Saturday 29 August 2015

மண்டல் கமிஷன் தீர்ப்பு குறித்தான விவாதமும் ஆர்ப்பாட்டங்களும்



இந்திரா சஹானி (மண்டல் கமிஷன்) வழக்கை எடுத்துக் கொண்டோமென்றால் இடஒதுக்கீடு அதிகபட்சம் 50%தான் என்று உச்ச நீதிமன்றம் வரையறுத்ததை அதற்கான வாத பிரதிவாதங்களுக்குட்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது என்று கூற முடியுமென்றாலும், கிரீமி லேயரைப் பற்றி அவ்வாறு கூற முடியாதென்பது என்பதே எனது கருத்து. எனெனில் அரசியலமைப்புச் சட்டத்திலுமின்றி, அதனை வடிவமைத்தவர்களின் விவாதத்திலும் அப்படி ஒரு பதமே இடம் பெறவில்லை. அப்படியிருப்பினும் அந்த வழக்கில் க்ரீமி லேயர் என்ற தேவையற்ற கேள்வியினை உச்ச நீதிமன்றம் எழுப்பி தீர்வு காண முயன்றது, கிரீமி லேயர் குறித்து பொதுவில் விவாதிக்கப்பட்டு வந்ததன் தாக்கம்தான் அன்றி வேறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

மண்டல் கமிஷன் வழக்கு என்பது விபிசிங் தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் 27% பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று 13.08.90 தேதியிட்ட குறிப்பாணையினை (Office Memorandum) எதிர்த்து தொடரப்பட்ட வழக்காகும். நரசிம்ஹராவ் தலைமையிலான அரசு 25.09.91 தேதியிட்ட பிறிதொரு குறிப்பாணை மூலம் இரு மாறுதல்களை விபி சிங் அரசு ஆணையில் கொண்ர்ந்தது. முதலாவது திருத்தம், ‘27% ஒதுக்கீட்டில் பிற்ப்படுத்தப்பட்டவர்களிலும் ‘poorer section’களுக்கு முன்னுரிமை (preference) அளிக்கப்படும். தகுந்த நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலியிடங்கள் மற்ற பிற்ப்படுத்தப்பட்டவர்களால் நிரப்பப்படும்’ என்பது. இரண்டாவது, ‘மற்ற ஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்பதாகும்.

வழக்கானது இவ்விரு குறிப்பாணைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடானது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பாவிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை உரிமையினை பாதிக்கிறது எனற வாதத்தினை முன் வைத்து. ஆக, நீதிமன்றத்தின் முன் தாங்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டவர்கள் எந்த ஒரு இட ஒதுக்கீட்டிலும் இடமே பெறாதவர்கள். அவர்களது வாதம் இட ஒதுக்கீடு யார் யாருக்கு என்பதை விட இட ஒதுக்கீடே தவறு என்பதுதான்.

வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று கூறி நரசிம்ஹராவ் அரசு கொணர்ந்த 10% இடஒதுக்கிட்டீனை செல்லாது என்று கூறியது. அடுத்த மாறுதலான பிற்ப்படுத்தப்பட்டவர்களிடையே poorer section என்பதை பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஏழைகள் என்று அர்த்தம் கொள்ளமுடியாது என்று கூறி சமூக ரீதியில் மேலும் பின் தங்கிய வகுப்பினர் என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும் என்றும் கூறியது. அதாவது பிற்ப்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர் என்று பிரிக்கிறோமே, அதனை.

மேலும் முன்னுரிமை (preference) என்ற பதத்தினையும் அப்படியே அர்த்தம் கொள்ள முடியாது என்றும் கூறியது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் அனைத்து ஒதுக்கீடும் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு போய் பிற பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏதும் கிடைக்காது. எனவே இரு வகுப்பினருக்கும் எந்த விகிதத்தில் பகிர்ந்தளிப்பது என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்த்தது.

நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த திருத்தத்தின் அர்த்தம் படிப்பவர்களுக்கு தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தாலும் ‘poorer section’ மற்றும் ‘preference’ ஆகிய வார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் அவ்வாறாக புதிய அர்த்தத்தினை அளிக்கவில்லையெனில் அந்த திருத்தத்தினையும் செல்லாது என்று தள்ளுபடி செய்ய வேண்டியிருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை.


