Wednesday, 22 April 2015

மெளனத்தின் அலறல்...

அவசர சட்டம் நிலுவையில் இருந்த காலத்தில் வசித்தவர்கள் அறிவார்கள். அரசு நடவடிக்கைகள் குறித்த எதிர்மறையான செய்திகள் மக்களைச் சென்று அடைந்து விடக்கூடாது என்பதில் இந்திராவின் ஆலோசகர்கள் குறிப்பாக இருந்தார்கள். கடுமையான பத்திரிக்கைத் தணிக்கை. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் முதல் முழுப்பக்கமும் கறுப்பாக வெளிவந்தது வரலாறு.

ஆனால், விளைவு அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தது. செய்திகளே இல்லாத நிலையில், மக்கள் விரைவில் வதந்திகளையே உண்மை என நம்பத் தொடங்கினர். ‘ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் அனைவரையும் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்கிறார்கள்’ என்று வட மாநிலம் முழுவதும் மக்கள் முழுமையாக நம்பிய வதந்திதான், 1979ல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (17/04/15) அன்று நமது உயர்நீதிமன்றம் அதன் 150 ஆண்டு கால வரலாற்றில் சந்தித்திராத புதுமையானதும், ரசாபாசமானதுமான அரசியலமைப்பு சட்டச்சிக்கலைச் சந்திக்க நேரிட்டது. வெள்ளிக்கிழமை மதியம் வாட்ஸப் மூலம் சென்னை மதுரை வழக்குரைஞர்கள் அனைவரிடமும் பகரப்பட்டு விவாதிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவு உண்மையாக இருக்காது என்றுதான் கருதப்பட்டது. மாலையே இரு நீதிபதிகளின் உத்தரவும் வெளிவந்த நிலையிலும், நான் நம்பவில்லை.

மறுநாள் காலை தமிழ் ஆங்கிலம் என்று அனைத்து செய்தித்தாள்களை மேய்ந்தாலும், எங்கும் இது பற்றிச் செய்தியில்லை. உயர்நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானதும், முதல்முறையானதுமான இந்த நிகழ்வு பொது மக்கள் யாருக்கும் சென்று சேர்வதைத் தடுப்பதன்  விளைவு, இரு உத்தரவுகளையும் அதன் பின்னணிகளையும் பற்றிய வதந்திகள்தான் நாளை முதல் செய்தியாகப் போகின்றன.

சாதனைகளிலும், வெற்றிகளிலும் இருப்பதை விட வேதனைகளிலும், தோல்விகளிலும்தான் விவாதிப்பதற்கும் படிப்பதற்கும் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்ததால்தான், இன்று விஞ்ஞானமும், மருத்துவமும், தொழில்நுட்பமும் இத்தனை வளர்ச்சியடைந்துள்ளது. அந்த உண்மையை அறியாதலால் சட்டம் கடந்த நூற்றாண்டிலேயே இன்னமும் நின்று கொண்டிருக்கிறது.

(ஏப்ரல் 19 அன்று எனது முகநூலில் இந்த எனது ஆதங்கத்தை எழுதிய பின்னர் இந்து நிரூபர் தனது எதிர்வினையில், ‘சம்பந்தப்பட்ட வழக்கினைப் பற்றிய விபரங்களை  பத்திரிக்கைகளில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது’ என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்பது அடுத்த பிரச்னை)

Friday, 17 April 2015

மும்தாஜும் பத்ரிநாத் ஐஏஎஸ்ஸும்


'தமிழ் திரைப்பட நடிகை மும்தாஜ் சற்று ரசபாசமான பெயர்களைக் கொண்ட மூன்று பத்திரிக்கைகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 11 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டதாக' நாளிதழ்களில் வெளியான ஒரு செய்தியை எண்ணங்கள் பத்ரி நாராயணன் (கிழக்கு பதிப்பகம்) தனது வலைப்பதிவில் வெளியிட்டு, 'இத்தனை விரைவாக நமது நீதிமன்றங்களில் அவதூறு வழக்குக்கு நீதி கிடைத்ததை சற்று சந்தேகத்தோடு பாராட்டியுள்ளார்.

அவரது சந்தேகம் நியாயமானதே! பொதுவாக இவ்வாறான வழக்குகளில் வழக்கு நடைபெற்று இறுதி தீர்ப்பு கிடைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் ஆகலாம். சென்னையில் சுமார் பத்து ஆண்டுகளாவது ஆகலாம் என்பது எனது யூகம். அப்படி இருக்கையில் மும்தாஜுக்கு இது எங்ஙனம் சாத்தியமாயிற்று? ஒன்றும் பெரிதாக இருக்காது. பல சமயங்களில் பிரதிவாதியானவர்கள், அதுவும் இது போன்ற 'மஞ்சள் பத்திரிக்கை' மனிதர்கள் நீதிமன்ற அழைப்பினை ஏற்காமல் ஏமாற்ற முனைவர். 'நாம் போகாவிட்டால் என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற அலட்சியமும் காரணமாக இருக்கும். எனவே நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் 'வராதவர்கள்' என உத்தரவிடப்பட்டு மும்தாஜுக்கு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு கிடைத்திருக்கலாம்.

