சட்டக் கல்லூரியில் அவ்வப்போது ஸ்டிரைக் நடக்கும். அப்படி ஒரு நாள் நடந்த போது, காரணத்தைக் கேட்டால் ஆளுநர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் சட்ட மாணவர் ஒருவர் பட்டம் பெற மேடை ஏறக்கூடாது என்று தடுக்கப்பட்டதாக’ கூறினர்.
அன்று காலை செய்தித் தாளில் நானும் அந்தச் செய்தியினைப் படித்திருந்தேன். அவர் கொலைக் குற்றத்திற்கான தண்டனைக் கைதி என்றதால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக.
சில வருடங்கள் கழித்து, அலுவலகத்தில் சக ஜூனியர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்த நண்பரை எனக்கு அறிமுகம் செய்தார்.
கோடு போட்ட முழுக்கைச் சட்டையை மிக நேர்த்தியாக கால்சாராய்க்குள் இன் செய்தபடி, உயரமான தோற்றத்திலும் வசீகரமான சிரிப்பிலும் ஏதோ கம்பெனி எக்ஸிகியூட்டிவ் போல இருந்தார்.
தனது நண்பர் ‘சட்டம் உட்பட வரலாறு, சமூகவியல், கணிதம் என்று பல்வேறு முதுகலைப் பட்டங்களைப் பெற்று தற்பொழுது தண்டனைக் கைதியாக சிறையிலிருந்தபடியே கணிதத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாக’க் கூறியதைக் கேட்டதும் எனக்கு சின்ன அதிர்ச்சி.
அதுவரை கொலைக் குற்றவாளி ஒருவரை அவ்வளவு அருகில் பார்த்ததில்லை.
ஆனால் அவரோ மற்ற யாரையும் போலத்தான் இருந்தார். வாஞ்சையுடன் நான் பற்றியிருந்த அவரது கைகளில் கொலைக்கான எந்த சமிக்ஞையும் இல்லை.
‘அடடே, பட்டமளிப்பு விழாவில் உங்களை அனுமதிக்கவில்லை என்று நாங்கள் ஸ்டிரைக் எல்லாம் பண்ணியிருக்கோமே’ என்றேன்
அடிக்கடி எங்களது அலுவலகம் வருவார், எப்போதும் அந்த வசீகர சிரிப்பும் உற்சாகமான பேச்சும் என்னைக் கவரும், முக்கியமாக நேர்த்தியான அவரது உடைகள். பின்னர் சாலையில் இறங்கி நடந்து செல்லும் அவரை ‘இங்கிருந்து நேராக சிறைக்கு செல்கிறார்’ என்று யாரும் நினைக்க முடியாது.
அவரது தந்தையாரும் அவருடன் சக தண்டனைக் கைதியாக இருந்தார். மிகவும் நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்த அவரை கருணை அடிப்படையில் விடுதலை செய்விக்க எனது நண்பர் பெரும் முயற்சி எடுத்து வந்தார். ‘விடுதலை பெற்ற மனிதனாக அவரை மரிக்க விடுங்கள்’ என்று நான் கூட ஆளுநருக்கு மனு ஒன்று தயாரித்துக் கொடுத்தேன்.
ஆனால், பலனின்றி சிறையிலேயே அவர் மரணமடைந்ததாக பின்னர் அறிந்தேன்.
சில மாதங்களுக்கு முன்னர் எனது அலுவலகம் வந்த கட்சிக்காரர் தன்னுடன் துணைக்கு அழைத்து வந்த ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அந்த சிரிப்பை வைத்தே கண்டுபிடித்து விட்டேன்.
மற்ற விஷயங்களைப் பேசிய பின்னர் தனியே அவரிடம், ‘இப்போ எங்கேயிருக்கிறீர்கள்’ என்றேன் தயக்கமாக. புகழ்பெற்ற பல்கலைக் கழகம் ஒன்றில் கணிதப் பேராசிரியராக பணிபுரிவதாகக் கூறினார்.
‘பிராக்டிஸுக்கு வந்திருக்கலாமே’ என்றேன் சம்பிரதாயமாக...
‘நல்லவேளை வரவில்லை’ என்று ஏனோ இன்று நினைத்துக் கொண்டேன்
Madurai
06/10/2015

http://www.barcounciloftamilnadupuducherry.com/admin/upload/020859Order%20copy%20of%20MP(MD)No.1%20of%202014%20in%20CRL%20OP(MD)%20No.14573%20of%202014.pdf
ReplyDeletehttp://timesofindia.indiatimes.com/india/Abolish-three-year-law-courses-and-administer-bar-council-with-experts-Madras-HC-says/articleshow/49241012.cms
ReplyDelete