பத்து வருடங்களுக்கு முன்னர் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் திறப்பு விழாவிற்கு வந்திருந்தவன், புதிதாய் கிடைத்திருந்த டிஜிட்டல் காமிராவால் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். எதேச்சையாக எதிரேயிருந்த யானை மலையையும் சில படங்கள் எடுத்தேன். பின்னர் வீட்டிலிருந்த மேசைக் கணணியில் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, யானை மலை படத்தைக் கடந்து என்னால் செல்ல முடியவில்லை. அப்படியே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கம்பீரம், அழகு என்பதை எல்லாம் கடந்து ஏதோ ஒரு வசீகரம் என்னை யானை மலை படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது.
‘ஐந்து ஆண்டுகள் இங்கு கல்லூரியில் படித்திருக்கிறோம். பின்னர் எத்தனையோ தடவை வந்து போயிருக்கிறோம். சென்னையிலிருந்து வருகையில் மதுரை வந்து விட்டது என்பதற்கு அடையாளமாக, விடிகாலை வெளிச்சத்தில் மங்கலாக தெரியும் என்பதை விட இதன் அழகை நாம் கவனித்ததில்லையே’ என்றிருந்தது.
தொடர்ந்து யானை மலையைப் பற்றி இணையத்தில் மேய்கையில் ஆஸ்திரேலியாவில் உள்ள உலகப் பிரச்சித்தி வாய்ந்த ஆயிர்ஸ் மலைக்கு அடுத்தபடியாக யானை மலைதான் ஒரே பாறையில் (monolithic rock) அமைந்த இரண்டாவது பெரிய மலை என்று தெரிய வந்த பொழுது, எவ்வளவு பெரிய பொக்கிஷ்த்தின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே இருந்திருக்கிறோம் என்று வெட்கமாகி விட்டது.
பின்னர் மதுரை வந்த பொழுது, ஒத்தகடையில் உள்ள அனைத்து கடைகளிலும் யானை மலை படம் இருப்பதும், ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கு ஆயிர்ஸ் மலை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதே போல இவர்களுக்கும் யானை மலையும் புனிதம் வாய்ந்தது என்பதும் புரிந்தது.
புனிதம் என்பதையும் மீறி அதன் அழகு! புகைப்படம் எடுக்கையில் ஒவ்வொரு பக்கமும் எந்த ஒரு வெளிச்ச நிலையிலும் வித்தியாசமாக இருக்கும்.
நண்பர் ஒருவர் யானை மலை முழுவதும் சுற்றிக் காண்பித்து மகாவீரர் சிற்பத்தைக் காட்டிய பொழுது, நபிகள் இயேசு பிறந்த காலத்திற்கும் முற்காலத்திற்கு சென்று அந்த சிற்பம் முன் நிற்பது மாதிரி ஒரு சிலிர்ப்பு தோன்றியது.
சில வருடங்களுக்கு முன்னர் எனது நண்பர், திமுக கட்சியைச் சேர்ந்தவர்தாம் ‘யானை மலையை கிரானைட் கல்லுக்காக உடைக்கப் போவதாக சொல்கிறார்கள். ஏதாவது செய்’ என்றதற்கு ‘அரக்கத்தனமான எண்ணம் கொண்ட மனதால்தான் அப்படி ஒரு காரியத்தை நினைத்துக் கூட பார்க்க முடியும். அதெல்லாம் ஒத்தக் கடைக்காரர்கள் விடுவார்களா’ என்று அலட்சியப் படுத்தினாலும், வேறு வடிவில் அப்படி ஒரு முயற்சி நடந்ததும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உடனடி நடவடிக்கையால் அது தடுக்கப்பட்டதும் வரலாறு.
ஏன், இன்று திடீரென யானை மலை புராணம் என்றால் மாலை உலகனேரிப் பக்கம் சென்ற பொழுது, ‘அங்கே பாருங்கள் யாரோ யானை மலை மீது நாமத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள்’ என்று மனைவி சுட்டிக் காட்டியதில் இருவரும் சற்று திகைத்துப் போனோம்.
2002ம் ஆண்டில் ஹிமாலய மலைப் பாறைகளில் விளம்பரங்கள் எழுதியதற்காக உச்ச நீதிமன்றம் பெப்ஸி கோக் போன்ற பல நிறுவனங்களுக்கு பெரும் தண்டத் தொகை விதித்த உத்தரவை மீறும் வண்ணம் இந்த நாமமும் யானை மலையின் முக்கியமான இடத்தில் தீட்டப்பட்டுள்ளது. Rape of the Rock என்று அந்தச் செயலை உச்ச நீதிமன்றம் வருணித்தது.
எந்த மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் நாமம் தீட்டுவதை புனிதமாக கருதுபவர்கள் கூட எனது ஆதங்கத்தைப் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். இது இத்துடன் நிற்கப் போவதில்லை.
தயவு செய்து, யானை மலையில் வேண்டாமே!



http://www.thehindu.com/news/cities/Madurai/thiruman-on-yanaimalai-rakes-up-controversy/article7577514.ece
ReplyDelete