மண்டல் கமிஷன் வழக்கு வரை, ஏன் இந்த நாள் வரை பிற்ப்படுத்தப்பட்டவர்கள் சார்பான சக்தி வாய்ந்த பொதுக்கருத்து பரந்துபட்ட அளவில் இந்தியா முழுவதும் ஏற்ப்படவில்லை என்பது எனது அனுமானம். ஏதோ தமிழகத்தில் மட்டுமே பெரிய பிரச்னையாக எடுத்து வைக்கப்படுகிறது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டினை உரிமை என்ற அளவில் ஒரு பொதுவான கருத்தாக இருக்கையில், அகில இந்திய ஊடகங்களை கவனித்தால் இட ஒதுக்கீட்டினை சலுகை என்ற அளவிலேயே அணுகுவதை பார்க்கலாம்.

ஆயினும் மண்டல் கமிஷன் என்ற பூதம் விபி சிங் தயவால் கிளப்பி விடப்பட்ட பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சியாலும் அதனை எதிர்க்க முடியாமல், ஊடகங்களின் கருத்தும் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தவிர்க்க முடியாத ஒன்று என்ற கருத்தின் அடிப்படையில் உருப்பெற்றன.

ஆயினும் இட ஒதுக்கீடு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கருத்திற்கு விரோதமானது என்ற வகையில் தயக்கத்துடனே அணுகப்படுகையில் ‘அதிகபட்சம் 50%’ மற்றும் ‘சரத் யாதவின் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு தேவையா?’ என்ற வாதங்கள் எடுத்து வைக்கப்படுகையில் அதனை எதிர் கொள்ள யாருமின்றி ஊடகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக்கருத்தாக நிலவுகிறது. இன்று கூட தமிழகத்திலேயே பிரபலமாக உள்ள பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குமுதம், துக்ளக், குங்குமம், கல்கி போன்றவற்றில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்து, கதை, துணுக்கு, செய்திகளை அரிதாகவே பார்க்க வாய்ப்புண்டு. ஆனால், க்ரீமி லேயர் என்பது தேவையில்லை என்ற ஒரு கருத்தினை நான் அறிந்த வரையில் எப்போதுமே பார்த்ததில்லை.

இவ்வாறான ஒரு நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கும் மண்டல் கமிஷன் வழக்கில் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 50%த்திற்கு மிக கூடாது என்றும் க்ரீமி லேயர் என்று ஒரு வகுப்பிற்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் கூறுவது இலகுவான ஒரு காரியம் என்பது எதிர்பார்த்ததுதான்.

அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கு ஏதும் அதிகபட்சம் வரையறுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூற முடியுமா? என்ற கேள்வியினை சிலர் எழுப்பினாலும், சட்டப்படி அது இயலக்கூடிய காரியமே! உலகிலுள்ள அனைத்து அரசியலமைப்பு சட்டங்களிலும் நமது சட்டம் மிகவும் பெரியது எனினும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனைத்து பிரச்னைகளையும் எதிர்நோக்கி அதனை வடிப்பது என்பது இயலாத காரியம். அவ்வாறான நேரங்களில், அரசியலமைப்பு சட்டகுழு ஒவ்வொரு பிரிவினையும் பற்றி நடத்திய விவாதங்களை அலசிப்பார்ப்பது இவ்வாறு சட்டமியற்றியவர்களின் நோக்கத்தினை அறிய உதவும்.

வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்க வழிகோலும் அரசியலமைப்பு சட்டத்தின் 16(4) வது பிரிவு குறித்து 30.11.48 அன்று நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு.அம்பேத்கர் கூறுவதை கவனியுங்கள்.

Let me give an illustration. Supposing, for instance, reservations were made for a community or a collection of communities, the total of which came to something like 70 per cent of the total posts under the State and only 30 per cent are retained as unreserved. Could anybody say that the reservation of 30 per cent as open to general competition would be satisfactory from the point of view of given effect to the first principle, namely, that there shall be equality of opportunity? It cannot be in my judgment. Therefore the seats to be reserved, if the reservation is to be consistent with sub-clause (1) of Article 10, must be confined to a minority of seats...........”

அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் பல உறுப்பினர்களின் இட ஒதுக்கீடு குறித்து மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் திரு.அம்பேத்கார் ஏறக்குறைய உறுதிமொழி போல பேசிய வாக்கியங்கள் இவை.


எனவே, இட ஒதுக்கீடானது பாதிக்கும் மேலாக இருத்தல் இயலாது என்று மண்டல் கமிஷன் வழக்கில் கூறியதற்கு திரு.அம்பேத்கரின் உரையும் காரணம். ஆயினும் மண்டல் கமிஷன் வழக்கில் எந்த சந்தர்ப்பத்திலும் 50% அதிகமாக இருத்தல் இயலாது என்றும் கூறவில்லை. சில அசந்தர்ப்பமான நிலைகளில் 50% வரையறையினை மீறலாம் என்று அனுமதியளிக்கிறது. எந்த மாதிரியான நிலைகள் என்பதற்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரிகளுக்குள் தமிழகத்தினை கொணர முடியுமா? என்பதை அறிய இனி பொறுத்திருக்க வேண்டும்.

ஆனால் க்ரீமி லேயர்?

அரசியலமைப்பு குழு அப்படி ஒரு வகுப்பினைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. விவாதிக்கவும் இல்லை. பங்கு பெற்ற யாரும், ‘உங்களது மகனுக்கும் இட ஒதுக்கீடு தேவையா’ என்று அம்பேத்கரைப் பற்றி வினா எழுப்பவில்லை. எனவே அரசியலமைப்புச் சட்டத்திலும் அவ்வாறான ஒரு பிரிவினரைப் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

பின்னர் ஏன் உச்ச நீதிமன்றம், முக்கியமாக மண்டல் கமிஷன் வழக்கில் க்ரீமி லேயரைப் பற்றி கேள்வி எழுப்பி அதற்கு விடை காண முயன்றது? ஒரு வேளை இந்த விவாதம் நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த இரண்டாவது குறிப்பாணையால் எழுந்திருக்கலாம். ஏனெனில் அந்த குறிப்பாணையின் மூலம் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ‘poorer section’கு முன்னுரிமை (preference) அளிக்கப்பட்டது. இது க்ரீமி லேயரைப் பற்றியே குறிப்பிடுவதாக இதனைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள்.

ஆனால், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட இரு ஆங்கில பதங்களுக்கும் புதிய அர்த்தம் கூறி குறிப்பாணை சரியே என ஏற்றுக் கொண்டது. அதன் மூலம் அரசு குறிப்பாணையும் க்ரீமி லேயரைப் பற்றி குறிப்பிடவில்லை என்றாகிவிட்டது. இனியும் நீதிமன்றம் க்ரீமி லேயர் என்ற கேள்வியினை எழுப்பியது என்றால், நீதிமன்ற சுவர்களை தாண்டி வெளியே நடந்த வாத பிரதிவாதங்களை தனது கருத்தில் உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது என்றுதான் அனுமானிக்க முடியும்.

ஏனெனில், தமிழக, கேரள, பீகார் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதாடிய அனைவருமே க்ரீமி லேயர் என்ற பாகுபாட்டினை வெகுவாக எதிர்த்தனர். வினோதமாக, ‘பிற்ப்படுத்தப்பட்டவர்களில் சிலர் வெகுவாக முன்னேறி விட்டதாகவும், அவர்கள் இட ஒதுக்கீட்டின் முழு பலனையும் அபகரித்துக் கொள்வதாகவும்’ என்ற க்ரீமி லேயர் வாதம் இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டினால் திறமைக்குறைவு ஏற்ப்படும் என்ற அவர்களது வாதம் உண்மையெனில், மேலும் திறமைக்குறைவினை ஏற்ப்படுத்தும் க்ரீமி லேயர் வாதம் அவர்களாலேயே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க முரணாகும். மேலும் இட ஒதுக்கீடு ‘அனைவரும் சமம்’ என்ற உரிமைக்கு எதிரானது என்பது வழக்கின் அடி நாதமாக இருக்கையில் க்ரீமி லேயர் எந்த விதத்திலும் அந்த வாதத்திற்கு துணை புரியப் போவதில்லை என்ற பொழுதிலும், அந்த வாதம் வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன் எழுந்த பிரச்னையும் இட ஒதுக்கீடு குறிப்பாணை சம உரிமையினை பாதிக்கிறதா என்பதுதான். உச்ச நீதிமன்றமும் இட ஒதுக்கீடு மொத்தமாக 50%க்குள் இருக்கையில் சம உரிமையினை பாதிப்பதாகாது என்று கூறியது சட்டத்தினை பரிசீலனை செய்யும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான்.

