“சார், பிரபு ராஜதுரை?”
“ஆம். நான்தான் பேசுகிறேன். நீங்க?”
“நான் சிவகங்கை போஸ்ட் மாஸ்டர் பேசுகிறேன்” என்றதும், போஸ்டல் டிபார்ட்மெண்ட் சம்பந்தமா கேஸ் ஏதும் போடவில்லையே என்று ஒரு விநாடி நான் குழம்பிய போது மணி காலை ஒன்பது.
“இல்லை. ஸ்டாண்டர்ட் பிரஸ் பிரைவேட் லிமிட்டட்………….சிவகாசி’ என்று மறுமுனையிலிருந்து ஏதேதோ வார்த்தைகள் தொடர்ந்து கேட்டதில் முதலில் ஒன்றும் புரிபடவில்லை.
இறுதியில் “விலாசத்தில் சிவகங்கைன்னு அடிச்சுருக்கு” என்றதும் புரிந்து விட்டது.
சிவகாசிக்கு அனுப்ப வேண்டிய நோட்டீஸை என் அலுவலகத்தில் சிவகங்கை என்று டைப் அடித்து அனுப்பியிருக்கிறார்கள்.
‘ஓ, சாரி சார். அது நோட்டீஸ். தெரியாம சிவகங்கைன்னு அடிச்சுட்டாங்க. நான் வேற நோட்டீஸ் அனுப்ப சொல்லி விடுகிறேன்”
“வேண்டாம் சார், நானே சிவகாசின்னு திருத்தி அனுப்பிட்டேன். உங்க ஆபீஸ் ரிக்கார்ட்டில் நீங்க மாத்திக்குங்க. அதுக்காக சொன்னேன்” நான் நன்றி என்று முழுதாக சொல்வதற்குள் போனை வைத்து விட்டார்.
ஒரு நிமிடம் கழிந்து அந்த நம்பரை தொடர்பு கொண்டு. “சார் உங்க பேரை கேட்க மறந்து விட்டேன்”
“அது எதுக்கு? நான் சிவகங்கையில் போஸ்ட் மாஸ்டராக இருக்கிறேன்”
“சும்மா தெரிஞ்சிக்கத்தான். சொல்லுங்க”
“மூக்கையா சார்”
-oOo-
‘செல்போன் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என் தந்தையிடம் கூறியதற்கு அவர், ‘உன்னால் ஒரு அழைப்பிற்கு பதினைந்து பைசாவுக்குள் விலை நிர்ணயம் செய்ய முடியுமா?” என்றார்.
“இந்தியாவில் காஷ்மீரில் இருக்கும் மகன் கன்னியாகுமரியில் இருக்கும் தனது தாய்க்கு பதினைந்து பைசாவில் தபால் கார்டு எழுதி அனுப்ப முடியும். நமது மக்களிடம் இருந்து அழைப்புகளுக்கு அந்தக் கட்டணத்திற்கு மிகாமல் வசூலிக்க முடியுமானால் ஆரம்பி’ என்றார்.
‘அவருக்கு எங்களது அஞ்சலியாக பதினைந்தே பைசா செலவில் நம் மக்களுக்கான செல்போன் சேவையை அறிமுகப்படுத்தப் போகிறோம்’
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியா டுடே இதழில் அனில் அம்பானி தங்களது புதிய கனவுத் திட்டம் பற்றி பெருமை பொங்க அளித்த பேட்டியைப் படித்ததும் துள்ளிக் குதித்தேன், நானும் ஒரு செல்போன் உபயோகிக்க முடியும் என்று.
ரிலையன்ஸ் செல்போன் கட்டணம் தபால் கார்டு விலையை விடக் குறைவானதா என்று தெரியாது. ஆனால், தங்கள் சேவை மையங்களில் இயங்கும் மனித இயந்திரங்களில் ஒரு மூக்கையாவை உருவாக்க முடியாது.
No comments:
Post a Comment