Sunday, 24 January 2016
சீட்டிங் கார்ட்!
‘சார் நீங்க வக்கீலா சார், சரி உங்க சீட்டிங் கார்ட கொடுங்க’
‘……………………….’
‘அதாங் சார்…உங்க கார்டு, அதக் கொடுங்க’
மாமியார் அட்மிட் ஆகியிருக்கும் ஆஸ்பத்திரி வாயிலில் எதேச்சையாக பார்த்த நபர் வக்கீலென்று தெரிந்ததும், மாமியாரின் சொத்தினை எப்படியாவது எழுதி வாங்கி விட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கும் வடிவேலு’வின் க்ளாசிக் வசனம்.
தமிழக மாஸ் கதாநாயகர்கள் சில படங்களில் பல காட்சிகளில் சொல்ல நினைத்ததை, வடிவேலு மிகச் சாதாரணமாக ஒரு வரியில் சொல்லிப் போன காட்சி அது.
திரைப்படங்களில் தங்கள் மீதான கிண்டல்களை அவ்வப்போது எதிர்த்து வந்தாலும், வழக்குரைஞர்கள் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளும் கதைகள் சுவராசியமானவை
தொழில் தொடங்கிய சில வாரங்களில், மற்றொரு வக்கீல் என்னைப் பற்றி விசாரித்தார். ‘கல்யாணம் எல்லாம் இப்ப எதுக்கு?’ என்றேன்.
‘தம்பி, இப்பவே பண்ணிக்கிட்டீங்கன்னா, பாக்க வர்ரவங்க சின்னப்பையன் நல்ல துடிப்பா இருக்காரு. சீக்கிரம் மேல வந்துருவாரு’ம்பாங்க. அதுவே கொஞ்ச வருசம் போச்சுன்னா ‘இன்னும் ஜூனியராவேவா இருக்காருன்னுருவாங்க’ என்று கிலியேற்றினார்.
அதுக்கு ஏற்ற மாதிரி நான் அங்கு கேள்விப்பட்ட ஒரு சம்பவம். இளம் வக்கீல் ஒருவருக்கு திருமணம். மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் ‘திமு திமு’ வென்று நாலைந்து நபர்கள் உள்ளே நுழைந்து நேராக மாப்பிள்ளையிடம் போய், ‘ஐயா நம்ம ஆளுங்களை போலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்க. நீங்கதான் இப்ப வந்து எப்படியாவது காப்பாத்தணும்’னு அழுததும் மாமனாரின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்ததாம்.
எல்லாம் அவரோட ‘செட்டப்’புன்னு சொல்லிச் சிரிச்சாலும், கேட்ட நான் அதையும் நம்பவில்லை. சம்பவத்தையும் நம்பவில்லை.
இது கொஞ்சம் மைல்ட். குறும்புத்தனமானது (mischievous) மற்றது கொஞ்சம் தீவிரமானது என்றாலும் நடந்திருக்கலாம் என்று நம்பினேன். Wicked வகை.
அந்தக் காலத்தில் பின்னால் சாயக்கூடிய குஷன் வைத்த பெரிய சைஸ் சுழல் நாற்காலி அவரிடம்தான் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்த்தாலே எனக்கு ஏனோ பயமாக இருக்கும் என்றாலும், எங்கு எப்போது பார்த்தாலும் வாய் நிறைய ‘வாங்க தம்பி’ என்று பாசத்துடன் அழைப்பார். கிரிமினல் வக்கீல் என்றாலும் அவரின் மேலான வேறு பல குணங்களுக்காக பெரிதும் அறியப்பட்டிருந்தார்.
அதற்கென்றே ஒரு ஆளை வைத்திருந்தாராம். மாலை நேரங்களில் கட்சிக்காரர்கள் இருக்கும் போது ‘டிப் டாப்’பாக உடை அணிந்து தோரணையாக அலுவலகம் செல்ல வேண்டுமாம். டிப்டாப் ஆசாமியை வாயிலில் பார்த்தவுடனே, நம்ம வக்கீல் ‘வாங்க எஸ் பி சார்’ என்று எல்லோருக்கும் கேட்கும்படி வரவேற்று உள்ளே வீட்டிற்குள் அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் உபசரித்து பின் அனுப்பிய கையோடு, ‘நம்ம பயதான்’ என்று நாற்காலியில் உட்கார்ந்தால் கட்சிக்காரன் மரியாதையில் தன்னால எழுந்து விடுவானாம்.
அது கூட பரவாயில்லை. எமர்ஜண்ட் சூட் போடணும்னு யாராவது கட்சிக்காரர் தெரியாம மாட்டுனார்னா, பிராது எழுதுன கையோட குமாஸ்தாவிடம் ‘அப்படியே அந்த முன்சீப்புக்கு போன போடுறா. நாளைக்கு அவன் கோர்ட்டுல எமர்ஜண்ட் கேஸ் போடறேன்னு சொல்லு’ன்னு சொல்வாராம்.
ஆனால் மும்பையில் கேள்விப்பட்டதுதான் ஆக மோசம். மலீஸியஸ் வகை.
‘வாங்க போய் ஜட்ஜைப் பார்த்து கொடுத்துட்டு வந்துருவோம்னு சொல்லி சூட்கேஸுடன் க்ளையண்டையும் கூட்டிக் கொண்டு போவாரம். சூட்கேஸோட இவர் மட்டும் நீதிபதி அறைக்குள் சென்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு வெளியே வரும் போது சூட்கேஸ் மிஸ்ஸிங் ஆகியிருக்கும். ‘சரி எல்லாம் முடிஞ்சிருச்சி’ன்னு கட்சிக்காரரை அனுப்பி விட்டு மீண்டும் உள்ளே போய், ‘ஐயா பெட்டியை மறந்து வச்சிட்டுப் போயிட்டேன்னு’ பவ்மயமா பெட்டியோட வெளியே வந்துருவாராம்.
நான் நம்பவில்லை. ஆனால் அமெரிக்க மீடியாக்களில் வக்கீல்களை அந்தக் கலாய் கலாய்க்கிறார்கள். ரொம்பத்தான் பயமோ?
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....

-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
Luden was a fisherman. The Government has enrolled Luden under a Group Insurance Scheme through National Federation of Fishermen Co-ope...
-
‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’ சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப்...
No comments:
Post a Comment