்று கேட்பவர்களுக்கு பதில்தான் ‘பிங்க்’ படத்தின் ‘நோ மீன்ஸ் நோ’
இதற்கே ‘அது எப்படி அவ்வளவு தூரம் விடுதி வரை போய் விட்டு பலாத்காரம் என்றால்’ என்று பொங்குபவர்கள் ஜூடி போஸ்டர் நடித்து 1998ல் வெளி வந்த ‘தி அக்கியூஸ்ட்’ படத்தைப் பார்த்தால் என்ன சொல்வார்களோ?
No comments:
Post a Comment