நேற்று சுகப்ரியா’வில் ரஜினி முருகன். ஐநாக்ஸ் போல வெளியும் உள்ளும் டாம்பீகமாக இல்லை என்றாலும் ஒலி ஒளி தரம் பிரமாதமாகவே இருந்தது. ஆனாலும் படம் ஆரம்பித்ததும் ஏசியை நிறுத்தும் அல்ல குறைக்கும் பழைய சில்லறைத்தனம் போக மாட்டேன் என்கிறது போல...
ஏசியைக் கூட போடாவிட்டால் பரவாயில்லை. படத்தை முடிக்க விடாம அந்த பாட்டுகளைப் போடாமல் இருந்தால் என்னைப் போன்றவர்கள் தமிழ்படங்களை பார்க்க தைரியம் கொள்வோம். ராத்திரி வீட்டுக்குள் நுழைந்து மணியைப் பார்த்தால் அடுத்த நாள் காலை இரண்டு!
‘தன்னுடைய அப்பத்தா கொடிக்குளம் பேச்சி, ராஜ்கிரணின் வைப்பாட்டி’ என்று சொத்தில் பங்கு கேட்டு வரும் சமுத்திரகனி அதுக்கு ஆதாரமாக ஒரு போட்டோவையும், கொடிக்குளம் பேச்சிக்கு அவள் வெள்ளாமை பண்ணும் நிலத்தை எழுதிக் கொடுத்த செப்புப்பட்டயத்தையும் காண்பிக்கிறார்’
அப்படியே ‘கொடிக்குளம் பேச்சி செத்துப் போய் ஐம்பது வருசமாச்சு’ன்னு சொல்லும் சமுத்திரகனியை மடக்க சிவகார்த்திகேயன் அவள் முந்தைய வாரம்தான் இறந்ததாகச் சொல்லவும், சமுத்திரகனி சமாளித்துக் கொண்டு அவரது அப்பத்தா மேலூரில் இருக்கும் கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் என்கிறார்.
அதுக்கு ரஜினி முருகனான சிவகார்த்திகேயனின் வருங்கால மாமனாரான வக்கீல் திருநீலகண்டன் ஏன் முழிக்கணும்? செப்புப்பட்டயத்தில் நிலம் இருக்குமிடத்தை வைத்து அது மேலூரில் உள்ள கொடிக்குளம் இல்லை என்று சொல்லியிருக்கலாமே.
அதுதான் வக்கீலாயிருப்பதன் அவஸ்தை...
ஆர்குமெண்டை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தப்புறம் ‘அந்தக் கேள்விக்கு அப்படி பதில் சொல்லியிருக்கலாமே. இதைச் சொல்லியிருந்தா வேற மாதிரியாயிருக்குமே’ என்று மண்டைக்குள் ஏற்ப்படும் குடைச்சல் ராத்திரி தூங்கப்போகும் போதும் கூட என்றில்லை, சில சமயங்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வது, நாம வாங்கி வந்த சாபம்!
No comments:
Post a Comment