'எக்ஸ்பார்ட்டி தீர்ப்பாக' இருக்கப் போகிறது என பத்ரிக்கு மடல் எழுதினேன். மனிதர் உடனே, 'இந்தியாவில் இப்படி லட்சக்கணக்கான ரூபாய்கள் அவதூறு வழக்குக்கு நஷ்ட ஈடாக வழங்கியதாக' தீர்ப்புகள் இருக்கிறதா? என்று கேட்க, முன்பு எப்போதோ இல்ல்ஸ்டிரேட்டட் வீக்லி (ஞாபகம் இருக்கிறதா?) பத்திரிக்கை மீதான நஷ்ட ஈடு தீர்ப்பு ஞாபகம் வர.. .'ஏகப்பட்டது இருக்கே' என்று சொல்லி விட்டாலும்...பின்னர் வலையில் தேடினால், ஏறக்குறைய எல்லோரும் எல்லோர் மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்த விபரம்தான் கிடைத்தது. தீர்ப்பான விபரம் எதுவும் இல்லை. ஆமாம், இதே மும்தாஜ் பத்து வருடம் கழித்து நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்லி....அவதூறு என வாதிட்டு அதை நீதிபதி தீர்க்கவா?

பத்ரிநாத் வழக்கில் கூட அப்படித்தான் ஆயிற்று.

திரு.சதுர்வேதி பத்ரிநாத் வரலாற்று அறிஞர். ஆனால் துரதிஷ்சவசமாக மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலரும் கூட. அவரது வரலாற்றுப் பிரியமோ அல்லது அரசுக்கு அவர் மீதான கோபமோ, சென்னையிலுள்ள ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கான துறையின் ஆணையராக இருந்தார். 1973, செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியிலுள்ள வரலாற்றுக் குழுமத்தில் பேச அழைக்கப்பட்டவர், சிறிது காலத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட காலப்பெட்டகத்தில் இருந்ததெல்லாம் வெறும் வரலாற்றுப் புரட்டு, அவை 'வரலாறுமல்ல புனைகதையுமல்ல' என்று ஒரே போடாக போட்டார்.

அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியே இப்படிப் பேசியது அரசுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி...விவகாரம் பாராளூமன்றத்திலும் வெடித்தது. புதைக்கப்பட்ட காலப்பெட்டகத்தைப் பற்றிய இந்த சந்தேகம், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு அவமானம் எனக்கருதிய அரசு, பத்ரிநாத் மீது அரசு அலுவலர்கள் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடர்ந்தது.

காலச் சுழற்சியில் ஆட்சிகள் மாறின. ஆகஸ்ட்'1977ல் தமிழக அரசு பத்ரிநாத் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தது. ஆனால் அதற்கு முதல்நாள் இந்தியன் எக்ஸ்பிரள் நிருபர் சாஸ்திரி ராமச்சந்திரன் காலப்பெட்டக பிரச்னை பற்றி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் 'பத்ரிநாத் அரசுப்பணியில் இருந்து கொண்டே அதனை சீர்குலைக்க முயன்றார்' என்று அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாக எழுதப்பட்டிருந்தது.

இதனால் மிகவும் மனவேதனையடைந்த பத்ரிநாத், எக்ஸ்பிரஸ் செய்தியாளருக்கு கடிதம் எழுத, அவரோ தனது பதிலில், தான் குறிப்பிட்ட செய்தித் தொடர்பாளர் தலைமைச் செயலாளரான கார்த்திகேயன்தான் என்று போட்டுடைத்ததோடு நில்லாமல், அவர் வேறு பல தகவல்களையும் தனது தொலைபேசி உரையாடலில் கூறியதாக' தெரிவிக்க பத்ரிநாத் வெகுண்டெழுந்தார். அடுத்த நாளே முதல்வரை நேரில் சந்தித்து தனது பிரச்னைகளை முறையிட வேண்டுமென்று கோரியும் எவ்வித பதிலும் இல்லை. எனவே 28ம் தேதி தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டுமென்றும் அதற்கு அரசு அனுமதி வேண்டுமென்றும் கூறி வேண்டுகோள் விடுத்தார். எதிர்பார்த்தபடியே அரசு 1978' பிப்ரவரியில் 'பொதுநலத்தை' சுட்டிக்காட்டி பத்ரிநாத்தின் வேண்டுகோளை நிராகரித்தது. அரசின் முடிவை எதிர்த்து பத்ரிநாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய, 1979' ஜனவரியில் அது தனி நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது. பத்ரிநாத் இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தார். 1984' டிசம்பரில் டிவிஷன் பெஞ்ச் பத்ரிநாத்தின் மேல் முறையீடை அனுமதித்து, 'அரசினை அவருக்கு கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு வேண்டியது. அரசு விடவில்லை. உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அக்டோபர்' 1987ல் வழக்கை விசாரித்து, 'அடடா! கார்த்திகேயன் எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசியதும் தனது கருத்தைக் கூறியதும் அவரது பணியின் நிமித்தமான காரியமல்ல. அவரது தனிப்பட்ட செயல். இதற்கு எதற்கு அனுமதி?' என்று கூறி வழக்கை ஏற்றுக் கொண்டது.

