Saturday 27 June 2015

எமர்ஜென்ஸிக்கு எதிரான சின்னப் போராட்டம்

பள்ளிக்கூடம் வீட்டிற்கு மிக அருகில்தான். நடந்து சென்று விடலாம். இரு அண்ணன்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். பள்ளிக்கு அருகில் எங்களை வழிமறித்த இருவர் மூத்த அண்ணனிடம், ‘டேய், நீ வீட்டில் எத்தனையாவது பிள்ளை?’

‘இரண்டாவது’ என்றவுடன் ‘சரி நீ போகலாம் என்றனர்

அடுத்த அண்ணனிடம், ‘நீ?’

‘மூன்றாவது’

‘சரி, நில்லு’ என்று என்னைப் பார்த்தவர்கள், ‘நீ நாலாவதா’ என்றார்கள். நான் தலையசைத்ததும் எங்கள் இருவரையும் கூட்டிச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த நாய் வண்டி போன்ற வண்டியில் ஏற்றினார்கள். உள்ளே ஏற்கனவே எங்களை மாதிரி நிறைய பையன்கள். சிலர் அழுது கொண்டிருந்தனர்.

வண்டி கிளம்பி எங்கெங்கோ போய் ஒரு மலையடிவாரத்தில் நின்றது. எங்களை வண்டியிலிருந்து இறக்கி அங்கிருந்த அறைக்குள் அடைத்தார்கள்.

என்ன நடக்கிறது என்று விளங்கும் முன்னே மேலிருந்து ஏதோ புகை அறை முழுவதும் பரவ, மூச்சு முட்ட பயத்தில், ‘அம்மா’ என்று அலறினேன்.

‘என்னடா, என்னாச்சு?’ என்று பக்கத்திலிருந்து அம்மாவின் குரல் கேட்டதும்தான் பகலிலேயே தூங்கியிருக்கிறேன் என்பது புரிந்தது. கண்களைக் கசக்கி விட்டு பார்த்தால், அருகிலிருந்து செய்தித்தாளில், ‘இரண்டு குழந்தைகளுக்கு மேலே பெற்றால் தண்டனை’ என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி!

இந்தக் கதை எழுதப்பட்ட 1976ம் ஆண்டில், அரசின் கொள்கையை விமர்சிக்கும் கதையை எழுதுவதே குற்றம் என்பது தெரியாமலேயே, நான் எழுதிய முதல் கதை.

படித்து விட்டு அப்பா அம்மாவைப் பார்த்து சிரித்தார்.

‘ஸ்கூல் இன்ஸ்பெக்ஷனுக்கு இன்ஸ்பெக்டர் வரப்போறாராம். வகுப்பில் புத்தகம் மாதிரி நாங்களே செய்யணும். அதுக்கு நான் பொறுப்பு என்று க்ளாஸ் வாத்தியார் சொல்லியிருக்கிறார்’

அந்த 7இ வகுப்பு மாணவர்களின் கையெழுத்து புத்தகத்தில் இக்கதையும் சேர்க்கப்பட்டு யாராலும் படிக்கப்படாமலேயே போனாலும், எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆயிற்று என்று இரண்டு நாட்களாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கையில், ‘அட, இந்தக் கதை எமர்ஜென்ஸிக்கு எதிரான என்னுடைய சின்ன முயற்சி’ என்று ஏதோ எனக்குத் தோன்றுவதைச் சொன்னால், அடிக்க வருகிறார்கள்…

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....