Sunday, 16 August 2015

சோளகர் தொட்டி

‘கோர்ட்டில் கதையெல்லாம் படிக்கக் கூடாது’ என்ற குரல் கேட்டு தலையைத் தூக்கினால், பார் கவுன்ஸில் சேர்மன் செல்வம். அவருக்கே உரிய வசீகரமான புன்னகையுடன் இன்று காலை என் அருகே வந்து அமர்ந்தார்.

கையிலிருந்த புத்தகத்தை அவரிடம் கொடுத்து, ‘தமிழில் குறிப்பிடத்தக்க நாவல் இது. எழுதியவர் ஒரு வழக்குரைஞர். தற்பொழுது கோவையில் பணியாற்றுகிறார்’ என்றேன்.

புத்தகத்தை வாங்கிப் பார்த்தவரிடம், ‘திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்குரைஞர் செல்வராஜ், ‘தோல்’ என்ற நாவல் எழுதியதற்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்’. அவரைப் பாராட்டி எங்களது சங்கத்தில் கூட்டம் நடத்தியுள்ளோம். வழக்குரைஞர் தொழிலுக்கு வெளியேயும் சாதித்துள்ள இவர்களைப் போன்றவர்களை அழைத்து ஏன் பார் கவுன்ஸில் கவுரவிக்கக் கூடாது’ என்றதற்கு ‘ஆமாமா, கட்டாயம் செய்ய வேண்டும் என்றார்’

நேற்று வரை நம்மைப் போல வழக்குரைஞராக பணியாற்றி இன்று நீதிபதியாக பதிவியேற்றுள்ள ஒரே காரணத்தை வைத்து ஒருவரை அழைத்து பேச வைத்து கவுரவிக்கும் பார் கவுன்ஸில், கடின ஆராய்ச்சி மூலம் சமூகத்தின் முக்கியமான நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ள சாதனையாளர்களைப் பாராட்டுவதால் தனக்கு பெரும் கவுரவம் தேடிக் கொள்ளலாம்.

வழக்குரைஞர் பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையால், மலையக பழங்குடி மக்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பாதிப்புகளையும் அதன் அவலங்களையும் ஆவணப்படுத்தும் முக்கியமான புதினம். வீரப்பன் இல்லை என்றாலும், காடுகளுக்குள் நகரத்து மக்களின் ஊடுருவலால் இன்றில்லாவிட்டாலும் எப்படியும் ஒரு நாள் சிதிலமடைந்துப் போகப் போகும் சோளகர்களின் கொண்டாட்டமான வாழ்க்கை முறையை உறையச் செய்து படிப்பவர் அனைவரையும் கடந்த காலத்திற்குள் அழைத்துச் செல்லும் கால யந்திரமாக, பாலமுருகன் தனது புதினத்தைப் படைத்துள்ளார்.

இரு பாகங்களாக அமைந்த நாவலின் முதல் பகுதியில் நிகழும் கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் நம்மை உற்சாகப்படுத்தும் அதே சமயம் அடுத்து நிகழப்போகும் பயங்கரங்களுக்கான அச்சத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றன. இரண்டாம் பகுதி செல்லச் செல்ல தொடர்ந்து படிப்பதற்கு கடுமையான் நெஞ்சுரமும் இரக்கமற்ற மனசும் வேண்டும்.

வாழ்வதற்கான உரிமை, மனித உரிமை, பேச்சுரிமை என்று உரத்த குரலில் பேசிப் புளங்காகிதம் அடையும் நாமும், நமது ஊடகங்களும் நீதிமன்றங்களும் சிவண்ணாவின் பெண்டாட்டி மாதி அவள் மகள் சித்தி இன்ன பிற சோளகப் பெண்டுகளின் முன்னால் நிர்வாணமாக நிற்பது போல ஒரு அருவருப்பு அதிரடிப்படை காவலர்கள் முன் அவர்கள் அடைந்த அருவருப்பையும் விடவும் அதிகமாக படிக்கும் நம்மை படர்கிறது.

அந்த உணர்வு ஒன்றுதான் பாதிக்கப்பட்டவர்களிடம் நாம் வேண்டும் பாவமன்னிப்பாக இருக்குமென்றால், பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ அதை நன்றாகவே ஊட்டுகிறது.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....