ஆக, பிரிலிமினரி ரவுண்ட் முடியவே பத்ரிநாத் வழக்கில் பத்து ஆண்டுகள் ஓடிக் கடந்திருந்தது. எம்ஜியாரும் உலகை விட்டு பிரிந்து கொண்டிருந்தார்...கார்த்திகேயன், பத்ரிநாத் ஆகியோரெல்லாம் தத்தமது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்கள். அதற்குப் பிறகு பத்ரிநாத் தனது வழக்கினை தொடர்ந்தாரா என்பது தெரியவில்லை.

'காலப்பெட்டகத்தை தோண்டியெடுத்து மறுபரிசீலனை செய்யப் போகிறோம்' என்று ஜனதா ஆட்சியில் (1977-79) முழங்கினார்கள். அப்படியே அதுவும் என்னவாயிற்று என்று கூறினால் நலம்.

(பிரபலங்களால், நமது நாட்டில் தாக்கல் செய்யப்படும் அவதூறு வழக்குகள் இறுதி வரை தொடர்ந்து நடத்தப்படுகின்றன. சமீபத்தில் அரசியல்வாதி ஒருவருக்காக நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ரூ.50,000/- தீர்ப்பளிக்கப்பட்டாலும், பிரதிவாதிக்கு அதைக் கொடுப்பதற்கு வசதி ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்நேரத்தில் இன்று செய்தித்தாளில் நடிகை சுகன்யா சன் டிவி நிறுவனம் மீது தாக்கல் செய்த வழக்கில் 20 வருடங்கள் கழித்து ரூ.10,00,500/- நட்ட ஈடு என தீர்ப்பளிக்கப்பட்டதாக படிக்கையில் பத்து வருடங்களுக்கு முன்னர் நான் வேறு இரு அவதூறு வழக்குகள் குறித்து மேலே கண்ட கட்டுரை எழுதியது நினைவுக்கு வந்தது. எப்படியாயினும் 20 வருடங்கள் தொடர்ந்து வழக்கு நடத்தில் வெற்றி பெற்ற சுகன்யாவை பாராட்ட வேண்டும். ஆனால், சுகன்யாவுக்கு நேரிட்ட இழப்பையும், சன் டிவி நிறுவனத்தின் பணபலத்தையும் பார்க்கையில் இந்த இழப்பீடு மிகக் குறைவு என்றே எண்ணுகிறேன்.)

Wednesday, 15 April 2015

ACTUS CURIÆ NEMINEM GRAVABIT, TRULY?



It is not within the control of any party to have his application or the opposite party’s application listed for hearing’. Thus spake Justice V Ramasubramaniam, while holding the provision of Art 226(3) of the Constitution as not mandatory in the case of Dr.T.Gnanasambanthan Vs Board of Governors reported in 2014 (3) MLJ 1. In the said Judgment, the Judge undertook an arduous duty of watering down the mandate of a Constitutional provision, whose plain reading leaves no ambiguity; embarrassing duty as well. The other High Courts have taken a rather pedantic view.

Legislators in their enthusiasm often brings in a provision within the statute books, fixing a time frame to move the wheels of judicial process; both to the Bar and Bench. With no matching infrastructure, the horses can remain only wishes. Article 226(3) may mandate that the Application to vacate an interim order in a Writ Petition to be disposed of within two weeks but the ever expanding judicial work like oceanic wave knows well it needn’t listen; even the command is that of King Canute. Hardly a Court can dispose of a case within the statutory time limit; no different in the case of Advocates, in filing their written statements.

With his inimitable style the Learned Judge has found a way to extricate our Court from the clutches of Article 226 (3). Well, then will the observations or the reasoning of the Court help the case of litigants, who are similarly aggrieved when their cases are not listed on the date of expiry of the interim stay?

It was an usual complaint, in those golden old days that the bundles gone missing once the interim orders were granted, exparte. It happened mostly in matters against the Government; the private parties would jump in with a complaint immediately on knowing this mischief. However in the course of time such restriction is extended to all matters and has reached to a ludicrous level that now interim orders would expire even before the issuance of the order copy.

The High Court, while entertaining the applications for interim order exparte grants orders only for a limited period. Worse, even after the appearance of the Respondents, the interim orders are being continued only till the next hearing date. It is common knowledge that in most of the times, the case would not be listed on the next hearing date thanks to the miserable Bench strength against the number of cases adding to the records of the High Court each day. Much worse, an Advocate has to keep track of all such matters so as to mention it to be listed on the date of expiry for extension of the order. Advocates fail very often; even after mentioning the officers miss them.

