Wednesday 1 April 2015

ட்ரையேஜ்

‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’

சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப் பற்றி நினைக்கையில், ஒவ்வொருவராக கடந்து போன மற்றவர்களும் நிழலாட, நேற்றைக்கு முந்தைய நாள் மனதைப் படுத்திய வரிகள் இவை. ஆனால் அடுத்த நாளே அதற்கான பதில் இப்படத்தில் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

‘Why are you so concerned about what happens to the dead?’

இது போன்ற ஆழமான உரையாடல்களால், படம் இறந்து போனவர்களைப் புதைக்காமல், மனதில் இருத்துவதின் உளவியல் விளைவுகளைப் பற்றிப் பேசி, ‘பிழைத்திருப்பது’ ஒன்றே வாழ்க்கையின் காரணம் என்பதை நிறுவ முற்படுகிறது.

இதன் டிவிடியை நண்பன் கொடுத்த பொழுதில், அதிலுள்ள படத்தை மேற்போக்காக கவனித்து, ஏதோ தனிமனித சாகசம் நிறைந்த வழக்கமான ஹாலிவுட் படம் என்று நினைத்தேன். சதாமின் ஈராக் மீதான குர்த் போராளிகளின் ‘இறுதி’ தாக்குதலை பத்திரிக்கைகளுக்காக புகைப்படம் எடுக்க செல்லுபவன்தான், கதாநாயகன் என்பதும் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பின் இறுதி வரை இருக்கையில் சரியவேயில்லை.

படம் ஹாலிவுட் படமல்ல. ஐரோப்பிய படம்!

குர்திஸ்தானிலிருந்து உடலெங்கும் காயங்களோடும் ஏதோ குற்ற உணர்வோடும் திரும்பியவனின், மன அழுத்தத்தில் கால்கள் செயல்படாமல் போக, அவனது மனைவி போர்முனையிலிருந்து திரும்பிய வீரர்களின் மன அழுத்தத்தை நீக்கும் மையத்தை நடத்தும் அவளது தாத்தாவை அழைக்கிறாள். மெல்ல மெல்ல அவனது மனதிலிருக்கும் முடிச்சுகள் அவிழ….போர்முனைக்கு அவனுடன் சென்ற நண்பனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவன் கொட்டுவதோடு படம் முடிகிறது.

கதாநாயகியின் தாத்தா, டிராகுலா புகழ் கிறிஸ்டோபர் லீ. 86 வயது! படத்திலும், நிசத்திலும். ஆனால் தோற்றத்திலும், குரலிலும் என்ன ஒரு கம்பீரம். மனோதத்துவ நிபுணராக வரும் அவரது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வசனமும், அத்தனை கன்வின்சிங்…..படத்தின் கதாநாயகனை மட்டுமல்ல.

I lost my entire family, I lost my parents, I lost my brothers and sisters and I lost my wife. And yet, I am still here, I can still smile, and the world is still, a wonderful place என்று தனிமையில் படம் பார்த்துக் கொண்டிருந்த எனக்காகவும் பேசியது மாதிரி இருந்தது...

சூடான் நாட்டில் பஞ்சத்தின் கொடுமையில் எலும்புக்கூடான சிறு பெண் உணவளிக்கும் மையத்தை நோக்கி தரையில் தவழ்கையில் பின் நிற்கும் வல்லூறு புகைப்படமொன்றை பார்த்திருக்கலாம். புலிட்சர் பரிசு பெற்ற புகழ் பெற்ற அப்படத்தை எடுத்த புகைப்படவியலாளர் கெவின் கார்ட்டர், தனது 33ம் வயதில் தான் பார்த்த கொடுமைகளின் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார். பாவம், அவர் இறந்து பத்து வருடங்கள் கழித்து இப்படம் வெளிவந்துள்ளது...                                                                                                                                                                                                                                                                                               மதுரை                                                                                                                                                   01/04/2014

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....