ஷ்ரேயா சிங்கால் வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66Aவை நீக்கம் செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்று நாளை பத்திரிக்கைகள் அனைத்திலும் தலையங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் ஏதோ 66A வந்ததிலிருந்து பறிபோன சுதந்திரத்தை மீட்டெடுத்து விட்டதாக புகுந்து விளையாட காத்திருக்கும் இணையவாசிகளை மீண்டும் எச்சரிக்க வேண்டியது அவசியம் என உணர்கிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘சைபர் க்ரைம்’ என்று எழுதப்பட்டு பின்னர் சின்மயி-ராஜன் பிரச்னையின் பொழுது மீள்பதியப்பட்ட பதிவினைப் பற்றி அறிந்திருக்கலாம்.
மீண்டும் சொல்கிறேன். நமது நாட்டில் யாரும் ஏதாவது குற்றத்திற்காக நாம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுவதில்லை. மாறாக ஏதாவது குற்றத்திற்காக காவலர்களாள் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்பதுதான் அச்சமே. ஓவியர் ஹுசைனோ அல்லது நடிகை குஷ்பு’வோ இந்தியாவின் எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து நீதிமன்றங்களிலும் இழுக்கப்பட்டு ஹுசைன் இந்தியாவை விட்டே ஓடினார். குஷ்பு அரசியல் கட்சியில் தஞ்சமடைந்தார். 66A அதற்கு காரணமில்லை.
66Aவை எடுத்துக் கொண்டாலும், அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள எந்தவொரு வழக்கிலும் யாரும் அதாவது பால் தாக்கரே பற்றி எழுதிய மும்பை சிறுமிகள் ஷாகீன் தாதா, ரினு ஸ்ரீனிவாசனிலிருந்து அசம் கானை விமர்சித்த உத்தரபிரதேச சிறுவன் வரை இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் கைது செய்யப்பட்டார்கள். சிறையிலடைக்கப்பட்டார்கள். அவமானங்களை சந்தித்தார்கள்.
66A இல்லாவிட்டாலும், இதே செயலுக்காக துணிந்தால் சம்பந்தப்பட்ட ஏதாவது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளில் காவலர்களால் கைது செய்ய முடியும். அது பிணையில் விடக்கூடிய வழக்காக இருப்பினும், காவல்நிலையம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பிணை, கையெழுத்து, வாய்தா என்று அதே அவமானங்கள். உயர்நீதிமன்றம் பின் அந்த முதல் தகவல் அறிக்கையினை நசுக்கினாலும் (quash) இந்தச் செயல் இந்த சட்டப்பிரிவுக்குள் எப்படி வரும் என்று எந்தக் காவலர் மீதும் நடவடிக்கை இருக்கப் போவதில்லை.
66A தனிப்பட்ட நபருக்கு எரிச்சலூட்டும் (annoyance) காரியத்தை செய்தாலே குற்றம்சாட்டும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. உதாரணமாக ‘மோடி ஆட்சிக்கு வந்தால் ஹோலோகாஸ்ட் நிகழும்’ என்று எழுதியதும் அல்லது மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து வரையப்பட்ட கார்ட்டூனையும் கூறலாம். இந்த ஒரு கூறுதான் 66Aவை அதே போன்றதொரு மற்ற இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளிலிருந்து வேறுபடுத்துகிறது. 66A இல்லாதது இத்தகைய செயல்களை மட்டுமே பாதுகாக்கலாம்…..லாம்’தான்.
ஏனெனில் பாராளுமன்றத்தைப் பற்றி கார்ட்டூன் வரைந்த அசீம் த்ரிவேதி மீது 66Aவோடு தேசதுரோக (sedition) குற்றமும் சுமத்தப்பட்டது. அசம் கானைப் பற்றி எழுதப்பட்ட செயலிலும் 66A இல்லாவிட்டாலும், ‘அவர் கோபமுற்று தனது தொண்டர்களைத் தூண்டி விட்டு கலவரம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதினார்’ என்று இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 504ல் வழக்கு பதிவு செய்து கைது செய்தால் நீதிமன்றங்கள் பிணை வழங்கலாம், முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடியும் செய்யலாம். ஆனால் அதற்குள் சம்பந்தப்பட்டவர் வேண்டிய கஷ்டத்தை அனுபவித்து விடுவார்.
எனவே, நாளை செய்தியைப் படித்து விட்டு ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை தூசி தட்ட ஆரம்பித்து விடாதீர்கள்.
மதுரை
24/03/15
Showing posts with label 66A. Show all posts
Showing posts with label 66A. Show all posts
Wednesday, 25 March 2015
Subscribe to:
Posts (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....
-
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம் . வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தே...
-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத...

