Monday 1 February 2016

சொல் வேட்டை

“நள்ளிரவு ஒன்றரை மணிக்கு ஆரஞ்சு உறித்து ஒவ்வொரு சுளையாக தின்று கொண்டிருக்கிறேன்.

பளிச் பளிச்சென்று புளித்தினிக்கிறது”

விஜய் பாஸ்கர்விஜய் இளைஞர். ஆனாலும் நவீன தமிழ் இலக்கியங்களில் அதிகம் பரிச்சயமுள்ளவர் போல. தனது தினசரி குடும்ப வாழ்வில், நாம் யாவருக்கும் ஏற்ப்படும் அனுபவங்கள்தாம், தனது முகநூல் பக்கத்தில் சுவராசியமான கதைகளாக எழுதுகிறார். சில நிமிடங்களுக்கு முன்னர் அவரது மேற்கண்ட வரிகளைப் படித்ததும் ‘புளித்தினிக்கிறது’ என்ற வார்த்தை என்னைக் கட்டிப் போட்டு விட்டது.

தமிழில் புதிய வார்த்தைகளை உருவாக்குவதும், மறைந்திருக்கும் வார்த்தைகளை கண்டுபிடித்தலையும் பற்றி யோசித்துக் கொண்டே எழுந்தால் என்ன ஒரு தற்செயல்! (coincidence)

அவ்வாறு நினைத்துக் கொண்டே எழுந்ததற்குக் நேற்று வெளியிடப்பட்ட நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களின் புத்தகமான ‘சொல் வேட்டை’யை படித்துக் கொண்டே தூங்கியதுதான் காரணம்.

தினமணி படிக்காதலால் அவரது வாராந்திர ‘சொல்வேட்டை’ பற்றி அறிந்திலேன். அட்லாண்டிக் என்ற பத்திரிக்கையில் பார்பரா வால்ராஃப் என்ற பெண்மணி வாசகர்களுடன் இணைந்து கூட்டாக புதிய வார்த்தைகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய ஊக்கத்தில் (inspiration?) இத்தொடரில் நம்மிடம் புழங்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை வாசகர்களிடம் இருந்து கோரி, அவற்றில் பொருத்தமான ஒரு வார்த்தையை, ஏறக்குறைய ஒரு நீதிபதியின் பணியைப் போலவே ‘இதுதான் சரியான வார்த்தையாக இருக்கலாம்’ என்று முடித்து வைக்கிறார்.

தமிழில் வார்த்தைத் தேடலை முடித்து வைத்தால், குறைந்தது பத்து பேர் ‘அது எப்படி?’ என்று கிளம்பி வருவார்கள். இராமசுப்பிரமணியம் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியிலிருப்பதால், இதுவரை ஏதும் பிரச்னையில்லை என்று நினைக்கிறேன்.

கம்பியூட்டருக்கு முன்பு சுஜாதா முன்னிலையில் கணிப்பொறி, கணிப்பி என்று ஆரம்பித்து இறுதியில் கணணி (அல்லது கணிணியா) என்று வந்து நிற்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இணையத்தில் நான் தமிழ் பழகிய பொழுது நமது பதிவுகளுக்கு மற்றவர்களின் கமெண்ட்ஸுக்கு என்ன சொல்வது என்று பல ஆலோசனைகளுக்குப் பிறகு எதிர்வினை என்று முடிவாயிற்று. இராமகி ஜெபி ஐயா அவர்களிடம் இருந்து பல வார்த்தைகள் கற்றுக் கொண்டேன். கமெண்ட்ஸுக்கு முன்னிகை, ஸீரியஸாக என்பதற்கு சேரியமாக என்பதெல்லாம் புதுமையாக இருந்தது.

முதன் முதலில் நான் மரத்தடி இணையகுழுவிற்கு எழுதிய தமிழ் மடல் என்னிடம் இன்றும் உள்ளது. பண்பலை வானொலி ஆர்ஜே பேசுவதை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதியது போல இருக்கும். இப்போது நான் எழுதுவதைக் காட்டினால், உறவினர்கள் சிலர் ‘இது என்ன புரியவே இல்லையே என்கிறார்கள்’. அவர்களது தமிழை நான் கொல்கிறேன் போல.

‘பண்ணித்தமிழை’ அழிப்பதென்றால் அது இணையத்தால்தான் முடியும் என்று நினைத்திருந்தேன். மருத்துவர் ப்ரூனோ’விலிருந்து பலரைக் குறிப்பிட வேண்டும். நேற்று நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி இராமசுப்பிரமணியம் மூலமாக தினமணி அந்தப் பணியை தன்னளவில் தொடக்கி வைத்தது என்பதை அதன் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின் அழுத்தமான அறிமுக உரைவீச்சிலிருந்து அறிந்து கொண்டேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் தனது வழக்கமான பாணியில் சுவையான கதை சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் வாசகர்களின் பங்களிப்போடு ‘சரி இதுதான்’ என்று நிறுத்துவது சற்று ஏமாற்றமாக இருந்தது. பத்திரிக்கையின் இட நெருக்கடி. அவருக்குள்ள வேலை நெருக்கடி என்று நினைக்கிறேன்.