ஆனால், தானாக முன் வந்து க்ரீமி லேயர் என்று பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஒரு புது வகுப்பினை வரையறுக்க முயன்றது, நீதிமன்றம் அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்பது, நீதிபதிகளுக்கு தக்க மரியாதையுடன் நான் கருதும் எண்ணம்.


சமீப காலமாக, ‘இட ஒதுக்கீடு அல்ல, இடப் பங்கீடு என்பதே சரியான வார்த்தை, என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. கவர்ச்சிகரமாக இருக்கிறது என்ற அளவிலேயே, இவ்வாதத்தினை கண்ணுற்ற நான் பின்னர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அரசியலமைப்பு சட்டக்குழுவில் நடைபெற்ற விவாதத்தினை படிக்கையில் இடப்பங்கீடு என்ற கருத்தில் மிகவும் வலு இருப்பதாக உணருகிறேன். இந்த வகையான ஒரு விவாதம் துரதிஷ்டவசமாக இது வரை உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த எந்த வழக்கிலும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில், கிரீமி லேயர் குறித்தான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எவற்றிலும் இவ்வகையான வாதம் பற்றி குறிப்பு இல்லை.

கிரீமி லேயர் பாகுபாட்டினை உச்ச நீதிமன்றம் வகுத்ததில், எனது சிற்றறிவிற்கு பட்ட வகையில் சட்ட ரீதியிலான காரணம் இல்லை என்றே தோன்றுகிறது. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையினை நம்மிடையே நிலவும் ‘இட ஒதுக்கீட்டின் பலன்களையெல்லாம், பிற்ப்படுத்தப்பட்டவர்களில் முற்ப்படுத்தப்பட்டவர்களே எடுத்துக் கொண்டு கீழ் மட்டத்தின் அதன் பலன்கள் சென்று சேராமல் தடுக்கிறார்கள்’ என்ற சாதாரண நடுத்தர வர்க்கத்து பொதுக்கருத்தினை வைத்தே அணுகியுள்ளது. இந்த ஒரு காரணத்தினை தவிர வேறு வலுவான காரணங்கள் எதுவும் இது வரை க்ரீமி லேயர் குறித்தான தீர்ப்புகளில் இல்லை.


இந்த பொதுக்கருத்திற்கு ஒரு சட்ட முலாம் பூசும் வண்ணம், மண்டல் கமிஷன் வழக்கில் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் முற்ப்படுத்தப்பட்டவர்களான ‘க்ரீமி லேயர்’ ஒரு தனி வகுப்பாக கருத்தப்பட்டு அந்த வகுப்பு ‘சமூக மற்றும் கல்வியில் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு’ என்பதின் விளக்கத்திற்குள் வராத வகுப்பாக கருதப்பட வேண்டும் என்று விளக்கம் மண்டல் கமிஷன் வழக்கில் கூறப்படுகிறது.


‘இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக பிற்ப்படுத்தி வைக்கப்பட்டவர்களை உயர்த்தும் ஒரு முறை அல்லது முற்ப்படுத்தப்பட்டவர்களுடன் போட்டியிட முடியாத வகுப்பினரை கை தூக்கி விடும் ஒரு கருவி’ என்ற பரவலான கருத்து சரியாக இருக்குமிடத்து இவ்வாறு ‘க்ரீமி லேயரையுமா கை தூக்கி விட வேண்டும்?’ என்ற கேள்வி எழுவது இயல்பே! ஆனால், இட ஒதுக்கீடு என்பது இவ்வாறு ‘கை தூக்கி விடும்’ கருவி அல்ல. மாறாக இந்த நாட்டில் வசிக்கும் பல்வேறு மக்கள் குழுக்கள் அனைத்தும், போதுமான அளவில் அரசின் அதிகாரத்தில் பங்கேற்க வைக்கும் ஒரு ‘இடப் பங்கீடு’ என்று கூறப்பட முடியுமானால் அவ்வாறான ஒரு கேள்வி எழாது.