It is only when such orders are flouted and after the Clients call, the Advocates would find to their horror that the case was slipped into the records of the Court for months, years without being listed for extension of interim orders.

There is an element of complacency that interim orders restricted with time, if not listed for hearing/ extension of time are deemed to continue until vacated by the Court, which granted the same. Unfortunately in the opinion of yours truly it is not so.

In the case of N.Rathinasabapathy Vs K.S.Palaniappa Kandar reported in 1996 (7) SCC 205, the Appellant was punished by the High Court for contempt for proceding with the construction of the building after the expiry of three weeks, till such time the order was restricted. The Supreme Court observing ‘there is no question of the order being in existence after the expiry of the period of three weeks’ held that there was no ‘contempt whatsover’.

Justice P K Misra presiding a Division Bench, true to his intelligence made use of this observation for a different purpose in the case of R.Rajamani Vs Government of Tamilnadu in the case of Writ Appeals No.955 to 959 of 2001 dated 27/04/07. Those were the matters challenging the acquisition of land; period between the initial Notification and the Declaration was the question. The Bench drawing support from the above Judgment of the Supreme Court observed, ‘When stay is granted till a particular period and subsequently after lapse of time either a fresh order of stay is passed or previous interim order is continued, it cannot be said that the period during which there was no express order of stay, the stay was operative

Therefore, let us not be lulled into a belief that interim orders, even if not extended by specific order are deemed to continue. The Court would not come to the rescue of the litigant on whose part no ‘obligation’ to bring the matter in the list. I doubt even Justice Ramasubramaniam’s Judgment would help a litigant, when the interim order in his favour is violated after expiry of the period stipulated in Article 226 (3). It is still possible for a person to violate the order and contend that he bonafide believed reading Article 226(3) that there was no interim order in existence on the date of violation. It is necessary in this regard to recollect the observations of a Division Bench in the case of Searle (India) Limited Vs M.A.Majid in Contempt Appeal No.4 of 1998 dated 10/01/03, ‘No person is to be regarded as having violated the order of the Court unless it is shown with reasonable certainty - first, that there exists an order of the Court which directs or prohibits the commission of an act; second, that the order so made is not vague or ambiguous, but is reasonably clear and certain; third, that the person who is alleged to have disobeyed the order had knowledge of the order; and fourth, that the disobedience of such an order of the Court by the alleged contemner was willful

The point involved in the said case is also unique. The Appellant alleged to have violated the interim order after the main matter was heard and reserved for final order. There was no specific order extending the interim order from the date when it was reserved for Judgment. The Division Bench held there was no deemed extension by observing ‘There is no presumption in law that when an interim injunction is issued upto the specified date and the case is heard on that date, but the judgment is not pronounced on the same date, the interim injunction is "deemed" to have continued till such time the judgment is pronounced

In conclusion, is upon the Advocates and Litigants to take care to ensure listing of such matters on the date of expiry of interim orders in order to seek their extension besides praying such extension, on the Court reserving  the main case for Judgment.

Madurai
15/04/15

வைல்ட் (2014)

நடப்பது சுகமான அனுபவம்தான். ஆனால் 1700 கி.மீட்டர்கள் அதுவும் உடலைப் பிழியும் பாலைவனத்தையும், பனிபடர்ந்த மலைப்பாதையையும் தனியாளாக என்றால், முக்கியமாக அனுபவமில்லாத இளம்பெண்?

தொடர்ந்து நடப்பதால் ஏற்ப்பட்ட அழுத்தத்தில் பிய்ந்து விழும் கால் நகங்கள் உட்பட உடலின் ஒவ்வொரு அவயத்திலும் வலியெடுக்கும் அனுபவம் சுகமானதில்லாதிருக்கலாம். ஆனால், மனதில் ஏற்ப்படும் சுகானுபவத்தை விவரிக்க இயலாது என்கிறார் அவ்வாறு நடந்த தனது அனுபவங்களை வைல்ட் : ஃப்ரம் லாஸ்ட் டு ஃபெளண்ட் ஆன் த பசிஃபிக் க்ரெஸ்ட் ட்ரெயில் என்ற புத்தகமாக எழுதிய ஷெர்ல் ஸ்ட்ரேய்ட் (Cheryl Strayed)

‘ஸ்ட்ரேய்ட்’ பெயருக்கேற்ற மாதிரி வழிதவறிய ஆடு. ஆனால் அவருக்கான மீட்பினை ஆலயத்தில் தேடாமல் இயற்கையில் தேடிக் கண்டுபிடித்த அனுபவக் குறிப்புகள், நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர் லிஸ்டில் முதலிடத்தில். ஹாலிவுட்டின் சின்னப் பெண்ணான ரீஸ் வித்தர்ஸ்பூன் ஓடி வந்து உரிமையை வாங்கி தானே நடித்து வைல்ட்’ என்று படமாக்கி விட்டார்.

