Sunday 2 August 2015
பேகாஸ் (2012)
குர்திஸ்தான்; உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் துயரங்களில் பாலஸ்தீனத்தையும் விட அவலம் மிகுந்தது. அந்த அவலத்தையும் சுவையாக்கி தொடர்ந்து திரைப்படங்கள் உருவாக்கப்படுவதுதான் அதிசயம்.
இயலாமையின் ஒரே ஆறுதல் கலைதான் போல.
சதாம் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி ஸ்வீடனில் வசித்து வரும் கர்ஸான் காதர் என்ற குர்திஸ் இளைஞர் இயக்கிய பேகாஸ் (2012) என்ற குர்திஸ் படத்தை நேற்று இருமுறை தொடர்ந்து பார்க்க நேரிட்டதில் வருத்தமில்லை. இரண்டாம் முறை அதன் ஆழமான ஒளிப்பதிவை நிதானமாக ரசிக்க முடிந்தது. எந்தக் காட்சியை நிறுத்தினாலும், நேஷனல் ஜியாக்கிரபிக் புத்தகத்தை புரட்டுவது போல அப்படியொரு காட்சியமைப்பு.
நிதானமா? 1990ல் குர்திஸ் நகரமொன்றில் நிகழுவதாக சொல்லப்படும் திரைக்கதை முதல் காட்சியிலேயே ஜெட் வேகத்தில் கிளம்பி ஒரு காப்பி குடிக்கலாமா என்று நாம் நினைப்பதற்குள்ளாகவே முடிந்து விடுகிறது.
துடிப்பான குட்டிப்பையன் ஸ்சானாவும் (Zana) பொறுப்பான அண்ணன் டானாவும் (Dana) போரில் பெற்றோர்களை இழந்தவர்கள். அம்மா நினைவுகள் மிச்சமிருப்பினும் அதற்காகவெல்லாம் வருந்த நேரமின்றி ஷூ பாலிஷ் செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். உள்ளூர் திரையரங்கில் பார்த்த சூப்பர்மேன் அவர்களைக் கவர அமெரிக்காவிற்கு சென்று சூப்பர்மேனைப் பார்த்து விட்டால் சதாமின் வீரர்களைப் புரட்டியெடுத்து தங்களது கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்று அதற்காக பணம் சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். இடையே அவர்களது ஒரே துணையாக இருக்கும் தாத்தாவின் மரணத்திற்குப் பின்னர் அமெரிக்கா நோக்கிய அவர்களது பயணம் தொடங்குகிறது.
இதற்குள் ‘காக்கா முட்டை’ படம் உங்கள் நினைவுக்கு வந்தால், எது காப்பி எது இன்ஸ்பையர் என்று இங்கே பெரிய பட்டிமன்றமே நடக்கிறது இல்லையா, எது இன்ஸ்பையர் என்பதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால், பேகாஸைப் பாருங்கள்.
காக்கா முட்டையில் கதை வேறு. வேறு காட்சியமைப்பு. ஆயினும் இதன் பாதிப்பிலேயே காக்கா முட்டை கருக்கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு ஸ்சானா டானாவை நொடிக்கு முன்னூறு தடவை ‘காக்கா’ (அண்ணன்) என்று அழைப்பதை, தாத்தாவின் மரணத்தைப் போலவே ஆதாரமாகக் கூறலாம்.
இல்லை இறுதியில் 'சூப்பர்மேனும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்' என்று கதறுவதையும் கூடக் கூறலாம்.
பேகாஸ் இயக்குஞர் ‘காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி’ இரண்டாம் பாகத்தினால் ஒரு வேளை இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம். பிரிந்த சகோதரர்கள் உணர்ச்சிகரமாக இணையும் காட்சியை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்.
பேகாஸ் என்றால் வீடில்லாதவன் என்று பொருளாம். மொத்த குர்திஸ் மக்களையும் குறிக்கும் குறியீடு என்பதாகவே புரிகிறது. இன்னார்தான் என்றில்லாமல் அனைவரிடம் மானாவாரியாக ஸ்சானா அடிபடுவதிலும் அதையே உணர்த்தப்படுகிறோம்.
குறியீட்டையெல்லாம் விடுவோம். நிமிடத்து நிமிடம் முகத்தில் மாறும் உணர்ச்சிகளாலும் தொணதொணவென்ற பேச்சாலும் ஸ்சானா, ஏற்கனவே நம் மனதில் நிறைந்துள்ள சின்ன காக்கா முட்டையை ‘கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்’ என்று சொல்லி தானும் நெருக்கி உட்கார்ந்து கொள்கிறான்.
ஸ்சானாவை உதறுவதற்கு கொஞ்ச நாள் பிடிக்கும்...
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....
-
‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத...
-
“நள்ளிரவு ஒன்றரை மணிக்கு ஆரஞ்சு உறித்து ஒவ்வொரு சுளையாக தின்று கொண்டிருக்கிறேன். பளிச் பளிச்சென்று புளித்தினிக்கிறது” விஜய் பாஸ்கர்விஜ...
-
வாஜ்பாய் அரசு அணுகுண்டு வெடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்த ஒரே விஷயம் , மருத நாயகம் படத்தை கமல்ஹாசன் எடுக்க முடியாமல் போனதுதான...
No comments:
Post a Comment