அரசியலமைப்பு சட்டக்குழு உறுப்பினர்களில் சிலர் ‘இட ஒதுக்கீடு’ என்ற அளவிலேயே இந்தப் பிரிவினை உணர்ந்து தங்களது கருத்தினை வைத்தாலும் அனைவரும் அவ்வாறு கருதவில்லை. உதாரணமாக மதறாஸ் இஸ்லாமிய உறுப்பினரான முகமது இஸ்மாயில் சாகிப் தனது உரையின் இறுதியில் கூறுவது கவனிக்கத்தக்கது,

Reservation in services is one of the measures we can adopt to bring about contentment among people. You can then say to the people, “Look here, you have your proper share in the services and you have nothing to complain” When people themselves find that they are given as good an opportunity as others, harmony will be there and so called communalism will not come at all ..... Therefore, I say that one of the ways of removing disharmony and producing harmony, is to make provision for the people’s representation in the services and to make them feel that they have got a real share and an effective share in the governance of the country

குழுவில் உரையாற்றிய அனைவருமே, அரசுத்துறையில் போதுமான அளவில் அனைத்து வகுப்பினரும் பிரநிதித்துவம் பெற வேண்டும் என்ற அளவிலேயே இப்பிரச்னையினை அணுகியுள்ளதாக தெரிகிறது. இட ஒதுக்கீட்டிற்கு வழிகோலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(4) கூறுவதும் அவ்வாறானதாகவே உள்ளது. அதாவது,

Nothing in this article shall prevent the state from making any provision for the reservation of the appointments or posts in favour of any backward class of citizen, which in the opinion of state, is not adequately represented in the services of the state

எனவே இட ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு தனிப்பட்ட வகுப்பும் அரசு துறைகளில் போதுமான பிரநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காகவே தவிர தகுதி குறைந்தவர்களை தூக்கி விடும் செயலல்ல என்ற கருத்து வலுவானதாகவே படுகிறது.

பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு (backward class) என்றால் என்ன என்ற கேள்வி குழுவின் விவாதங்களில் முக்கியமாக எழுப்பப்பட்டாலும், அதனை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவில்லை. ஏனெனில், சிறுபான்மையினர் இவற்றில் வருவார்களா என்ற சந்தேகம், சிறுபான்மை இன உறுப்பினர்களுக்கு இருந்தாலும், அவர்களையும் இந்த வரையறைக்குள் கொண்டு வர வேண்டுமென்பதாற்கவே ஜாதி (caste) என்று கூறாமல் வகுப்பு (class) என்று கூறப்பட்டதாக மண்டல் கமிஷன் வழக்கில் கூறப்பட்டது. மேலும், மார்க்சிய சிந்தனையிலான பொருளாதர அடிப்படையிலான வர்க்கம் என்று அர்த்தப்படவே படாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

எனவே ஒரு வகுப்பினை முன்னேற்றுவது என்பதனை விட அனைத்து வகுப்பிற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்தப் பிரிவின் நோக்கம் என்றே நான் நினைக்கிறேன். எனெனில், விவாதத்தின் இறுதியில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், விவாதத்தினை முடித்து வைக்கும் வகையிலும் அம்பேத்கர் அவர்கள் பேசியது முக்கியமானதாகும்.

firstly, that there shall be equality of oppertunity, secondly that there shall be reservation in favour of certain communities which have not so far had a ‘proper look in’ so to say into the administration ..............................we had to reconcile this formula with the demand made by certain communities that the administration which has now- for historical reasons-been controlled by one community or a few communities, that situation must disappear and that the others also must have an opportunity of getting into public services

