Saturday 1 August 2015

பறவை மனிதர் பால்பாண்டி

“நா யாருன்னு தெரியுதாய்யா’ன்னு போனில் கேட்டார். மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயாவைத் தவிர வேறு யாருக்கு இப்படி குரல் வரும்,ன்னேன். ‘ஹாஹ்ஹா’ன்னு சிரிச்சிட்டு ‘இந்த அன்றில் பறவை’ன்னா என்னய்யா’ன்னார். ‘ஐபிஸ் வெரைட்டிங்க. இணை தவறிப்போச்சுன்னா துணையும் வாழாது’ன்னேன். ‘வார்ரே வாஹ்’ன்னாரு”

“தங்கம் தென்னரசு ரொம்ப அக்கறையா விசாரிப்பார். கனிமொழி நல்லாத் தெரியும் ஆனா இந்தப் பிரச்னைக்கு அப்புறம் நான் அவங்களை தொடர்பு கொள்ள விரும்புறதில்லை”

“அப்ப ஏழாவது படிச்சுட்டிருந்தேன். அப்பா ஏதோ சொல்லிட்டாருன்னு மரத்தடியில் வந்து உட்கார்ந்திருந்தேன். அங்கே கூட்டிலிருந்து விழுந்த மூனு பறவைக் குஞ்சுங்க கீழே கிடந்த மீன்களை சாப்பிடப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு குஞ்சுக்கு இறக்கை ஒடைஞ்சு இருந்தது. இன்னொன்னுக்கு ஒரு கால் ஒடைஞ்சு இருந்தது. அந்த ரெண்டும் எப்படியோ தத்தி தத்திப் போய் மீனை எடுத்துச்சு. இன்னொரு குஞ்சுக்கு ரெண்டு காலும் ஒடைஞ்சு போய் எடுக்க முடியல”

“உடனே கடைக்கு போய் ஒரு தூண்டில வாங்கி மீனைப் புடிச்சு மூனுக்கும் கொடுத்தேன். அடுத்த நால் ரெண்டு மட்டய வச்சு அதோடு ஒடைஞ்ச கால சுத்தி கட்டி கொஞ்சம் நல்லெண்ணய் போட்டேன். கொஞ்சநாள்ல ஏதோ இழுத்து நடக்கற மாதிரி கால் சரியாயிட்டு. அப்புறம் இப்படியே மீனைப் புடிக்குறதும். கீழே விழுற குஞ்சுகளுக்கு இரை போடுறதுமா பழக்கமாயிருச்சு”

“குஜராத்தில் நிர்மா கம்பெனியில் வேலை பார்த்தாலும், மனசு கூந்தன்குளத்திலேயே இருந்தது. எம் பொண்டாட்டி உம் மனசு பறவை மேலேயே இருந்தா அவளுக்கும் அதுதான்னு சொல்லிட்டு ஊருக்கே வரச் சொல்லிட்டா. அவ நகை நட்டெல்லாம் வித்து மீன் வாங்கிப் போட்டு குஞ்சுகளைப் பாத்துக்கிட்டா”

“சலீம் அலி ஐயா கூந்தன்குளம் வந்தப்ப, போய் வணக்கம் சொன்னேன். வணக்கம்னாரு. அவருக்கு பதினைந்து மொழி தெரியும். நான் பேசுறதைக் கேட்டுட்டு இந்தியா முழுவதும் சலீம் அலின்னு என்னைத் தேடுறாங்க. எனக்கும் பெரிய சலீம் அலி இங்க இருக்கார்’ என்றார்”

சலீம் அலியை கூந்தங்குளம் பால்பாண்டி பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் சுற்றிலும் பல நூறு ஏக்கர் பரப்பில் பரந்து கிடந்த விஜயநாராயணம் ஏரியின் நடுவே வறண்டிருந்த தரையில் படுத்தபடியே பால்பாண்டியின் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.

ஆங்காங்கே திட்டுத் திட்டாயிருந்த நீர்ப்பரப்பில் நின்று கொண்டிருந்த பறவைகளை சற்று அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டு வண்டியை ஏரிக்கு நடுவே செலுத்தியதற்கு பலன், திரும்ப வண்டியை எடுக்க முடியவில்லை. டிராக்டர் வந்து சேர இரவு பத்து மணி ஆகி விட்டது என்றாலும், பால்பாண்டி அவரே இயற்றி பாடும் பாடல்கள் எங்களை உற்சாகமாக வைத்திருந்தன. பெளர்ணமி நிலா வெளிச்சம் கூட அந்த சந்தர்ப்பத்திற்கு சற்று இடையூறாக இருந்தது.

‘கண்ணதாசன் செத்துப் போகலய்யா, இங்க இருக்கார்’னாரு பாரதிராஜா' என்று சுவராசியமான அந்த சம்பத்தை பால்பாண்டி விவரிப்பது உட்பட அவர் கூறும் கதைகளில் எது உண்மை எது மிகை என்று பிரித்துப் பார்க்க இயலாது என்றாலும், கூந்தங்குளத்திற்கு உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் வந்து தங்கும் பறவைகளின் பால் அவருக்கு உள்ள கனிவும், பாசமும் உண்மை. கூட்டிலிருந்து தவறிப் போகும் குஞ்சுகளை பாதுகாத்து வளர்த்து மீண்டும் அதன் கூட்டத்தில் சேர்க்க அவரும் அவரது மனைவியும் செய்த தியாகங்கள் உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த அன்பின் மிகுதியால் பறவைக் காய்ச்சலுக்கு அவர் மனைவியை பலி கொடுத்தும் பால்பாண்டியின் சேவை தொடர்வதும் உண்மை.

கூந்தக்குளம் மற்றும் அதன் அருகே உள்ள குளங்களுக்கு வரும் பறவைகளைப் பற்றியும் அவை குஞ்சு பொறிப்பது பற்றியும் பள்ளிப்படிப்பைத் தாண்டாத பால்பாண்டி அறிந்து வைத்துள்ள விபரங்கள், ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கூட இருக்காது. அதற்காக பல்வேறு விருதுகளை அவர் பெற்றாலும், பரவலாக அறியப்படும் ‘பறவை மனிதர்’ (Bird Man) என்ற பட்டமே அவருக்கு பிடித்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, மற்ற நாடுகளிலிருந்தும் பறவைகளைக் காணவும் புகைப்படம் எடுக்கவும் பால்பாண்டியை தொடர்பு கொள்ளுகிறார்கள். அவரவர் விருப்பப்படி பாண்டியும் அவர்களை தொடர்பு கொள்கிறார். தரையில் அடைகாத்துக் கொண்டிருக்கும் அரிய பறவைகளை காண பாண்டி எங்களை அழைத்திருந்தார்.




நீங்களும் கூந்தங்குளம் போனால் பாண்டியை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை சுவராசியமாக வைத்திருக்க பாண்டியிடம் பறவைகள் மட்டுமல்லாமல் நிறைய கதைகளும் பாடல்களும் இருக்கிறது.

2 comments:

  1. https://www.youtube.com/watch?v=5SycWv7_PT0 கூந்தங்குளம் பறவைகளைப் பற்றி பாண்டி பாடும் பாடலைக் கேட்க

    ReplyDelete
  2. Click on the picture to see a larger image and better clarity

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....