‘அமைப்பு’களை இயங்க விடுங்கள்’
நீதிபதி கர்ணன் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று நண்பரும் சக வழக்குரைஞருமாகிய லஜபதிராய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த டிசம்பர் மாதம்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. லஜபதிராயின் மூத்த வழக்குரைஞர் தனது வாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தலைமை நீதிபதி அவரை நிறுத்தி
சில சமாதான வார்த்தைகளைக் கூறி வழக்கினை வாபஸ் வாங்க வைத்தார். அப்போது அவர் கூறியதுதான், “One may not approve of all that he does, but let
the system work.”
தமிழகம் முழுவதும் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படத்தில் ‘ஸிஸ்டம்’ எப்படியாவது இயங்க வேண்டியதன் அவசியம் மூன்று இடங்களில் சொல்லப்படுவதைக் கேட்கையில், என்னை தலைமை நீதிபதியின் வார்த்தைகள் மேலும் சில்லிட வைத்தது.
மற்றபடி, வெறும் பூச்சியத்தைச் சுற்றி திறமையாக ஒரு திரைக்கதையை
கமல்ஹாசனின் பாபநாசம் படம் உருவாகியது போலவே, ஆர் எஸ் மனோகர் காலத்து சாதாரண கேங்ஸ்டர் படக்கதையை உல்டா’வாக்கி இரண்டாம் பகுதியில் கண்கட்டு வித்தை காட்டியதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குஞர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
அமைப்புகளைப் பற்றி பேசும் படம் முதல் பாதியிலேயே முடிந்து விடுகிறது. அடுத்த பகுதி ‘ஒரு கொலை நடைபெற்றதை தற்செயலாகக் கேட்க நேரிடும் அப்பாவிகள்’ துரத்தி வேட்டையாடப்படும் ஹைதர் காலத்துக் கதை. இதில் ஸிஸ்டம் எங்கு இருக்கிறது என்பது புரியவில்லை.
மரணதண்டனைக் கைதியை அப்பாவியாகக் காட்டிய கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ கூட ‘மரணதண்டனை எதிப்பு’ படமாக விவாதிக்கப்பட்ட தமிழ்ச்சூழலில் ‘அப்பாவிகளை துரத்திச் சென்று போட்டுத்தள்ளும்’ கொலையாளிகளைப் பற்றிய படம் ‘போலி மோதல் சாவு’ (fake encounters) பற்றிய படமாக கொண்டாடப்படுவதில் வியப்பில்லைதான்.
விசாரணை அமைப்புகள் இயங்குவது பற்றிய படமும் நிச்சயமாக இல்லை. தினமும் கண்முன் நிகழும் நூற்றுக் கணக்கான மரணங்களின் விளைவால் மரத்துப் போன மனிதத்தை விளக்க ‘சுடப்படுவதற்காக முன்னே ஒரு மனிதன் காத்திருக்கிறான் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல், இயங்காமல் போன துப்பாக்கியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்’ ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படக்காட்சியின் தாக்கத்தாலோ என்னவோ, காவலர்கள் ரொம்ப சாவகாசமாக பேசிக் கொண்டே கூட்டணி அமைத்து மூன்று அப்பாவிகளை வேட்டையாடுகிறார்கள்.
ஆந்திர நீதிமன்றத்தில் தானாக வந்து சரண்டராகும் நபர் நீதிமன்ற காவலில் (judicial custody) இருந்து கடத்தப்பட்டு சென்னை வீட்டில் பிணமாகத் தொங்குகிறார்.
அவர் மீது தமிழகத்தில் வாரண்ட் நிலுவையில் உள்ளதால், அவரைக் கைது செய்ய
வந்துள்ளதாக சென்னைக் காவலர் ஆந்திர நீதிபதியிடம் அதிகாரபூர்வமாகவே கூறுகிறார். அதே நாளில் அதே நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் நபர்கள் சென்னையில் காவலர்களால் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். விடுவிக்கப்படும்
நால்வரின் ஒருவர் தப்பித்துள்ளார். அந்த எஸ்பிக்கும் ஏஎஸ்பிக்கும் மற்றவர்களுக்கும் குஜராத் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் வகையறாக்களின் முடிவு நிச்சயம்.
கடைசியில் எல்லாம் முடிந்த பின்னர், முத்துவேலின் குடும்ப போட்டோ, டிவி டிபேட் என்று எஸ்பியிடம் மற்றொரு காவலர் பேசுவது போல செயற்கையாக நம்மிடம் விளக்கமாக பேசும் எம்ஜிஆர் பட உத்தியை கைவிடாத வரை ‘உலகப்படம்’ என்றெல்லாம் என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.
மொத்தத்தின் நான் பயந்த மாதிரி விசாரணை, ‘அதிர’ வைக்கவில்லை.
http://barandbench.com/one-may-not-approve-of-all-that-he-does-but-let-the-system-work-cji-thakur-on-madras-hcs-karnan-j/
ReplyDelete