இந்த விளக்கத்திற்கு பின்னரே அம்பேத்கர், மண்டல் கமிஷன் வழக்கில் பயன்படுத்தப்பட்ட 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட முடியுமா என்ற கருத்தினை எடுத்து வைத்து, எது பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு என்பதை அரசே தீர்மானிக்கட்டும் என்று கூறி விவாதத்தினை முடித்து வைத்தார். அம்பேத்கரின் இந்த விளக்கத்திற்கு பின்னரே இந்தப் பிரிவு அரசியலமைப்பு சட்டக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, நமது நாட்டில் ஜாதி ரீதியிலாகவோ, மத ரீதியிலாகவோ அல்லது மொழி ரீதியிலாகவோ தனித் தனி மக்கள் குழுக்கள் உள்ளன. காரணம் எதுவாக இருப்பினும், அரசு அதிகாரத்தில் ஒரு குழுவின் பங்கு மொத்த மக்கள் தொகையில் அதன் சதவிகிதத்திற்கு வெகுவான அளவில் குறைவாக இருக்கையில், அரசு அதிகாரத்தில் தமக்கு பங்கில்லை என்று கருத வாய்ப்பிருக்கிறது. அவ்வகையான பிளவினை தவிர்க்கவே இட ஒதுக்கீடு. இவ்வாறான நிலையில், ஒரு மக்கள் குழுவினை மொத்தமாக கணக்கில் எடுத்தல் மட்டுமே அரசியலமைப்பின் நோக்கத்தினை செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.


எனவே க்ரீமி லேயர் கொள்கை என்பது, சட்ட ரீதியிலானது அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து. இட ஒதுக்கீட்டினை மேற்போக்காக அணுகுபவர்களுக்கு மட்டுமே, இது ஏதோ வலுமிக்க ஒரு கருத்து போல தோற்றமளிக்கும். உச்ச நீதிமன்றம் எவ்வாறு பொதுக்கருத்தினை ஒட்டி தனது க்ரீமி லேயர் சட்டத்தினை வகுத்துள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணங்களை கூற முடியும்.

பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு, க்ரீமி லேயர் என்ற வகையில் உச்ச நீதிமன்றமானது எவ்வித விமர்சனத்துக்கும் ஆளாகாமல் தப்பித்துக் கொண்டது. ஏனெனில், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பதே, நான் ஏற்கனவே கூறியபடி தமிழகத்தினை தவிர பிற மாநிலங்களில் ஏதோ குற்ற உணர்வுடனே ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கருத்தாக உள்ள நிலையில் க்ரீமி லேயர் கொள்கையினை எதிர்த்து யாரும் வாயை திறக்கக் காணோம்.

ஆனால், நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அட்டவணைப் பிரிவினரிடையும் க்ரீமி லேயர் கொள்கையினை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டதுமே, க்ரீமி லேயர் கொள்கைக்கு எதிரான கருத்துகள் வைக்கப்பட்டன. எதிர்வினைகள் பலமாக இருந்தது. உடனடியாக அட்டார்னி ஜெனரல் மிலன் பானர்ஜி ‘நாகராஜ் வழக்கின் முடிவு இந்திரா சஹானி வழக்கிற்கு மாறாக உள்ளது, எனவே அது ஏற்றுக்கொள்ளப்படாது’ என்கிறார் (இதனை எடுத்துக்காட்டி திரு.பத்ரி நாராயணன் தனது வலைப்பதிவில் பிரச்னை முடிவுக்கு வந்ததாக எழுதுகிறார். பத்ரி அவர்களை இவ்விதமான கருத்தாங்களுக்கு ஒரு அடையாளமாக கொண்டால், ‘அப்பாடா, இதை இனி யாரும் கிளற வேண்டாம்’ என்ற தொனி புரியும்).

இந்துவில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் விஸ்வநாதன், நாகராஜ் வழக்கில் அட்டவணைப்பிரிவினருக்கு க்ரீமி லேயர் என்பதாக கூறப்படவில்லை என்று எழுதுகிறார். உடனே ‘ அட்டவணைப் பிரிவினருக்கு ஆபத்தில்லை. யாரும் கலவரப்படத் தேவையில்லை’ என்ற வகையில் இது குறித்த விவாதத்தினை அமர்த்தும் வண்ணம் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஆந்திர அரசு அட்டவணைப் பிரிவினருக்குள் ‘உள் இட ஒதுக்கீட்டினை’ அமுல்படுத்தும் ஒரு சட்டம் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றம், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்குள் BC, MBC என்று பிரிப்பதைப் போல அட்டவணைப்பிரிவினரை பிரிக்க இயலாது என்று கூறிய தீர்ப்பினை எடுத்துக் காட்டி பிற்ப்படுத்தப்பட்டவர்களைப் போல அட்டவணைப்பிரிவினரை கருதுதல் இயலாது என்றும் கூறப்பட்டது. இப்போது இந்த பிரச்னை எங்கும் பேசப்படுவதேயில்லை.


