முவாத் பின் ஜபால்.
முகமது நபிக்கு நெருக்கமானவர். இஸ்லாமிய அறிஞர். ஏமன் நாட்டு மக்களை இஸ்லாமிய கோட்பாட்டில் வாழப் பழக்குவதற்காக முகமது நபியால் அனுப்படுகிறார்.
‘எதன் அடிப்படையில் உனது தீர்ப்புகளைக் கூறுவாய்?’ முகமது நபி.
‘குரானின் அடிப்படையில்’ முவாத் பின் ஜபால்
‘ஒருவேளை அந்தப் பிரச்னைக்கு குரானில் வழிகாட்டுதல் கூறப்படாமலிருந்தால்?’
‘நபியவர்களின் வாழ்க்கை முறை உள்ளதே’
‘அங்கும் தெளிவு இல்லை என்றால்?’
‘அப்போது எனது எண்ணத்தால் பகுத்தாய்ந்து நீதியின் பொருட்டு நல்ல முடிவினை எடுப்பேன்’
முவாத்’தின் இந்தப் பதிலில் முகமது நபி மிகவும் திருப்தியடைந்து தனது தொண்டன் சரியான பாதையில் இருப்பதற்காக இறைவனைப் போற்றியதாக கூறப்படுகிறது.
-oOo-
‘திருமணத்திற்குப் முன்பாகவே பிறந்த குழந்தை சட்டரீதியில் வாரிசு உரிமை கோர முடியாது’ என்ற செய்தித் தலைப்பை கடந்த வாரம் படித்ததும் மேற்கண்ட உரையாடல்தான் என் நினைவுக்கு வந்தது.
தலைப்பு என்னவோ இப்படியிருப்பினும் வழக்கில் அந்தக் கேள்வி எழவேயில்லை. இஸ்லாமியர் ஒருவர் இறந்த பின்னர் அவரது இரு மனைவிகளின் குழந்தைகளுக்கிடையே பாகப்பிரிவினை வழக்கு.
இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகள். ஆனால் முதலாவது மகனாகிய ஷாகுல் ஹமீது அவர்களது திருமணத்துக்கு முன்னரே பிறந்தவர் என்பதால், அவருக்கு சொத்தில் உரிமை இல்லை என்ற அறிவுறுத்தலில் வழக்கில் தரப்பினராகக் கூட இல்லை.
ஆயினும் வழக்கில் அவரைப் பற்றிக் குறிப்பிடும் நீதிபதிகள் போகிற போக்கில் ‘இஸ்லாமிய சட்டம் பிரிவு 85ன் கீழ் முறைதவறிப் பிறந்த குழந்தைகள்
(Bastard) அவர்களது தாய் சொத்தில்தான் பங்கு கேட்க முடியுமே தவிர தந்தை சொத்தில் பங்கு கேட்க முடியாது என்று உள்ளது’ என்று கூறிச் செல்கிறார்கள்.
வழக்கினை எவ்விதத்திலும் பாதிக்காத இச்சிறு குறிப்பு பத்திரிக்கை செய்தித் தலைப்புகளாக எடுத்தாளப்பட்டுள்ளது.
-oOo-
ஷாபானு தீர்ப்பு குறித்து எழுந்த பிரச்னையில் இஸ்லாமிய பெண்கள் சட்டம்’1986
இயற்றப்பட்டது. அதன் காரணமாக இஸ்லாமிய பெண்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு
125ன் மூலம் ஜீவனாம்சம் பெறுவது தடுக்கப்பட்டது.
பதினைந்து ஆண்டுகள் கழித்து இந்தப் பிரச்னை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் முன் வந்தது. ‘சரிதான், இனி முஸ்லீம் பெண்களுக்கு பிரிவு
125ல் ஜீவனாம்சம் கிடையாது. இஸ்லாமிய பெண்கள் சட்டப்படி ‘இதத்’ காலத்திற்கு ஜீவனாம்சம் பெற்றுக் கொள்ளலாம்’
இதத் காலம் என்பது மூன்று மாதம்தானே?
அதனால் என்ன, அப்போது கொடுக்கப்பட வேண்டிய ஜீவனாம்சமானது அந்தப் பெண்ணின் வாழ் நாள் முழுவதும் அவளது தேவைகளை நிறைவேற்றும் அளவிற்கு இருக்க வேண்டும்.