ஏறக்குறைய 2700 கி.மீட்டர் தூரத்தை ஆஸ்திரேலியாவில் தனியாக நடந்த ராபின் டேவிட்ஸனின் அனுபவத்தை சித்தரித்த ட்ராக்ஸ்’ ‘ரா’(raw)வாக இருக்கும். ஆனால் வைல்ட் ஹாலிவுட் படம். இயக்குஞரின் புத்திசாலித்தனமான கைவண்ணத்தில் ஷெர்ல்’னின் கடந்த காலம் இடையிடையே அவளது நடைப்பயணத்தில் தோன்றி மறைய’ சென்டிமென்ட் காட்சிகள் நெகிழ வைத்தாலும், மற்றவை சில வினாடிகளே என்றாலும் நெளிய வைக்கலாம். குழந்தைகளோடு என்றால் ‘ஸ்டார் மூவிஸ்’ ப்ரீமியருக்கு காத்திருக்கவும்.  

I'm lonelier in my real life than I am out here’ படத்தில் வரும் வசனம்.

மதுரை
14/04/15

Sunday, 12 April 2015

எக்ஸ் எக்ஸ் வொய்

‘லிவிங் ஸ்மைல்’ வித்யா அவர்களை நான் சந்திக்காமல் இருந்திருந்தால் மூன்றால் பாலினத்தவர்களைப் பற்றிய எனது எண்ணம் இன்னமும் கேலிக்குறியதாகவே இருந்திருக்கலாம். சந்தித்தது என்பது நேரில் சந்தித்ததோடு அவர்களது கருத்துகளையும் அதை ஒட்டிய மற்ற இணைய பதிவர்களின் எழுத்துகளையும் தொடர்ந்து படித்ததையும் உள்ளடக்கும்.

ஆயினும் எனக்குக் கிடைத்த வாய்ப்பு பெரும்பாலானவர்களுக்கு இங்கு கிடைக்காமல் மூன்றாம் பாலினத்தவர்கள், குறிப்பாக திருநங்கைகளைப் பற்றிய அறியாமையும், தவறான கருத்துகளும்தாம் சமூகத்தில் இன்னமும் மலிந்து கிடக்கிறது.

XXY என்ற ஸ்பானிய மொழியிலான அர்ஜெண்டினா நாட்டு படத்தை நேற்று பார்த்த பின்னர் ஏற்ப்பட்ட ஆர்வத்தில் தொடர்ந்து படித்த விடயங்கள், நான் இதுவரை கற்றதும் கையளவுதான் என்பதை உணர்த்தியது. நான் என்ன, இருபாலினம் (intersex) என்று தமிழில் அழைக்கத் தகுந்த வகையில் இருபாலின உறுப்புகளோடு பிறந்த 15 வயதான அலெக்ஸுக்கும் அதுவரை சமூகத்திலிருந்து மறைத்து வந்த அவளது பாலினத்தை இனிமேலும் மறைக்க முடியாது என்ற நிலையில் அவளது பெற்றோருக்கும் ஏற்ப்படும் மனப்போராட்டத்தை கதையாக இயக்கிய இயக்குஞரே இதே மாதிரியான ஆனால் வேறு வகையான பாலின உடல் குறைபாட்டைக் குறிக்கும் XXY என்ற பதத்தை தலைப்பாக வைத்துள்ளாராம்.

இது மாதிரியான குறைபாடுள்ள மனிதர்களை intersex என்று அழைத்தாலும் பொதுவாக ஹெர்மாஃப்ரோடைட் என்கிறார்கள். நத்தை போன்ற உயிரினங்களில் இதுதான் இயல்பான பாலினமாம். கிரேக்க புராணத்தில் ஹெர்மாஃப்ரோடிட்டஸ் அஃப்ரோடைட்’டுக்கும் ஹெர்மஸுக்கும் பிறந்த இருபாலின குழந்தை.

படம் உருகுவே நாட்டு கடலோர கிராமம் ஒன்றில் நடக்கிறது. தனது பாலினம் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டிய சிக்கலில் படம் முழுக்க அலெக்ஸ் இருக்க, கடைசியில் ‘போங்கடா நீங்களும் உங்க பாலினமும்’ என்பது மாதிரியான தோரணையில் தனது அப்பாவின் கைகளை எடுத்து தன் தோள் மீது போட்டுக் கொண்டு தலை நிமிர்ந்து நடக்கும் போது சிந்தும் புன்னகையில், ஏதோ நம் வீட்டுக் குழந்தையே நம் கையை நம்பிக்கையுடன் பற்றிக் கொள்வது போல உணர்கிறோம்.

பெரியவர்களுக்கான படம் என்று இதனை வகைப்படுத்தினாலும், குழந்தைகளிடமும் மூன்றாம் பாலினத்தவர்களின் பிரச்னையை கனிவுடன் அணுகும் இது போன்ற படங்கள் கொண்டு செல்லப்பட்டால், நாளைய சமுதாயமாவது அவர்களை நம்மில் ஒருவராக இயல்பாகவே ஏற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கும்.

