Wednesday 20 January 2016

ஷாகித் (ஹிந்தி) 2012

கடந்த வார சாலைப்பயணத்தில் ஏற்ப்பட்ட கோபத்தில், ‘ஏதாவது இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையோ மாநகராட்சியோ அனைத்து சாலை ஒப்பந்தங்களைப் பற்றிய முழு விபரமும் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நினைத்தேன். அப்படி வெளியிட்டால், எங்கெல்லாம் சாலைகள் தரமில்லாமல் உடைகிறதோ, அங்கெங்ல்லாம் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட துறையை வலியுறுத்த கோர்ட்டுக்கு செல்ல முடியும் என்ற யோசனை எனக்கே நன்றாக இருந்தது.

திடீரென ஒரு பயம்!

‘பாதிக்கப்படும் காண்டிராக்டர் கடுப்பில் ஆளை வைத்து போட்டுத் தள்ளிவிட்டால்?’ உடனடியாக இயக்க வேலைகளை நிறுத்தி விட்டு அடுத்த நாள் கேசுக்கு படிக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆனால், ஷாகித் ஆஸ்மி பயப்படவில்லை. இத்தனைக்கும், அவனது அச்சம் உண்மையானது. ஆபத்து நெருங்கிக் கொண்டேயிருந்ததையும் அவன் அறிந்துதானிருந்தான்.  அதானால்தான் அவனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்ட அவனது அண்ணனிடம் கூட ‘ அதனால் என்ன, ஒரு ஷாகீத் (தியாகி) ஆக மரித்துவிட்டுப் போகிறேன்’ என்று சமாதானம் கூறினான்.

ஷாகீத்’ பாதுகாப்பு தேடி காவல்துறையிடமும் செல்ல விரும்பவில்லை; அதில் பலனில்லை என்பதால். இறுதியில் அவனது அலுவலகத்திலேயே வைத்து சுடப்பட்டு இறந்து போன போது ஷாகித் வயது வெறும் 32.

அதற்குள் அவனுக்கும்தான் என்ன மாதிரியான வாழ்க்கை அனுபவங்கள்?

மும்பை கலவரத்தில் 14 வயது சிறுவனாக கைது செய்யப்பட்ட ஷாகித், தான் கண்ட கோரக் காட்சிகளால் சென்று சேர்ந்த இடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் முகாம். அங்கே இன்னமும் கொடூரத்தை கண்ட வெறுப்பில் மும்பை திரும்பி வந்த ஷாகித் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறை வாழ்க்கைக்குப் பின்னர் நிரபராதி என்று விடுதலை. சிறை வாழ்க்கை அவனை மாற்றியிருந்தது. கல்வி ஒன்றே தான் உயர வழி என்று அறிந்த ஷாகித் சிறையில் பட்டப்படிப்பை முடித்து, விடுதலையானதும் தொடர்ந்தது படித்தது சட்டம்.

பட்டம் வாங்கி வழக்குரைஞராகப் பணியாற்றியது ஏழே ஆண்டுகள்தாம். பணத்தை தேடி ஓடவில்லை. மாறாக, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்காக, இஸ்லாமிய தொண்டு நிறுவனம் மூலம் பெரும்பாலும் இலவசமாகவே வழக்கு நடத்தியதில் மும்பையை குலுக்கிய வெவ்வேறு வழக்குகளில் 17 அப்பாவிகள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 2008 மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்டு ஷாகித் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யபப்ட்ட ஃபாஹிம் அன்சாரி உட்பட.


‘Shahid is the only lawyer who had the maximum cases showing that the police were fabricating evidence’ என்று சீனியர் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறியது கொஞ்சமும் மிகையல்ல. ஏனெனில், குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களில் கைது செய்யப்படுபவர் நிரபராதி என்று நீதிபதிகள் தெளிவாக நம்பினாலும், அவருக்கு விடுதலை என்பது எவ்வளவு கடினம் என்பதை இம்மாதிரியான வழக்குகளோடு சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். எனவே 17 விடுதலை என்பது, பெரிய சாதனைதான்.

‘காங்க்ஸ் ஆஃப் வாஸேபூர்’ இயக்குஞர் அனுராக் கஷ்யப், நமக்குத் தெரிந்தவர்தாம். மும்பை குண்டு வெடிப்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இவரது ‘ப்ளாக் ஃப்ரைடே’ படத்தைப் பார்த்தால் போதும். உண்மைச் சம்பவத்தை அவ்வளவு விறுவிறுப்பாக ஹாலிவுட்டில்தாம் இயக்குவார்கள். அந்தப் படம் வெளிவருவதில் பிரச்னை வந்த பொழுது, அதற்காக வழக்கு நடத்தியது ஷாகித். அனுராக் கஷ்யப் நினைத்திருக்க மாட்டார், ஷாகித் வாழ்க்கையையும் அவர் படமாக்கும் காலம் வரப் போகிறது என்று.

தயாரிப்பாளர்தான் அனுராக் கஷ்யப். இயக்குஞர் ஹன்சாய் மேத்தா.

பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த படத்தைப் பற்றி வழக்குரைஞர் என்று சொல்லிக் கொள்ளும் நான் இரு வருடங்களாக அறியாமல் இருந்தது சற்று வெட்கமாக இருக்கிறது.

நிஜ மனிதர்கள் திரைப்படமாகும் பொழுது, நடிகர்கள் அழகாக இருப்பார்கள். விதிவிலக்கு தி ஃப்யூட்டிபுல் மைண்ட் கதாநாயகன் ரஸ்ஸல் க்ரோவை விட ஜான் நாஷ் அழகாக இருப்பார். ஷாகித் ஆஸ்மியும்தான்.

ஏழே வருடங்கள்! முப்பத்தி இரண்டே வயது! ஒரு வழக்குரைஞராக சாதிப்பதற்கு போதும் என்கிறான் என்னை விட 12 வருடம் இளையவனாகிய ஷாகித் ஆஸ்மி!

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....