தான், தன் குடும்பம் குழந்தைகளின் கல்வி, வேலை என்ற அளவோடு கூடிய வரையில் பிற சமூகத்தவரோடு இசைந்து வாழ்ந்து வந்த சாதாரண நடுத்தர இஸ்லாமியர்களை திடீரென மிகப் பெரிய அவநம்பிக்கைக்குள் ஆழ்த்திய நிகழ்வு ஒன்று உண்டென்றால் அது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு.
பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு அளவிற்கு இல்லை என்றாலும் அதற்கு நிகரான அளவிற்கு இஸ்லாமியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஆபத்து ‘டைம்ஸ் நவ்’ அர்னாப்’பின் தினப்படி கூச்சல்களை ஏதோ இந்தியாவின் ஒட்டு மொத்த குரல் என்று நம்பி, இஸ்லாமிய மத போதகரான டாக்டர் ஜாகிர் நாயக்’கை இந்திய அரசு தடை செய்யும் முயற்சியில் இருக்கிறது.
‘இஸ்லாமிய நண்பர் ஒருவர் அனுப்பி வைத்ததாக’ டாக்டர் ஜாகிர் நாயக்’கின் டிவிடிக்கள் எனக்கு இரு நாட்களுக்கு முன் வந்தது. ‘ஒரு நாளுமில்லாத வழக்கமாக, இது என்ன’ என்று அவரைத் தொடர்பு கொண்டதில், ‘இல்லை. நீங்கள் இவரது பேச்சைக் கேளுங்கள். எங்கள் மதத்தைப் பற்றி பேசுவதற்குக் கூடவா, உரிமையில்லை’ என்றார்.
படித்த மிதவாத எண்ணம் கொண்ட சாதாரண இஸ்லாமியர்களின் பொதுவான பதட்டத்தை என்னால் தொலைபேசியிலேயே உணர முடிந்தது.
அந்த டிவிடிக்களை தொடக்கூட எனக்கு நேரமோ, பொறுமையோ இல்லை என்றாலும், போரடித்துப் போன பின்னிரவு நேரங்களில் ‘கூட்டத்தினரின் கேள்விகளுக்கு ஜாகிர் நாயக்’ பதில் கூறுவதைக் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். சங்கடமான கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் கூறி அவர் முடிக்கும் கடைசி வாக்கியம் தொடங்கும் முன்னரே மொத்த கூட்டமும் கை தட்டினாலும் கேள்வி கேட்டவர் அவர் இஸ்லாமியர் அல்லாதவர் எனில் ‘திருப்தியின்மை முகத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிய அசட்டுப் புன்னகையோடு நின்று கொண்டிருப்பார்.
பிற மதங்களை இஸ்லாத்திற்கு எதிராக மட்டுப்படுத்துவதில் கூட சில சமயங்களில் நான் கேட்க நேரிட்ட பெந்தேகொஸ்தே பாஸ்டர்களின் பேச்சுக்களில் அதிக ஆபத்தை உணர்ந்திருக்கிறேன்.
பெந்தேகொஸ்தே என்ன மற்ற சில கிறிஸ்தவ போதகர்கள் கூட விலக்கல்ல.
‘செய்தித் தாளிகளில் வரும் பெரிய விபத்துச் செய்திகளைப் பாருங்கள். எல்லாம் இந்துப் பெயர்களாக இருக்கும். கிறிஸ்தவப் பெயரே இருக்காது. கர்த்தருக்கு ஸ்தோத்ரம். அல்லேலூயா’ என்று எளிதாகக் கூறிப் போனார் ஒரு போதகர்.
வீட்டுக்கு வந்ததும் அம்மா ‘அவர் கரெக்டா சொன்னார் பாத்தியா’ என்றார் பெருமையாக. ‘போம்மா, அமெரிக்காவுல ஆக்ஸிடெண்ட் நடந்தா அவ்வளவும் கிறிஸ்தவப் பெயராக இருக்கும்’ என்றேன்.
கிறிஸ்தவர்களை தர்மசங்கடத்தில் நெளிய வைத்துக் கொண்டிருக்கும் உமாசங்கர் அரசு ஊழியராக இருந்து கொண்டே பிற மதங்களை வெளுத்துக் கட்டுவதைக் கூட சகித்துக் கொள்ளும் அளவிற்கு பேச்சுரிமையை வளர்த்துக் கொண்டுள்ள நாம் ஓரளவிற்கு அதை தன்மையாகவே கையாளும் ஜாகிர் நாயக்’கை துரத்துவோம் என்றால், அதை எப்படிச் சொல்வது, இஸ்லாம்ஃபோபியா என்றா?
இதுதான் இவரது குற்றச்செயல் என்று ஏதும் குறிப்பிடாமலேயே, ‘கைது செய்’ ‘தடை செய்’ ‘முடக்கு’ என்று சில ஊடகங்கள் கூக்குரலிடுவதின் காரணமும் அதுதான் இருக்க முடியும்.
தூய்மைவாதம் என்பது அனைத்து மதங்களிலும் ஏன், சித்தாந்தங்களிலும் தோன்றுவதுதான். வன்முறையை, அழுத்தத்தை நம்மீது திணிக்காதவரை அதற்கான உரிமையை நாம் மறுப்பது பேச்சுரிமைக்கான அவர்களது அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.
கொடூர பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் இவரது பேச்சுக்களால் வசீகரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. மகாத்மா காந்தியின் பேச்சால் வசீகரிக்கப்பட்ட காங்கிரஸ்காரர்களில் சிலர் கூட ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
டாக்டரைப் போல கல்லூரிக்குப் போய் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டு கோட்டும் சூட்டும் போட்டு மேடைகளில் பேச வேண்டும், அவரைப் போல புகழடைய வேண்டும் என்றும் வசீகரிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்களை மறந்து விடுகிறோம்.
இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரையும் அப்துல் கலாமோ, ஆமிர் கானோ வசீகரிக்க முடியுமானால் எனக்கு மகிழ்வே. ஆனால் மதத்தால் கட்டுண்ட நிலையில் பெருவாரியான இளைஞர்கள்/ யுவதிகள் நிற்கும் நிலையில் அவர்கள் முன் இருப்பது இரு தேர்வுகள்; ஒரு பக்கம் கல்வியால் தன்னை முன் நிறுத்தும் டாக்டர் ஜாகிர் நாயக். மறுபக்கம் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காமல் துப்பாக்கியைத் தூக்கி முக அழகால் தன்னை முன்னிறுத்தும் பர்ஹான் வானி.
டாக்டர் ஜாகிர் நாயக்’களை அனுமதிப்பது புத்திசாலித்தனம்…
நல்ல அலசல்
ReplyDeleteஐயா, ஜாகிர் நாயக் நிறை,குறைகூறவில.லை.அடுத்த பதிவில. வருமோ..
ReplyDelete