Madurai
10/04/15

Wednesday, 8 April 2015

சபாஷ், சைலேந்திரபாபு!

சைலேந்திரபாபுவிற்கு சபாஷ் போடத் தோன்றுகிறது. அவரது தியாகம் வியக்க வைக்கிறது. எனெனில், மோகன்ராஜ் என்கவுண்டர் முடிவு எடுத்ததும் (அவர் மறுத்தாலும், தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து அதுதான் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணையத்திலும் கூட போலி என்கவுண்டர் என்ற ஒன்று இருக்கிறது என்பதே தெரியாமல், என்கவுண்டர் என்றால் வாழத்தகுதியில்லாத ஒருவனை காவலர்கள் போட்டுத்தள்ளுவது என்ற அர்த்ததில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவர் மனதில் ஒரு முறை கேரளாவின் லக்ஷ்மணா, குஜராத்தின் வன்சாரா, தில்லியின் ரஜ்பீர் சிங், மும்பையின் தயா நாயக் ஆகிய பெயர்கள் மனதில் ஓடியிருக்கும். அந்தப் பயத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொடூரன் மோகன்ராஜ் என்கவுண்டர் (sic) செய்து விடலாம் என்ற முடிவினை அவர் எடுத்திருந்தால், அந்த தியாத்தை வியந்து ‘சபாஷ்’ போடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

நேற்று ஆய்வாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். கோவை என்கவுண்டர் பற்றி பேச்சுத் திரும்பிய பொழுது, ‘அண்ணாத்துரை ரொம்ப அப்பாவி. எப்படித்தான் சுட்டாரோ தெரியவில்லை’ என்று கூறினார்.

வர்கீஸை சுட்ட ராமச்சந்திர நாயரும் அப்பாவிதான். இப்படித்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், கேரள காவலர்களால் கைது செய்யப்பட்ட நக்ஸல் வர்கீஸ், பின்னர் காவல்துறையோடு நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆலயம் கூட கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைக்க மறுத்தது.

வர்கீஸ் கொல்லப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்து, அவரை சுட்ட ராமச்சந்திரன் நாயர் என்ற காவலர், தனது மனச்சாட்சியின் குரலுக்கு பயந்து ‘நான் இருந்தேன் என்பதற்கு சாட்சியாக” என்று ஒரு புத்தகத்தை எழுதி அதில் வர்கீஸை மேலதிகாரியின் உத்தரவுக்கு பணிந்து தான் சுட்டதாக கூறியிருந்தார்.

அந்தப் புத்தகம் அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ராமச்சந்திரன் நாயர், முன்னாள் IG லக்ஷ்மணா மற்றும் முன்னாள் DGP விஜயன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடைபெறுகையில் ராமச்சந்திரன் நாயர் இறந்து போக, கடந்த அக்டோபர்’ 2010ல் ஐஜி லக்ஷ்மணா குற்றவாளி என்று தீர்ப்புக் கூறப்பட்டு, 74 வயது லக்ஷ்மணா கடந்த ஒரு மாதமாக சிறையில்…

ஒருவேளை இருபது வருடங்கள் கழித்து அண்ணாதுரையும் தனது மனச்சாட்சிக்கு பணிந்தால்....சைலேந்திரபாபுவுக்கு துணையாக, எந்த ஊடகவியலாளரும் சிறைக்குச் செல்லப் போவதில்லை.

-oOo-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த லக்ஷர் தோய்பா பயங்கரவாதி சொராபுதீனை தீரமாக குஜராத் காவலர்கள் சுட்டுக் கொன்ற பொழுது, DIG வன்சாரா மீது சூட்டப்பட்ட புகழாரங்கள் முன்பு இன்று சைலேந்திரபாபுவிற்கு கிடைக்கும் புகழாரங்கள் எல்லாம் ஒன்றுமில்லை!

இன்று வன்சாராவிற்காக கவலைப்பட எந்த ஊடகமும் தயாரில்லை. பாவம், ராஜ்குமார் பாண்டியன். ஐ பி எஸ் அதிகாரியாக குஜராத் செல்லும் தான், அங்கு ஒரு கைதியாக சிறையில் வாட வேண்டியிருக்கும் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் ஐ பி எஸ் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சைலேந்திரபாபுவும் நினைத்திருக்க மாட்டார். ஒரு கொலையில் தனக்கும் பங்கிருப்பதாக, சந்தேகிக்கப்படுவோம் என்று…