புதிய ஆங்கில வார்த்தை ஒன்றிற்கு தமிழில் வார்த்தை இல்லாத பொழுது, அந்த ஆங்கில வார்த்தை சரியாகக் குறிப்பிடும் விளக்கத்தை அப்படியே தமிழ் வார்த்தையாக தேர்ந்தெடுப்பது காஃபியை ‘கொட்டை வடிநீர்’ என்று தமிழ்ப்படுத்துவது போலாகாதா? ஃப்ளாம்பாயண்ட் கவர்திறன் சரி, பாராஃபெர்னேலியா அடையாளச் சின்னம் என்னமோ மாதிரியிருக்கிறது.

ஆங்கிலத்தில் நிச கற்பனை பாத்திரங்களின் குணநலன்களை ஒத்த செயலுக்கு அவர்களின் பெயரை வைத்தே வார்த்தைகள் உள்ளன. சேடிஸ்ட், லின்ச், ட்ராகோனியன் போன்ற வார்த்தைகள் நிச மனிதர்களின் பெயர்களிலிருந்து உருவானவை. க்விக்சாட்டிக் கற்பனைப் பாத்திரம். டான் க்விக்சாட் குணநலனை வைத்து அந்த வார்த்தையை ‘இலக்கியல் ஆர்வக்கோளாறு’ எனறு முடித்து வைத்த நீதிபதியின் தீர்ப்பு எனது சிற்றறிவுக்குப்பட்ட அளவில் சரியல்ல என்பதை சொல்ல நினைத்தாலும், யாராவது ‘ஐயா, கண்டெம்ட் அவனை விடாதீங்க’ என்று போட்டுக் கொடுக்கும் சாத்தியக்கூறு இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்.

கணிதத்தில் எண்களோடு விளையாடுவது போல மொழியியலில் வார்த்தைகளோடு விளையாடுவது சுகமான அனுபவம். பாரதி ஆரம்பித்து வைத்தவர் என்று வைத்தியநாதன் கூறினாலும் சுஜாதாதான் தமிழில் வார்த்தை விளையாட்டை ஜனரஞ்சகமாக்கினார். அவரது ‘க்ளிக்’கினானை யார் மறக்க முடியும்?

நீதிபதி ஐம்பது வாரங்களுக்கு சொற்களை வேட்டையாடியுள்ளார். அல்லது அவருக்காக மற்றவர்கள் வேட்டையாடியதை மேற்ப்பார்வை பார்த்துள்ளார். தற்பொழுது மற்றவர்கள் தொடர்வதாக தினமணி ஆசிரியர் கூறினார். இராமசுப்பிரமணியம் கடுமையான உழைப்பாளி. 24 மணி நேரம் என்பது அவரது அன்றாட பணிகளுக்கு போதுமானது இல்லை என்பதை வழக்குரைஞர்கள் அறிவார்கள். அவற்றிற்கிடையிலேயும் அவர் நேரம் ஒதுக்கி வேட்டையாடியுள்ள வார்த்தைகள் நிலைக்க வேண்டுமென்றால், இணையத்தில் இந்த தொகுதி பரவலாக்கப்பட வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ, இணையம் கடந்த இருபது ஆண்டுகளாக சொல்வேட்டையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. வேட்டையாடுவதோடு இல்லாமல், வேட்டைப் பொருட்கள் மறை பொருட்களாக்கப்படாமல் பகிரப்படுவதால் நிலைத்தும் நிற்கின்றன. மற்ற ஊடகங்களுக்கெதிரான இணையத்தின் வெற்றி என்றே அதைக் கூறலாம்.

நீதிபதி இராமசுப்பிரமணியம் ஓய்வு பெற்றவுடன் நீதிமன்றத்தில் நடைபெறும் செயல்கள் புழங்கும் சொற்களுக்கான தமிழ் சொல் வேட்டையை இணையத்தில் ஆரம்பிக்க வேண்டுகோள் வைக்கலாம்.

சரி, இவ்வளவு அருமையான புத்தகம் ஏனோ அச்சிடப்பட்ட தன்மை திருப்தியளிக்கவில்லை. காகிதத்தின் தரமோ அதன் நிறமோ எழுத்துகளோ (ஃபோண்ட்) ஏதோ ஒன்று இலகுவாக வாசிக்க இடறலாக உள்ளது. ஆனால் அழகான கடின அட்டை. விலையும் 125 ரூபாய் என்பது மிக மலிவுதான்.

சொல்வேட்டை. நல்வேட்டை!

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....