அவ்வளவு பெரிய தொகையா? அதை எப்படி கொடுப்பது.
‘முடியாததுதான். சரி மொத்தமாக வேண்டாம், மாதா மாதம் தவணையாக கொடுக்க அனுமதிக்கிறோம்.
இதுதானே ஏற்கனவே
125ல் இருந்தது?
அது அந்தச் சட்டம். இது இந்தச் சட்டம்.
தனது முன்னோடிகள் சென்ற வழியிலேயே பயணிப்பது மட்டுமே பாதுகாப்பானது என்று இல்லாமல், நீதியின் பொருட்டு வேறு வழியைத் தேட முடியுமா என்று சிந்திப்பவர்கள் சிலர். அதனாலேயே நீதிபதி ஏ பி ஷா இன்றும் பலரால் கொண்டாடப்படுகிறார்.
-oOo-
ஏ பி ஷாவுக்கு கிடைத்தது போல என்றென்றும் தங்கள் பெயர் சொல்லும் அருமையான ஒரு பிரச்னை தாம்பாளத்தில் வைத்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை உணராமலெயே சென்னை நீதிபதிகள் இஸ்லாமிய சட்டம் பிரிவு 85படி முறைதவறிப் பிறந்தவருக்கு வாரிசு உரிமை இல்லை என்று கூறிச் சென்றுள்ளனர்.
முதலில் இஸ்லாமிய சட்டம் என்று இயற்றப்பட்ட சட்டம் ஏதும் இல்லை. எனவே பிரிவு 85
என்பதும் இல்லை.
இஸ்லாமிய சட்ட புத்தகங்களில் நாம் காணும் பிரிவுகள் அந்தந்த புத்தக ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டவை. புத்தகத்துக்கு புத்தகம் மாறுபடும். எப்போதும் அவை சட்டமன்றத்தால் இயற்றப்பட்டதல்ல. சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் என்றால் ‘தி முஸ்லீம் பெர்சனல் லா (ஷரியத்) அப்ளிகேஷன் ஆக்ட்’1937
என்ற சட்டம்தான். இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட பிரச்னையில் ஷரியத் சட்டம் பின்பற்றப்பட வேண்டும் என்று உள்ளது.
ஷரியத் சட்ட முறைக்கு நான்கு தோற்றுவாய்கள் உள்ளது.
முதலாவது குரானில் கூறப்படுபவை. அவை இறைவனால் அருளப்பட்டவை என்பதால், அந்தக் கோட்பாடுகளுக்கு எவ்விதமான மாற்றமும் இருக்க முடியாது.
இரண்டாமவது ‘நபி வழி’ என்ப்படும் ஹதீஸ்கள். இவை முகமது நபி அவரது வாழ்க்கையில் நடந்து கொண்ட முறைகளையும், கூறிய கருத்துகளையும் அவருடன் இருந்தவர்கள் தொகுத்து அளித்தவை. நபி இறைத்தூதர் என்ற அடிப்படையில் இவைகளையும் மாற்றுதல் என்பது இயலாது.
மூன்றாவது இஸ்லாமிய அறிஞர்களால், குரான் மற்றும் நபிவழியின் உள்ளவற்றின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து. இவற்றை இஜ்மா என்கிறார்கள். அறிஞர்களின் கருத்து என்பதால், குரான் மற்றும் ஹதீஸ்கள் புரிந்து கொள்ளப்பட்டது தவறு என்றால் மாற்றுக் கருத்து உருவாகலாம்.
நான்காமவது மேற்கண்ட மூன்று முறைகளிலும் விடை கிடைக்கவில்லை என்றால் முவாத் பதில் கூறியபடி ‘நீதியின் அடிப்படையில் கூறப்படுபவை. கியாஸ் எனப்படும் இந்த சட்டம் வழக்கின் தன்மைக்குத் தகுந்தபடி மாறலாம்.
-oOo-
முறைதவறி பிறக்கும் குழ்ந்தைகள்
(illegitimate children) என்பது, இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடக்காத ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தை என்று வைத்துக் கொள்வோம்.