எட்டு வருடங்களுக்கு முன்னர், தில்லி அன்சால் வணிக வளாகத்தில், இரு லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ACP ரஜ்பீர் சிங் கொண்டாடப்பட்டார். உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ரஜ்பீர் சிங் 13 வருடங்களில் உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். காரணம் அவர் பணி செய்த 24 ஆண்டுகளில் 56 என்கவுண்டர்களை நடத்தியுள்ளார். ஆனால், கொடூர பயங்கரவாதிகளை ஒரு தனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் சுட்டுத்தள்ளிய ரஜ்பீர் 2008ம் ஆண்டில் நிசமான ஒரு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார். பல்வேறு நில கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்ட ரஜ்பீர், அதனால் ஏற்பட்ட ஒரு தகறாரில் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுமார் 50 நபர்களை என்கவுண்டரில் விண்ணுக்கு அனுப்பிய மும்பை ஆய்வாளர் விஜய் சலாஸ்கர் கூட இப்படித்தான். ஒரு சிராய்ப்பு கூட வாங்கியதில்லை. அனால் நிசமாகவே ஒரு துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதி அஜ்மல் கசாபுடன். சலாஸ்கரின் பெயர் எழுதிய ரவை அன்றுதான் துப்பாக்கியிலிருந்து கிளம்பியது.

ஆனால், 85 நபர்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய மும்பையின் தயா நாயக் அந்த சண்டையில் பங்கெடுக்க முடியவில்லை. எனெனில் 2006ல் மும்பை தாதா உலக நடவடிக்கைகளில் அவருக்கும் பங்கிருப்பதாக வழக்கு தொடரப்பட்டு அவரே சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.

பிரதீப் சர்மா…அவரது என்கவுண்டர்கள் 100ஐ தாண்டி வெகுகாலமாயிற்று. அவரும் தாவூது இப்ராகிமோடு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப் பட்டார். தற்பொழுது நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சைலேந்திரபாபுவுக்கு கூட இப்படித்தான். முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன். காலப்போக்கில் குற்ற உணர்வுகள் மரத்துப் போன பின், ‘இந்த லோக்கல் ரவுடியை கொஞ்சம் கவனியுங்கள். நான் உங்களைக் கவனிக்கிறேன்’ என்று ஒரு தொழிலதிபர் வந்தால் அதையும்தான் செய்து பார்ப்போமோ என்ற எண்ணம் வரலாம்.

தான் மறுத்தால் கூட, அண்ணாதுரை வந்து, ‘நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும்’ என்றால் முடியாது என்று கூற முடியுமா?

முடியாது என்று கூறினால், அண்ணாதுரை ராமச்சந்திரன் நாயர் போல ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதுவார் என்ற பயம் உருவாகுமல்லவா?

அதனால்தான் அவரது துணிவுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும் என்று தோன்றுகிறது.


மதுரை
13/11/10

Saturday, 4 April 2015

இஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்...


சுப்பிரமணிய சுவாமி மறுபடியும் கோல் அடித்திருக்கிறார். இந்த முறை கேரள உயர்நீதிமன்றத்தில். சுவாமியின் வழக்கமான ‘ஆஃப் சைட் கோல்’தான். ஆயினும் மீண்டும் பொதுநல வழக்கு ஒன்றின் மூலம், அரசியலில் சுவாமி தன்னுடைய இருப்பிடத்தினை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்பொழுதுதான் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பத்திரிக்கைச் செய்திகளின் மூலமே வழக்கின் சாரம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. கேரள அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (KSIDC) என்ற நிறுவனம் கேரள மாநில அரசினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு அரசு நிறுவனம். தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதன் மூலம், கேரள மாநிலத்தில் தொழில் வளத்தினைப் பெருக்கும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம், இஸ்லாமிய ஷரியா விதிகளுக்கு உட்பட்டு இயங்கக்கூடிய கடன் வழங்கும் நிறுவனம் (Financial Institution) சுமார் 20 தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து தொடங்கப் போவதாக அறிவித்தது. KSIDC முதலீட்டில் 11 சதவீதம் அளிக்கும். வங்கியின் பங்குகளில் 51 சதவீதம் முதலீட்டாளர்களுக்கும், 49 சதவீதம் பொதுமக்களுக்கும் அளிக்கப்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

கேரள அரசு இதற்காக ஒரு அரசாணையை வெளியிட அதனை எதிர்த்து, சுவாமி கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

சுவாமியின் வாதம்?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, நமது அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு (secular state). அவ்வாறான ஒரு அரசு இஸ்லாமிய வங்கி என்ற மதரீதியிலான நிறுவனத்தை தொடங்குவது, அரசின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை பின்பற்றி இயங்கும் ஒரு வங்கியினை நடத்துவதன் மூலம், கேரள அரசு இஸ்லாமிய மதத்திற்கு சார்பாக நடந்து கொள்கிறது. அரசுப் பணமானது ஒரு தனிப்பட்ட மதத்திற்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதே!