ஆனால், நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகவே க்ரீமி லேயரை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், அந்த வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்னை அட்டவணைப் பிரிவினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தினைப் பற்றியது. அந்த திருத்தத்தினை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் தெளிவாகவே கூறுகிறது

These impugned amendments are confined only to SCs and STs. They do not obliterate any of the constitutional requirements, namely, ceiling-limit of 50% (quantitative limitation), the concept of creamy layer ...................................We reiterate that the ceiling-limit of 50%, the concept of creamy layer ................... are allconstitutional requirements

உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை எவ்வாறு எடுத்துக் கொண்டாலும், நான் கூற வருவது என்னவென்றால், அட்டவணைப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடானது நாடு தழுவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றான கருத்தாக இருக்கையில், க்ரீமி லேயர் குறித்தும் வலுவான எதிர் கருத்து இல்லை. எனவே, பத்திரிக்கைகள் நாகராஜ் வழக்கில் க்ரீமி லேயர் பற்றிக் கூறப்பட்டதை பெரிய அளவில் செய்தியாக்க தேன் கூட்டினை கலைத்தது போல ஆவேசமான எதிர்ப்புகள் எழுந்தன. அதனை மட்டுப்படுத்தும் வண்ணமே, ஏற்கனவே கூறிய சப்பைக்கட்டுகள்.


இக்கட்டுரை முழுவதும் நான் எடுத்து வைத்த எனது அனுமானங்கள் சரியாக இருப்பின், அட்டவணைப் பிரிவினருக்கும் க்ரீமி லேயர் கொள்கை பொருந்தும் என்று தெளிவாக ஒரு தீர்ப்பினை தர உச்ச நீதிமன்றம் தயங்கும். தொடர்ந்து நடக்கும் செய்திகள் எனது அனுமானம் சரியே என உணர்த்துகிறது.


இறுதியாக, பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே க்ரீமி லேயர், தாழ்த்தப்பட்டவர்களுக்கல்ல. க்ரீமி லேயர் கொள்கையினை வரையறுத்த மண்டல் கமிஷன் வழக்கு அட்டவணைப் பிரிவினருக்கல்ல என்று பிரச்னையினை தணிக்கும் எவருமே, ஏன் அவ்வாறு பொருந்தாது என்று கூறுவதில்லை.

ஏனெனில், க்ரீமி லேயருக்கு ஏன் இட ஒதுக்கீடு கூடாது என்ற பொதுக்கருத்தினை சட்டக் கருத்தாக வைத்த உச்ச நீதிமன்றத்தின் காரணங்கள் அப்படியே அட்டவணைப் பிரிவினருக்கும் பொருந்தும். பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு க்ரீமி லேயர் என்றால், அட்டவணைப் பிரிவினருக்கும் அப்படியே!

ஆனால், அவ்வாறில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறுமானால், ‘பொதுக்கருத்துகளும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பாதிக்கும் ஒரு காரணி’ என்ற எனது அனுமானம் உண்மையாகும். அப்படி ஒரு நிலையில் அது அப்சல் வழக்கானாலும் சரி, இட ஒதுக்கீடு பிரச்னையானாலும் சரி, நீதிமன்ற தீர்ப்பினைப் பொறுத்து ஆர்ப்பாட்டங்கள் கூடாது என்று கூறுவதில் நியாயம் இல்லை, ஏனெனில் ஆர்ப்பாட்டம் என்பது பொதுக்கருத்தினை உருவாக்கும் முக்கியமான கருவிகளில் ஒன்றுதானே.

(இட ஒதுக்கீடு க்ரீமி லேயர் மற்றும் அப்சல் குரு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து 28/10/06 அன்று எழுதப்பட்ட கட்டுரையின் இரண்டாம் பகுதி)

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....