இஸ்லாத்தில் அவர்களின் நிலை என்ன என்ற கேள்வியை எழுப்பி, அறிவுக்குச் சற்றும் ஒவ்வாததும் சகித்துக் கொள்ளவியலாததுமான ஒரிரு பதில்களைத் தவிர்த்து, இணையத்தில் கிடைக்கும் மற்ற பதில்களை தொகுத்தால் பொதுவாக கிடைக்கும் ஒரு பதில் ‘அவ்வாறான குழந்தைகள் தங்களது அப்பாவுக்கு வாரிசாக முடியாது. அம்மாவுக்குத்தான் வாரிசாக இருக்க இயலும்’ என்பதாகத்தான் உள்ளது.
ஆனால் இந்தப் பதிலானது குரான் வசன அடிப்படையில் கூறப்படுவதல்ல. மாறாக முகமது நபி கூறியதாக கூறப்படும் ‘முறை தவறிய உறவு கொண்டவனுக்கு கல்.(the
child will be attributed to the husband and the adulterer will receive the
stone) குழந்தை கணவனோடு தொடர்புபடுத்தபட வேண்டும்’ என்ற ஹதீஸின் அடிப்படையில் கூறப்படுகிறது.
இங்கு கல் என்பதை கல்லால் எறிவது என்பதல்ல, குழந்தையிடமிருந்து அவனை அகற்றுவது என்றும் கூறப்படுகிறது.
முகமது நபி கூறியதாக கூறப்படும், ‘யாருடைய சட்டபூர்வமான ‘படுக்கை’யில் பிறந்ததோ அவருக்கே குழந்தை சொந்தமானதாகும்
(The child belongs to one on whose lawful bed it is born) என்ற மற்றொரு ஹதீஸும் இதற்கு ஆதரவாக கூறப்படுகிறது.
இங்கு படுக்கை என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்படுகிறது. இந்த விளக்கங்கள் அனைத்திலும், குழந்தையின் தகப்பன் யாராயிருப்பினும், தாயின் கணவனுக்கு குழந்தை சொந்தம் என்ற அர்த்தமும் வருகிறது.
ஆனால், முறைதவறி பிறந்த குழந்தையின் நிலை பற்றி தெளிவான ஹதீஸும் இல்லை என்று நான் இவற்றைப் புரிந்து கொண்ட வகையில் கூற முடியும். ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர்கள் கூறிய கருத்துதான் இந்த சட்டத்திற்கான தோற்றுவாய். அதாவது இஜ்மா.
ஆனால் பாவத்தில் பிறந்த அந்தக் குழந்தையும் பாவகரமானது என்பதிலிருந்து அதனை அந்தப் பெண்ணின் கணவன் ஏற்றுக் கொண்டால் அவனது வாரிசு என்பதுவரை பல முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவ்வாறு அறிஞர்களால் கூறப்படும் கருத்துகளை மதமற்ற நிலையிலிருந்து ஆராய்ந்தால், குழந்தைக்கு தகப்பன் யார் என்பது அறிந்து கொள்ள இயலாமலிருப்பதால் வரும் பழமைவாத ஆணியச் சிந்தனை மட்டுமே இவற்றின் அடிநாதமாக இருப்பதை உணரலாம்.
ஆனால், சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் பிரச்னை, கணவன் இல்லாத வேறு ஒருவருடன் உறவு கொண்டதால் பிறந்த் குழந்தையின் நிலை அல்ல.
மாறாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உறவு கொள்ள நேரிடும் இருவர் பின்னர் மணம் முடித்தால், அந்த குழந்தையின் நிலை என்ன என்பதுதான்.
மேற்கூறிய ஹதீஸ்கள் இவ்வாறான குழந்தைகளைக் குறித்து கூறப்பட்டவையல்ல.
ஆயினும் இஸ்லாமிய அறிஞர்கள் திருமணம் முடிந்து ஆறு மாதத்திற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகள் மட்டுமே வாரிசுகள். ஆறுமாதத்திற்கு முன்னரே பிறக்கும் குழந்தைகள் முறைதவறியவை என்றும் சில பத்வாக்களைக் கூறி வைத்திருக்கிறார்கள்.
சென்னை வழக்கில் ஷாகுல் ஹமீது பிறந்த தேதி
16/04/69. அவரது பெற்றோர்கள் திருமணம் செய்த தேதி
06/07/69. எனவே அந்த பத்வாக்களின் அடிப்படையில் அவர் முறைதவறி பிறந்த குழந்தை.
