Thursday 27 August 2015

“மரிய ‘லூஸ்’ அந்தோணி”


“மரிய ‘லூஸ்’ அந்தோணி”

என்ற டவாலியின் சத்தமான குரலில் நீதிமன்றத்தில் தலையைக் குனிந்து படித்துக் கொண்டிருந்தவன் சற்று திடுக்கிட்டுப் போனேன். அதுவரை இறுக்கமாக ‘காலிங் ஒர்க்’ நடந்து கொண்டிருந்த அந்த தாம்பரம் நீதிமன்றத்தில், ஏதோ பார்ட்டி’யை டவாலி இப்படி அழைத்ததில் ஆங்காங்கே புன்னகைக் கீற்றுகள்.

நல்லவேளை சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.


 பெஞ்ச் க்ளார்க், எதுவும் நடவாதது போல முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, ‘திரும்ப கூப்பிடுங்க. மரிய க்ரூஸ் அந்தோணி’

டவாலி இன்னமும் சத்தமாக, ‘மரிய லூஸ் அந்தோணி’ என்றதும் நீதிபதி ‘இது கதைக்காகாது’ என்ற பாவனையில் குனிந்து மரிய அந்தோனியை எக்ஸ்பார்ட்டியாக்கி உத்தரவு எழுத ஆரம்பித்து விட்டார்.

இருபது வருடங்களுக்கு முன் திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், ‘இந்திரா காந்தி’ என்று சத்தமாக அக்யூஸ்ட் ஒருவரை கூப்பிட்டது வேடிக்கையாக இருந்தது. அங்கே ‘ஐகோர்ட் துரை’ என்று கூட ஒரு வழக்காடி உண்டு.

ஆனால் என் பெயரே ஒருமுறை அப்படிக் கூப்பிடப்படுவதைக் கேட்கையில் வெட்கமாகி விட்டது.

மாஜிஸ்டிரேட்டாக வேலை கிடைத்து வெளியூர் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடந்து கொண்டிந்தது.

சாதாரண உடையில் பெஞ்சில் அமர்ந்திருந்தவனைப் கவனித்த நண்பர் டவாலியைக் கூப்பிட்டு ஏதோ சொல்ல, அவர் நேராக வாசலுக்குச் சென்று, ‘பிரபு ராஜதுரை’ பிரபு ராஜதுரை’ என்று சத்தமாக கூப்பிடவும் நடப்பது என்னவென்று எனக்கு புரியும் முன்னரே மாஜிட்டிரேட் நண்பர் பதறியபடி, ‘யோவ் இங்க வாய்யா இங்க வாய்யா' என்று டவாலியை சத்தமாக அதட்டியபடியே என்னையும் பார்த்து அசட்டுத்தனமாக சிரித்தார்.

‘இல்லடா, பிரபு ராஜதுரைன்னு அங்க ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவரைக் கூப்பிட்டு என் ரூமுல இருக்கச் சொல்லுன்னுதான் சொன்னேன்’ என்றார் பின்னர்.

‘நான் நம்பமாட்டேன். பழைய கடுப்பையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கிட்டே’ என்றேன்.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....