ஆடு மேய்ப்பது ஒரு குற்றம் என்றால், அதைத் தவிர வேறு ஏதும் குற்றச் செயலில் ஈடுபடாதவர்கள்தாம், அவர்கள் இருவரும்...
அவர்களது கிராம எல்லைக்குள், கம்பீரமாக ஓங்கியுயர்ந்து புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடத்தினைப் பார்த்து, மற்ற கிராமவாசிகளைப் போல பெருமைப்பட்டவர்கள்தாம் அவர்கள்.
‘இது நம் கட்டிடம்’ ‘நம்மைப் போன்ற மக்களுக்கானது’ என்று மக்களாட்சித் தத்துவம் அவர்களை நினைக்க வைத்திருந்தது.
அதனால்தான், தங்களது ஆடுகளுக்காக, கட்டிடத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மதில்சுவர் மீது ஏறி தழைகளை ஒடிப்பதும் ஒரு தவறென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அவர்களது துரதிஷ்டம், அந்தக் கட்டிடத்தில் பெருமைமிகு பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கண்களில், ஏதோ உள்ளேயே கட்டப்பட்டிருந்த தனது வீட்டில் திருட வந்தவர்களாகப் பட்டனர். அல்லது நாடு முழுவதும் எழுப்பி விடப்பட்டிருக்கும், பய உணர்ச்சியில் (fear psychosis) தன்னை தாக்க வந்தவர்களாகவும் நினைத்திருக்கலாம்.
‘விடாதே, பிடி அவர்களை’ என்றாராம், தனது காவலர்களிடம்.
இருவரில் ஒருவர் சுதாரிப்புடன் ஓட, மற்றவர் தான் என்ன செய்துவிட்டோம் என்று ஓடவில்லை.
தனது காவலரிடம் ஓடியவரை ‘அவனை சுடு’ என்று உத்தரவிட்டதாகவும், காவலர் தயங்கி மறுத்ததாகவும் தகவல்.
-oOo-
பிடிபட்டவரை, அருகிலிருந்த காவல் நிலைய அதிகாரி, மூன்று நாட்கள் தனது காவலிலேயே வைத்திருந்தாராம். கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது, முக்கியமான சட்டம்.
காவல் அதிகாரி இரக்கமானவர். பிடிபட்டவரின் உறவினர்களை, ‘ஐயாவைப் பார்த்து இரக்கம் காட்டச் சொல்லுங்கள். அவர் சொன்னால், வழக்கு ஏதும் இல்லாமல் விட்டு விடுகிறேன்’ என்று சொல்லித்தான் மூன்று நாட்கள் வைத்திருந்தாராம்.
ஆண்களாகப் போனால் ‘ஐயா’ கோபப்படுவார் என்பதால், பெண்களெல்லாம் கிளம்பி ஐயாவைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றாலும், ஐயாவை பார்க்க முடியவில்லையாம்.
வேறு வழியில்லாமல், காவல் அதிகாரி, ‘ஐயா வீட்டில் மரச்சாமான்களை திருட சுவரேறிக் குதிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்து’ நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார். ‘ஐயா வீட்டிலேயேவா’ என்று ஜாமீன் தாக்கல் செய்ய ஆளில்லை. தாக்கல் செய்தவரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே தயக்கத்தில் வாபஸ் வாங்கி விட்டாராம்.
ஏறக்குறைய ஒரு மாத நீதிமன்ற காவலுக்குப் பிறகு தற்பொழுது பிணை மனு (bail application) தாக்கல் செய்யப்பட்டு, கிடைத்தும் விட்டது!
நீதிபதி, ‘ஐயா வீடென்றால் பிணை கொடுக்கக் கூடாது என்றா இருக்கிறது?’ என்று வியந்தாராம்!
எனக்கும் வியப்பு, ‘அரசுக் கட்டிடத்தினை பயங்கரவாத தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பது’ என்று குழை ஒடிக்க வந்த பயங்கரவாதியை முன்னிருந்தி, தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருவதால்...
மதுரை
09/01/09
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....
-
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம் . வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தே...
-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத...


Nice article
ReplyDelete