பத்லாபூர். ஹிந்தி திரைப்படம். ஸ்ரீராம் ராகவன் என்ற தமிழர் இயக்கியது. அதனாலோ என்னவோ தமிழில் பேசும் பாத்திரமும் உண்டு. சிறந்த திரைப்பட ரசிகர் ஒருவரின் சிபாரிசால் பார்த்தாலும் திரைக்கதை பல திசைகளிலும் பயணித்ததால் கொஞ்சம் இழுவையாகி விட்டது.
ஆனால், நவாசுத்தீன் சித்திக் என்று ஒருவர் வில்லனாக வருகிறார். செய்த தவறுகளுக்கு கடைசி வரை மனம் திருந்தாமலிருப்பதைத் தவிர பெரிய வில்லத்தனம் ஏதும் செய்யவில்லை என்றாலும், அவர் வரும் காட்சிகளில் ஏறக்குறைய ஹன்னிபல் லெக்டர் அளவிற்கு நம் மனதை ஏதோ விரும்பத்தகாத உணர்வில் சில்லிட வைக்கிறார். அந்தக் காலத்தில் நம்பியார் எதற்கு கைகளைப் போட்டு அப்படி பிசைந்தார் என்றிருக்கிறது. வடநாட்டு பிரகாஷ்ராஜான நானா பட்டேகர் கூட சிறந்த ‘நடிகர்’தான்.
நான் சொல்ல வந்தது கதாநாயகனான வருண் தவானைப் பற்றி. பெரிதாக ஒன்றும் இல்லை. அடிக்கடி லேசாக தலையை வலப்பக்கம் சாய்த்து கூர்மையாகப் பார்க்கும் போதெல்லாம், வேறு யாரையோ நினைவு படுத்தினார். இறுதியில் கண்டு பிடித்து விட்டேன். க்யானு ரீவ்ஸ்.
அது என்னமோ அடிக்கடி இப்படி நடக்கிறது. இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை சுவராசியமான திரைக்கதையாக்கியுள்ள ‘த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ என்ற அருமையான படத்தில் அவரது மனைவியாக நடித்துள்ள ஃபெலிஸிடி ஜோன்ஸ் திவ்யஸ்ரீயை ஞாபகப்படுத்தினார்.
ஹாக்கிங்’கின் வாழ்க்கை கற்பனைக் கதையை விட அதிக உணர்வலைகளால் நிரம்பியிருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதுவும் ஹாக்கின்ஸாக நடித்துள்ள எட்டி ரெட்மெய்னின் நடிப்பும் ஒப்பனையும், பார்த்து அனுபவிக்க வேண்டும்.
நேற்றுப் பார்த்த ‘த ஏஜ் ஆஃப் அடலைன்’ என்ற படத்தில் ‘யார் இது அமிதாப் பச்சன் மாதிரி’ என்று பார்த்தால் கல்லூரிக் கால ஹீரோ ஹாரிஸன் ஃபோர்ட்.
ஏதோ அசந்தர்ப்பமான நிலையில் விபத்துக்குள்ளாகும் கதாநாயகி அடலைன் மொண்ணையான விஞ்ஞான விளக்கத்தில் வயதாகும் தன்மையை இழந்து 29 வயதிலேயே அவரது 107ம் வயது வரை நின்று விடுகிறார். அதனால் ஏற்ப்படும் பிரச்னையை அழகிய காதல் கதையாக்கியிருக்கிறார்கள். வயதாகாமல் போவதில் என்ன பிரச்னை என்று ‘If I had your looks and energy, I’d fall in love tomorrow’ என்று கூறும் அடலைனின் அறுபது வயது மகளைப் போல நினைக்கலாம்.
ஆனால் ‘It’s not the same when there’s no future’ என்று தனது காதலுணர்வைப் பற்றி அடலைன் கூறுவதில் பிரச்னை புரியும். இனிமையாக முடியும் சாதாரண காதல் கதைதான். அசாதாரண பிரச்னையால் வித்தியாசமாக இருந்தது.
எதிர்காலத்திற்குள் பயணிப்பது அச்சமூட்டுவதாயிருப்பினும் நிகழ்காலத்திலே நின்று விடும் உணர்வுதான் உண்மையிலேயே அச்சமூட்டுகிறது. ஹாக்கிங்’கிடம் அடைக்கலம் தேடினாலும், எதிர்காலம் என்ற ஒன்றே ஒருநாள் இல்லாமல் போகப் போகிறது என்று விஞ்ஞானத்தாலும் அச்சமூட்டுகிறார்.



No comments:
Post a Comment