இருபது வருடங்களுக்கு முன்னர், ராமர்பிள்ளை என்ற கல்லூரிப் படிப்பைக் கூட படிக்காத இளைஞர் ஒருவர் ‘மூலிகையிலிருந்து எரிபொருள் தயாரிக்க முடியும்’ என்று சென்னை ஐஐடி ஆசிரியர்கள் பலரை எளிய வித்தை ஒன்றின் மூலம் ஏமாற்றி பெருத்த தர்மசங்கடத்திற்குள்ளாக்கினார்.
தற்பொழுது ஆவணக் கொலைகளுக்கு எதிரான பிரச்சாரம் என்ற பெயரில், கொஞ்சமும் நேயமற்ற (insensitive) வகையில் உருவாக்கப்பட்ட பிரச்சார வடிவம் ஒன்றில் அது ‘என்னவென்று அறியாமலேயே’ தங்களை இணைத்துக் கொண்டதன் மூலம் முற்போக்கு எண்ணம் கொண்ட பெண் ஊடகவியலார்கள் பலர் மிகுந்த தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதில் ராமர்பிள்ளை கூட தவறான உதாரணம்தான். ஏனெனில் அந்தப் பிரச்சார வடிவத்தை உருவாக்கியவர்களிடமும் சரி, அறிந்தோ அறியாமலோ பங்கு கொண்டவர்களிடமும் சரி, தவறான எண்ணமோ, ஆணவப் போக்கோ கொஞ்சமும் இருக்க வாய்ப்பில்லை.
ஆயினும் அவர்கள் கடந்த காலத்தில் வெளிப்படுத்தியுள்ள கருத்தாக்கங்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமலும், நடந்தது என்ன என்பதை விசாரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஏதுமின்றியும் ‘மாட்னாங்கடா வசமா’ என்று வழக்கம் போல தர்ம அடிக்கும்பல்கள் கிளம்பவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மன உளைச்சலும் சோர்வும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே போல, கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து அவர்கள் காவலர்களை கடிந்து கொண்டு ‘நீதிமன்ற அவமதிப்பிற்காக’ விசாரிக்க முனைந்த செயலையும், எவ்விதமான புரிதலுமும் இன்றி அவரது சாதியையும் இழுத்து வைத்து ‘வன்மத்’தோடு தாக்கப்படுவதும் மிகவும் வருந்தத்தக்கது. இக்கூட்டத்தில் பொதுவுடமை கட்சி சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் ஒருவரையும் பார்த்தேன்.
புகைப்படங்களை ஊடகங்களில் பார்த்ததும், நீதிபதிக்கு தோன்றிய அதே எண்ணம் எனக்கும் தோன்றியது. குற்றத்தை நேரில் பார்த்த முக்கியமான சாட்சி கெளசல்யா. குற்றம் செய்தவர்களை அதற்கு முன்னர் அறிந்திராதவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில், கைது செய்யப்படுபவர்களின் முகங்கள் ஏன் துணி போட்டு மூடப்படுகின்றன என்பதைப் பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். நீதிபதி நாகமுத்து அவர்களும் இது குறித்து முக்கியமான தீர்ப்பு ஒன்று கூறி அந்த தீர்ப்பு காவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆணவக்கொலை புரிந்த ‘குற்றவாளிகளுக்கு எதிரான முக்கியமான சாட்சி பலவீனப்படுத்தப்படுகிறது’ என்ற ஆதங்கத்தில் நீதிபதி காவலர்களை கண்டிப்பதை, சாதிப்பற்றாக திரிப்பதும், ஆணவக்கொலைக்கு எதிராக தவறான புரிதலுடன் ஆனால் நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட பிரச்சாரத்தில் தங்களையறியாமல் இணைத்துக் கொண்ட ஆர்வலர்களை துரத்துவதும் ஆவணக்கொலைகளுக்கு எதிரான வலுவான பொதுக்கருத்தினை உருவாக்குவதில் பெரும் பின்னடவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.
இலக்கு ஒன்றாக இருக்கையில் சகபயணிகளுக்கிடையேயான புரிந்துணர்வு மட்டுமே அனைவரையும் அங்கு கொண்டு சேர்க்குமேயல்லாமல், சந்தேகங்களல்ல…
No comments:
Post a Comment