Saturday 2 January 2016

உறைந்து போகும் சிந்தனைகள்!

எழுத்தாளர் சமஸ் ‘தமிழ் இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டிய சில புள்ளி விபரங்கள் குறித்து நமது உயர்நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழ்க்கு தொடர்ந்து, அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் அளவுக்கு பெரிதாக அப்படி ஒன்றும் அந்தக் கட்டுரையில் எழுதப்பட வில்லை என்று முன்பு பதிவு ஒன்று எழுதியிருந்தேன். பின்னர் கவிஞர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பொழுதும், சமஸ் மீதான வழக்கையும் நினைவுறுத்தி இவ்வாறான வழக்குகள் அவமதிப்பு சட்டத்தை நீதிமன்றங்கள் கைக்கொள்வதின் நம்பகத் தன்மையை குலைக்க ஏதுவாகலாம் என்ற எனது அச்சத்தைத் தெரிவித்திருந்தேன்.

முக்கியமாக, எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்கள் மீதான இவ்விதமான சட்டரீதியிலான தாக்குதல்கள், நம் முகத்தை நாம் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் கண்ணாடியை உடைப்பதற்கு ஏதுவான செயல்கள் என்ற எனது கருத்தை எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.

கடந்த வாரம் சமஸ் அவர்கள் ‘தமிழ் இந்து’ நாளிதழில் ‘சாமிக்கு ட்ரஸ்கோட் உண்டா சாமீ?’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையைப் படித்தால் எனது அச்சம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது புரியும்.

கட்டுரை ஹிந்து திருக்கோவில்களுக்கு வருபவர்களுக்கான உடைக்கட்டுப்பாடு குறித்தது. உடைக்கட்டுப்பாட்டை விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் ஒரு இடத்தில் கூட இந்தக் கட்டுப்பாட்டுக்கு காரணம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ற வார்த்தை இல்லை. உத்தரவு பற்றி என்ன, உயர்நீதிமன்றம் என்ற வார்த்தையே எங்கும் இல்லை. ஏதோ ஹிந்து அறநிலையத் துறை தன்னிச்சையாக பிறப்பித்த கட்டுப்பாடு என்ற ரீதியில் அரசை குறை கூறி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கட்டுரையைப் படிக்கும் யாருக்கும், அரசின் இந்த சுற்றறிக்கையானது, உயர்நீதிமன்றம் உடைக்கட்டுப்பாடு கூறிய தீர்ப்பினை செயலுறுத்தும் வண்ணம் அனுப்பப்பட்டது என்பதும், எந்த எந்த உடைகள் திருக்கோவிலுக்கு பொருத்தமானது என்பது கூட நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவையே என்று தெரியவே தெரியப் போவதில்லை.

நீதிமன்ற நெருக்குதலில் ஏற்ப்பட்ட அச்சத்தால், சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டிய எழுத்தாளர் ஒருவர் தெரிந்தே பிரச்னைக்கான ஆரம்பப்புள்ளியை முழுக்கவும் மறைத்து ஒரு கட்டுரை எழுதுகிறார். தமிழகத்தின் முக்கியமான நாளிதழும் அதனை பிரசுரிக்கிறது.

ஒருவேளை எழுத்தாளர் சமஸுக்கோ அல்லது தமிழ் இந்து ஆசிரியருக்கோ நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி தெரியாது என்றால், இவ்வாறு சமகால பிரச்னைகள் பற்றி பத்தி எழுத இவர் லாயக்கற்றவர். அவர் ஆசிரியருக்கான குறைந்தபட்ச தகுதி கூட இல்லாதவர் என்றுதான் எடுத்துக் கொள்ள இயலும்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள ‘மான நஷ்ட’ குற்றம் நீக்கப்பட வேண்டும் என்பதற்கு சுப்ரமணியன் சுவாமி மீண்டும் மீண்டும் கூறும் காரணம், ‘அந்தப் பிரிவு சமூக சிந்தனைகளை உறைய வைத்து விடும் என்பதுதான் (Chilling Effect). சமஸ் விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் முந்தைய நடவடிக்கை பாவம், சமஸின் சிந்தனைப் போக்கை உறைய வைத்து விட்டது.


இறுதியில் நஷ்டம், அரைகுறையாக ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்ட ‘தமிழ் இந்து’ வாசகனுக்குத்தான்…

3 comments:

  1. http://prabhuadvocate.blogspot.in/2015/07/contempt-when-trust-is-in-deficit.html

    ReplyDelete
  2. https://www.facebook.com/permalink.php?story_fbid=874179359369553&id=100003324906273&hc_location=ufi

    ReplyDelete
  3. பிரபு,
    Long time, No see, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பகிர்வுக்கு நன்றி. முழுதும் உடன்படுகிறேன். 2008-ல ஜல்லிக்கட்டு சார்ந்த உச்சநீதிமன்ற வழக்கின் போது என் வலைப்பதிவில் நாம் உரையாடியது ஞாபகம் வந்து, இங்கு வந்தேன் :-) http://balaji_ammu.blogspot.in/2008/01/412.html

    தங்கள் பழைய வலைப்பதிவை மூடி விட்டீர்களா?

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....