ஆனால் இந்தக் கருத்துக்கு குழந்தையின் தந்தை யார் என்று தெரியாமலிருப்பது என்பதைத் தவிர வேறு அடிப்படையில்லை. எனவே, இஸ்லாமிய சட்ட அறிஞர்களிடையே தற்போது மாறுபட்ட பல கருத்துகள் நிலவுகிறது.
'பெண்ணின் கணவன் அதை தன்னுடைய குழந்தைதான் என்று ஏற்றுக் கொண்ட பின்னர் எதற்கு பிரச்னை' என பலர் கேட்கிறார்கள். முக்கியமாக, ‘தி பிராப்ளம்ஸ் ஆஃப் இல்லெஜிட்டிமேட் சில்ட்ரன் இன் சுன்னி ஸ்கூல்ஸ் ஆஃப் லா’ என்ற புத்தகம் எழுதியிருப்பவரும், தனது முனைவர் பட்டத்திற்காக பத்து ஆண்டுகளுக்காக இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்தவருமாகிய மலேசிய நாட்டைச் சேர்ந்த டாக்டர்.முகமது தனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.
‘குழந்தை ஓய்விடத்திற்குச் சொந்தமானது’
(the child belongs to firash) என்ற ஹதீஸில் கூறப்படும் பிராஷ் என்ற வார்த்தையானது ‘ஓய்விடம்’ என்று அர்த்தம் கொள்ளும் அரபு வார்த்தை என்கிறார் இவர். இஸ்லாமிய அறிஞர்கள் பலர் இந்த வார்த்தையை படுக்கை என்று அர்த்தப்படுத்தி ‘குழந்தை திருமணப் படுக்கைக்கு சொந்தமானது’ என்று கூறுவது தவறு என்கிறார்.
அதாவது திருமண பந்தம் மூலம் பிறப்பது மட்டுமே குழந்தை’ என்று கருதப்பட வேண்டும் என்று கூறப்படுவது.
எது எப்படியோ, கருவுற்ற பின்னர் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் அந்தக் குழந்தையை ஏற்றுக் கொண்டால், அது தனது தந்தையின் சட்டப்படியான வாரிசு என்று ஏற்றுக் கொள்ளப்படலாமா என்ற கேள்விக்கு தற்போது இஸ்லாமிய அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது என்பது உண்மை. பொதுவான ஒருமித்த கருத்து இல்லை. எனவே இஜ்மாவும் இல்லை.
இந்த நிலையில் சென்னை வழக்குப் பிரச்னையில் முதல் மூன்று சட்ட தோற்றுவாய்களும் தெளிவான பதிலைக் கூறாத நிலையில் நீதிமன்றத்தின் முன் இருந்தது நாலாவது முறையானதும் ‘சுவனத்திற்குள் அறிஞர்களை முன்னின்று நடத்திச் செல்வார்’ என்று முகமது நபியால் குறிப்பிடப்பட்ட முவாத் பின் ஜலால் கூறிய ‘நீதியின் பொருட்டான பகுத்தாயும்’ சட்டமுறையான கியாஸ்’தான்.
அதன்படி, ‘பெற்றோர்களின் தவறுக்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாத ஷாகுல் ஹமீது, முக்கியமாக அவனது பெற்றோர்கள் பின்னர் திருமணம் முடித்து அவரது தந்தை அவரை மகனாகவும் ஏற்றுக் கொண்ட பின்னர் சட்டப்படியான வாரிசு’ என்று தீர்ப்பு கூறுவதுதான் தகுந்த நீதியாக அறியப்படும்.
கைகளுக்கில் சிக்கிய அருமையான ஒரு வாய்ப்பினை, சென்னை உயர்நீதிமன்றம் விரலிடுக்குகளின் வழியே நழுவ விட்டிருக்கிறது…
மதுரை
26/11/17
கட்டுரையில் குறிப்பிடப்படும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு
ReplyDeletehttps://drive.google.com/file/d/1tEMSCtD0kIfYaGtBlpS7xyzOrfRjj513/view
கட்டுரையில் குறிப்பிடப்படும் ஏ பி ஷா அவர்களின் தீர்ப்பு
ReplyDeletehttps://indiankanoon.org/doc/1525005/