ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னர் அதுவும் செய்தித்தாளின் ஏதோ ஒரு மூலையில் படித்தது. சிறிய சம்பவம்தான், ஆனாலும் இரு நாட்களாக உலகின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் படம் அதை மீண்டும் நினைவூட்டியது.
அரபு நாடு ஒன்றில் வேலை பார்த்து வந்த கேரள வாலிபர் திருமணத்திற்காக இந்தியா வந்திருந்தார். திருமணமாகி, விடுமுறையும் முடிந்து வேலைக்குத் திரும்ப வேண்டும். அப்போது இன்று போல இணையும் கிடையாது. தொலைபேசியும் அதீத கட்டணம்.
விமானம் ஏறினால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு திரும்ப முடியாது.
வழியனுப்ப வந்த மனைவிக்கும் துயரம். தாங்கவொண்ணா மன எழுச்சியில் இருவரும் நிற்பது திருவனந்தபுரம் பேருந்து நிலையம் என்றும் பாராமல் கட்டியணைத்து முத்தமிட்டனர். இவர்களது செயலின் வேதனை புரியாத மற்ற பயணிகள் காவலரிடம் புகார் செய்ய இருவரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தம்பதிகளை விசாரித்த காவலர்கள் அவர்களை வெறுமே எச்சரித்து அனுப்பினாலும், இருவரும் சென்ற இடம் விமான நிலையம் அல்ல.
நேராக ஒரு லாட்ஜுக்கு சென்று, அங்கே தற்கொலை செய்து கொண்டனர்.
-oOo-
அவ்வப்போது, மத்திய கிழக்கு நாடுகளில் வேலை நிமித்தமாக இளம் வயதிலேயே குடும்பங்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழ நேரிடும் தொழிலாளர்களைப் பற்றி படிக்கையில் எல்லாம் இந்த சம்பவம் நினைவுக்கு வரும்.
தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் அனுமதி அளிக்காமல், அவர்களது உழைப்பைச் சுரண்டி மாட மாளிகைகளைக் கட்டி வாழ்வதிலும் அதில் பெருமைப்படுவதிலும் என்ன நிம்மதி இருக்க முடியும் என்று அரபு நாட்டு ட்ரில்லியனர்கள் மீதும் கோபமும் வரும்.
அதி தீவிரமாக பின்பற்றுவதாக இவர்கள் கூறிக் கொள்ளும் இஸ்லாம் மதம் தொழிலாள தம்பதிகளை மாதக்கணக்கில் பிரித்துப் போடுவதற்கு அனுமதிக்கிறதா என்ற கேள்வியும் இறுதியில் எழும்.
மத்திய கிழக்கு அரசியல் நிலவரம் பற்றி முழுமையாக அறிந்ததில்லை என்றாலும், பாலஸ்தீனம் தவிர பிற நாட்டு அகதிகளை, அவர்கள் முஸ்லீமாக இருந்தாலுமே ஏற்றுக் கொள்வதில்லை என்றே தெரிகிறது.
ஐரோப்பியர்களுக்கு பின் மன ரீதியில் அழுத்தம் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
மதுரை
05/09/15



Migavoom varnthum saithyi
ReplyDelete