கா க க போ…. அல்லது க க கா போ’வா? எதுவாயினும், படத்துக்கான உண்மையான தலைப்பாகிய ‘காதலும் கடந்து போகும்’ என்பதோடு ஒத்து வரவில்லை. தலைப்புகள்தான் ஒத்து வரவில்லை, திரைக்கதையாவது இரண்டில் ஏதாவது ஒரு தலைப்போடு ஒத்து வருமா என்றால் அதுவும் இல்லை.
படத்தில் இருப்பது காதலா, நட்பா இல்லை வேறு ஏதாவதா என்று முடிவாவதற்குள் படம் முடிந்து விடுகிறது. அந்த ஏதாவது ஒன்றும் நாயகன் நாயகிக்கு எங்கும் கடந்து போகவும் இல்லை. கசந்து போகவும் இல்லை.
ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் பார்த்தால் நமக்கும் இந்தப் படம் கசக்காது. நன்றாகக் கழிந்த சனிக்கிழமை இரவு என்றுதான் தோன்றும். அதற்கு காரணம் இயக்குஞர் நலன் குமாரசாமியா, நாயகன் விஜய் சேதுபதியா இல்லை காதாநாயகி மடோனா உட்பட படத்தில் ஃப்ரஷ்’ஷாக அதே சமயம் இயல்பாக வரும் மற்றவர்களா என்பதும் ஆராய்ச்சிக்குறிய கேள்விதான்.
விஜய் சேதுபதி நல்ல உடம்பெல்லாம் போட்டு சட்டை பட்டன்கள் பிதுங்குமளவிற்கு புஷ்டியாக இருப்பதைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. தசைகளை முறுக்குவதும், படத்தின் கதாநாயகி உட்பட அனைவரையும் எடுத்தெறிந்து பஞ்ச்’ பேசுவதும் மட்டுமே கதாநாயக வேலை என்றிருக்கும் ‘மாஸ்’ குப்பைகளுடன் இவரும் சேர தற்போது வாய்ப்பில்லை என்ற நிம்மதிதான் காரணம்.
சமுத்திரகனிதான் தெரிந்த முகம். கொஞ்சமாக வந்தாலும் ‘என்ன கதிர் சூப் சாப்பிடுகிறாயா?’ என்று கேட்டவாறு எழுந்து வரும் முதல் காட்சியில் விஜய் சேதுபதியோடு நம் தண்டுவடத்தையும் சில்லிட வைக்கிறார். குரல் வளத்திற்கான ‘ஆடிஷன்’ தேர்வை சற்று ‘டேப்’பை இழுத்துப் பிடித்து வைத்தால், தமிழில் ஒரு சிலர்தான் தேறுவார்கள். அவர்களில் சமுத்திரகனியும் ஒருவராயிருப்பார்.
நகைச்சுவைப் படமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், 'மலையாள நகைச்சுவையே நகைச்சுவை' என்ற ஜெயமோகத்தன்மை இருப்பின் சிரிக்காமலேயே ஆனால்
படம் முழுக்க இழையோடும் சுவையை சற்றுக் கூடுதலாக ரசிக்கலாம்.
படத்தின் இறுதிக் காட்சியில் காருக்கு இந்தப் பக்கம் தோன்றி ‘மேடம் கேஷா, கார்டா?’ என்று கேட்கும் விஜய் சேதுபதியைப் பார்த்து ஆச்சரியத்தில் செய்வதறியாது திகைத்துப் போய் புன்னகைக்கிறார் மடோனா!
“அப்படியே மகிழ்ச்சியில் கண்களை மூடி தலையை லேசாக குலுக்கி மீண்டும் பார்க்கையில் அங்கு நிற்பது ஏற்கனவே பெட்ரோல் போட்ட பையன். அமைதியாக பணத்தைக் கொடுத்து விட்டு விழியோரத்தில் துளிர்த்த கண்ணீரை துடைத்தவாறு காரை கிளப்பிச் செல்கிறார் என்றிருந்தால் கவித்துவமாயிருக்காது நலன்” என்று கேட்டேன்.
‘இல்லை, அப்படியிருந்திருந்தால் உங்களைப் போன்ற அப்பாக்களை படத்துக்கு கூட்டி வந்த மகள்களுக்குப் பிடித்திருக்காது பிரபு' என்று பதில் வந்தது
No comments:
Post a Comment