“சிவாஜியை விடு படிச்சவர். பிச்சைக்காரனுக்குக் கூட தெரிஞ்சிருக்கு. இந்த ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு இவ்வளவு நாள் தெரியலையே, கறுப்பு பணத்தை இவ்வளவு ஈசியா ஒழிக்க முடியுமுன்னு”
“அதானே, இதுல வேற நோபல் பரிசு வாங்கின அமர்த்ய சென், வாங்கியிருப்பேன்னு சொன்ன சுப்பிரமணியன் சுவாமி எல்லாம் இங்க இருக்காங்க”
“ரெண்டு பேரும் இங்கே வாங்க” மகள்களை அழைத்தேன்.
“அந்தா ரோட்டுல காய்கறிய போட்டு விக்கிறாங்கல்ல. அந்தம்மாகிட்ட இருபதாயிரம் ரூபாய் இருக்குன்னு வச்சுக்குவோம்”
“சரி”
“இனிமே அவங்க பேங்க அக்கவுண்ட் ஆரம்பிச்சு அதுல அதப் போடனும்”
“ஆமாம். அது அக்கவுண்ட்ல வந்த பணமாயிடும்”
“சரிதான், அப்புறம் அந்தம்மா ஜனவரியில் அதிலிருந்து பதினைந்தாயிரம் எடுத்து கமிஷன் வியாபாரிகிட்ட காய்கறி வாங்கி அதை இருபதாயிரத்துக்கு வித்தா, அவங்க வருமானம் ஐந்தாயிரம்”
“அவங்க வருமானம் வரிவிலக்கு லிமிட்டுக்குள்ளத்தான இருக்கும், அப்புறம் எப்படி அது கறுப்பு பணமாகும்?”
“கறுப்பு பணம் இல்லை என்றாலும். அது அக்கவுண்டில் வராத பணம்”
“அதனால?”
“அதுல நூறு ரூபாய் அந்தம்மா காய் விக்கிற ரோட்டில் காவலுக்கு நிக்கிற போலீசுக்கு மாமூம் கொடுத்தால், அந்தப் போலீஸ்காரர் கையில் நூறு ரூபாய் அக்கவுண்டில் இல்லாத பணம். இப்படியே அந்தப் போலீஸ்காரர் நிறையப் பேரிடம் வாங்கினால், அது கறுப்புப் பணமாக மாறி விடும்”
“போலீஸ்காரர் மகன் புதிய இந்தியாவில் வெளியாக இருக்கும் ரஜினி படத்துக்கு நூறு ரூபாய் டிக்கட் ஐநூறு ரூபாய்க்கு வாங்கினால் போலீஸ்காரரின் கறுப்பு பணம் தியேட்டர் முதலாளி கையில் நானூறு ரூபாய் அக்கவுண்ட் இல்லாத பணமாகப் போய் அதுவும் கறுப்பு பணமாக மாறும்”
“தியேட்டர் முதலாளி கையில் நிறைய கறுப்பு பணம் சேர்ந்து அதை அவர் மகன் கொண்டு போய் க்ரே மார்க்கெட்டில் ஒரு ஐபோன் வாங்கினால் கறுப்பு பணம் கறுப்பு பணமாகவே இருக்கும். மாறாக ஆப்பிள் கடையில் பில் போட்டு வாங்கினால், கடைக்காரர் கையில் அது வெள்ளைப்பணமாகி விடுகிறது”
“சரி, அப்படி என்றால் ஐபோன் பில்லை வைத்து தியேட்டர் முதலாளியின் மகனை பிடித்துவிடலாம் அல்லவா?”
“முடியும்தான். ஆனால் இந்தியாவில் நடக்கும் கோடிக்கணக்கான விற்பனைகளையும் சோதிப்பதற்கான ஆள்பலம் நமது வருமான வரித்துறையிடம் இல்லையே”
“ஒருவேளை, இம்மாதிரியான பொருட்களுக்கான விலை கிரடிட் கார்ட் மூலமே பெறப்பட வேண்டும் என்று உத்தரவிட்டால்?”
“பொருட்கள் வாங்கப்படுவது குறைந்து பொருளாதாரம் பணாலாகி விடும் அபாயம் இருக்கிறது”
“அப்ப, இந்த நடவடிக்கை?”
“ஏற்கனவே எடுத்ததுதான். ஆனால் ஜனதா ஆட்சியில் ஒழித்தது ஆயிரம் ரூபாய் நோட்டு. பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் அதைப் பார்த்ததேயில்லை. ஆனால் இது அதிரடி ஏறக்குறைய நாட்டில் புழங்கும் மொத்தப் பணத்தையும் மாற்றுவதற்கு சமம். அதீத துணிச்சலான முடிவுதான்”
“இது ஆரம்பம்தான் என்கிறார்கள். சிங்கப்பூர் என்றால் சரி இந்தியா மாதிரி நூறு கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அதுவும் அதில் கணிசமானவர்கள் அடிப்படை தேவைகளுக்கே தள்ளாடும் நிலையில் பணப்பரிமாற்றம் முழுவதும் அக்கவுண்டுக்குள் வர வேண்டுமென்றால், குறைந்தது பத்தாண்டுகள் பிடிக்கலாம். ஆனால் அதுவரை அந்த ஆட்சியும் அரசியல் குறிக்கோளும் இருக்க வேண்டுமே?”
“அப்ப இதில் உனக்கு சந்தோஷமில்லையா?”
“முந்தா நேத்து லஞ்சம் வாங்கினவன் இன்னைக்கு என்ன பண்ணுவான்னு நினைச்சா ஜாலியா இருக்கு. ஆனால் அந்த காய்கறி விக்கிற அம்மா மிச்சம் வச்ச அந்த அஞ்சாயிரம் ரூபாய் இனிமே பேங்குக்குத்தான்னு நினைக்கிறப்போ வருத்தமாயும் இருக்கு”
(09/11/16 அன்று முகநூலில் பகிர்ந்தது)
No comments:
Post a Comment