Saturday 3 October 2015

நீதிமன்றம், ஆர்ப்பாட்டங்கள், துண்டுப்பிரசுரங்கள்...

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு இருப்பதாக நினைவு. ஆயினும் ஊர்வலம், போராட்டம் என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது, சமீப காலம் வரை.

ஆனால், இது வரை பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் அமெரிக்காவில் நடத்துவார்கள்.

அவற்றைத் தடுப்பதற்காக 1949ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்ற கட்டிடம், வளாகம், மற்றும் சுற்றுப் பாதைகளில் மக்கள் கூடுவதோ, ஊர்வலம் நடத்துவதோ, ஆர்ப்பாட்டம் செய்வதோ, பதாகைகளை பிடிப்பதோ, பிரசுரங்களை விநியோகிப்பதோ குற்றம் என்று தடை செய்தது.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, ‘நீதிமன்றத்தின் மாண்பினைக் குலைத்து விடும் என்பதோடு, வழக்கின் போக்கினை இவ்வகையான போராட்டங்களும் தீர்மானிக்கும் என்ற எண்ணப்பாட்டினை மக்கள் மனதில் உருவாக்கலாம்’ என்பதும் காரணம்.

ஆனால் பிரச்னை, ‘அமெரிக்க சட்டமன்ற கட்டிடத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடை செய்த சட்டமானது செல்லாது’ என்று 1972ம் ஆண்டு கூறப்பட்ட தீர்ப்பில் ஆரம்பித்தது.
சில வருடங்களில் உச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள நடைபாதை (sidewalk) யில் நீதிபதிகளையும் தீர்ப்புகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இருவர் தடுக்கப்பட்டனர்.

மாவட்ட நீதிமன்றம் 1949ம் வருட சட்டம் செல்லும் என்று தீர்ப்பு கூறினாலும் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சுற்றுப்பாதையில் ஆர்ப்பாட்டம் செய்வதை தடை விதிப்பது செல்லத்தக்கதல்ல என்று கூறி சுற்றுப் பாதையில் ஆர்ப்பாட்டங்களை அனுமதித்தது.

சுற்றுப் பாதையோடு திருப்தி அடையாத போராளிகள், உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் அவ்வப்போது நுழைந்து போராட மீண்டும் வழக்கு.

மாவட்ட நீதிமன்றம் (Circuit Court) இந்த முறை சுற்றுப் பாதையில் என்ன உள்ளேயும் போராட்டம் நடத்துவதை தடை செய்வது செல்லாது என்று கூறவும் உயர்நீதிமன்றத்தில் (Court of Appeals) மேல்முறையீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அப்படியெல்லாம் உள்ளே வர முடியாது, சுற்றுப்பாதையிலேயே ஆர்ப்பாட்டங்கள் நின்று விட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இனி வழக்கு உச்ச நீதிமன்றம் போகலாம். ஆனால் தீர்ப்பு எழுதியவர் யார் என்று தெரிந்தால், ‘ஆர்ப்பாட்டமாவது மண்ணாவது, தீர்ப்பு முழுக்கவும் சரிதான்’ என்று கூறத் தோன்றும்.

பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டவரும், உச்ச நீதிமன்றம் செல்வார் என்று நம்பப்படுபவருமானவரும், நம்மவருமானவருமான நீதிபதி சீனிவாசன்!

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....