Wednesday 21 October 2015

நானா சாகிப் - புதினம்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை விடவும் மர்மம் பொருந்தியதும் தீரம் மிகுந்ததுமான வாழ்க்கை மராத்திய பேஷ்வா நானா சாகிப்’பினுடையது.


கங்கை நதியின் ‘சதிசெளரா’ கரையிலும் பின்னர் பீபிகரிலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான ஆங்கிலேய பெண்கள் மற்றும் குழந்தைகளின் மரணங்களுக்கான காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தியா முழுவதும் ஆங்கிலேய படைகளால் கொலை வெறியோடு பல ஆண்டுகளாக துரத்தப்பட்டாலும், இறுதியில் என்னவானார் என்பதற்கு இன்று வரை யூகங்களை மட்டுமே விட்டுச் சென்ற கலகத் தலைவரான நானா சாகிப்’பின் வரலாற்றில் உணர்ச்சி மிக்க திரைக்கதையொன்று ஒளிந்திருப்பதை நம் இயக்குஞர்கள் யாராவது புரிந்து கொண்டால் சரி.


எவ்விதமான விசாரணைக்கோ மன்னிப்புக்கோ இடமின்றி ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பார்ப்பவர்கள் ரத்தத்தை உறைய வைக்கும் முறையில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதோடு கலகம் ஆங்கிலேயர்களால் முற்றிலும் ஒடுக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கழிந்த சூழ்நிலையில் சில ஆங்கிலேயர்களோடு பிரஞ்சுக்காரர் ஒருவரும் இந்தியாவின் வடபகுதியை சுற்றிப் பார்க்க கிளம்புகின்றனர்.


அப்போதுதான் இயங்கத் தொடங்கியிருந்த ரயில் வண்டிகளை ‘அது ஒரு வண்டியா’ என்று கேலி செய்தபடி குடியிருக்கும் வீட்டையே வண்டி போல இயந்திரம் மூலம் இழுத்துச் சென்றால் எப்படியிக்கும் என்ற நினைப்பில் பெரிய யானை வடிவில் ஒரு நீராவி இயந்திரத்தினை வடிவமைத்து பயணப்படுகிறார்கள். எதிர்ப்படும் ஆறுகளைக் கடக்க, தரையில் மட்டுமல்லாது நீரிலும் கப்பல் போல செல்லும்.


‘இது என்ன காது குத்தல்?, ஜூல்ஸ் வேர்ன் கதையில்தான் இப்படிப் பட்ட கற்பனைகள் சாத்தியமாகும் என்றால், சாட்சாத், ஜுல்ஸ் வேர்ன் கதைதான்.


புத்தக கண்காட்சியில் ஏதோ நானா சாகிப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் என்ற நினைப்பில் வாங்கி வந்தால், வெறும் கதை என்றவுடன் சற்று ஏமாற்றமாகி விட்டது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா பற்றி இன்றைய வரலாற்றாசிரியர்கள் எழுதுவதை ‘இவர் வலதா இல்லை இடதா’ என்ற சந்தேகத்தோடேயே படிப்பதை விட எதிர்கால அரசியல் சூழல் குறித்த எவ்வித உணர்வுமின்றி ஜூல்ஸ் வேர்ன் எழுதியிருப்பதை படிப்பது நல்லதுதான் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.


நானா சாகிப்?


பயணம் செய்யும் ஆங்கிலேய கர்ணல் மன்றோ நானா சாகிப்’பின் கொடூரத்திற்கு காதல் மனைவியை பறி கொடுத்தவர். அதனாலேயே அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்.


இடையிடையே அடுத்த புரட்சியை துவக்க வேண்டும் என்ற வேட்கையோடு நானா சாகிப்’பும் வருகிறார். இறுதியில் வீரப்பன் போலவும் ஓசாமா போலவும் பொசுக்’கென்று செத்துப் போகிறார். கதையும் அதோடு முடிந்து போகிறது.


கதை என்ற வகையில் மிகவும் சுமார். மொழி பெயர்ப்பு அதை விட சுமார். அந்தக் காலக் கதை. அதிகம் எதிர்பார்க்கக் கூடாது.


ஆனால் பயணக்குறிப்பு என்ற வகையில் பல தகவல்களை அறியலாம்...


முக்கியமாக வாரணாசியிலுள்ள அவுரங்கசீப் மசூதியைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அந்த இடத்தில் முன்னொரு காலத்தில் விஷ்ணு ஆலயம் இருந்த போது, ரோம் நகரில் பக்தர்கள் சென்றதைப் போல, முழந்தாளால் மண்டியிட்டபடி, படிகளில் ஏறிச் சென்றார்களாம். தற்பொழுது அந்த இடத்தில் மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மசூதி எழுப்பப்பட்டிருக்கிறது” என்றாலும்


பீகார் பற்றிய குறிப்புகளில் “ஆனாலும் பல நூற்றாண்டுகளாக பெளத்த துறவியருடைய மடாலயங்கள், பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன, பெளத்த விகாரைகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்து தமது சமய நிறுவனங்களாக மாற்றி , சமயச் சடங்குகளை நிகழ்த்தி அதன் மூலம் கிடைத்த வருவாயில் பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர்” என்கிறார்.


ஆக ஆனைக்கும் பானைக்கும் சரிதான்...

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....