மேற்கண்டவை தவிர, இவ்விதமான வங்கி நமது வங்கி கட்டுப்பாட்டுச் சட்டம் (Banking Regulation Act) மற்றும் மைய வங்கியின் வழிகாட்டுதல்கள் (Reserve Bank Regulations) ஆகியவற்றையும் மீறுகிறது என்ற காரணங்களும் கூறப்பட்டாலும், மதச்சார்பின்மை வாதம் மட்டுமே முன்னணியில் வைக்கப்படுவதால், அவற்றை ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில் மற்ற விதிமீறல்களை சட்டத்தினை (Act) திருத்துவதன் (amendment) மூலமும், விதிகளை (Rules) தளர்த்துவதன் மூலமும் சரி செய்து விடலாம்.

மேலும், இந்த நிறுவனம் வங்கி சாராத ஒரு அமைப்பு (Non Banking Financial Company NBFC). வங்கி அல்ல!

ஆனால், மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பின் அடிப்படைக்கூறு (basic feature). அதற்கு எதிரான எந்த செயலையும் நேர் செய்துவிட முடியாது!

-oOo-

இஸ்லாம் மதக் கோட்பாடான ஷரியா, வட்டி பெறுதலை அனுமதிப்பதில்லை. ஆனால் ஒரு தொழிலினை புரிவதன் மூலம் லாபம் ஈட்டுவதை அனுமதிக்கிறது. மாறாக நவீன பொருளாதாரம் கடனை அடிப்படையாக கொண்டே இயங்குகிறது. நவீன வங்கிகளும் கடன் வழங்கி, அதற்கான வட்டியில் இருந்து லாபம் ஈட்டுகின்றன.

எனவே நடைமுறையிலுள்ள வங்கியின் செயல்பாடுகள் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற கருத்து நிலவுகிறது.

இஸ்லாம் தடை செய்துள்ள வட்டியினை வைப்பீடுகளுக்கு (deposits) வழங்காமலும், தொழில்களுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு வட்டி வசூலிக்காமலும் செயல்படும் வண்ணம், நடைமுறையிலுள்ள வங்கிகளுக்கு மாற்றாக செயல்படும் நிறுவனங்கள்தாம் ‘இஸ்லாமிய வங்கி’ எனப்படும் அமைப்புகள்.

வட்டியில்லாமல் ஒரு வங்கி செயல்படுவது நடைமுறையில் சாத்தியமா? சுவாமி இதனை கொதிக்க வைக்கப்பட்ட ஐஸ்கிரீம் (boiled ice cream) என்று கிண்டலடிக்கிறார்.

ஆனால், வட்டியில்லா வங்கி முறையை அவ்வளவு எளிதாக புறம் தள்ள முடியாதபடி உலக பொருளாதாரத்தில் அவற்றின் வளர்ச்சி உள்ளது என்பதுதான் உண்மை!

-oOo-

நவீன இஸ்லாமிய வங்கி 1963ம் ஆண்டு எகிப்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது கடனுக்கு வட்டி வழங்காமலும், அவற்றை தொழிலில் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் லாபத்தினை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முறைதான் இஸ்லாமிய வங்கி முறை.

முதன் முறையாக தொடங்கப்பட்ட வங்கி சில ஆண்டுகள்தான் செயல்பட்டது என்றாலும் இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10-15% வேகத்தில் வளர்ந்தும் வருகின்றன.

சமீப காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை (global recession) இஸ்லாமிய வங்கி முறைக்கு சாதகமாக அமைந்து அதன் மொத்த சொத்துகளின் வளர்ச்சி கடந்த ஆண்டு 29%ஐ தொட்டு சுமார் 822 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறை வேர்விட்டுள்ளது. பிரான்சு கூட சமீபத்தில் இஸ்லாமிய வங்கி முறையினை அமுல்படுத்துவதற்காக பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் தனது சட்டத்தினை திருத்தியுள்ளது. பிரெஞ்சு உச்ச நீதிமன்றம் சட்டதிருத்தம் தவறு என்று கூறியிருப்பினும் அது ஒரு நடைமுறை காரணத்திற்காகத்தான் (technical reason) என்பதால், மீண்டும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளன.

புகழ் பெற்ற சந்தை குறியீட்டு நிறுவனமான டெள ஜோன்ஸ் (Dow Jones) கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாமிய சந்தை குறியீடு (Dow Jones Islamic Market Index DJIMI) என்பதின் மூலம் இந்த சந்தையின் போக்கினை கணித்து வருகிறது.

முக்கியமாக, ‘மேற்கத்திய வங்கிகள் இஸ்லாமிய வங்கி முறையினை தங்களது செயல்பாட்டில் புகுத்துவதன் மூலம், தங்களது வாடிக்கையாளர்களின் நெருக்கமான நம்பிக்கையினை பெற முடியும்’ வாடிகன் வேறு இஸ்லாமிய வங்கி முறைக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

எனவே இஸ்லாமிய வங்கி என்பது, இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு பாதகமின்றி செயல்படும் ஒரு வர்த்தக கோட்பாடே (commercial concept) தவிர இஸ்லாம் மதம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வங்கினை நடத்துபவர்களோ, வேலை செய்பவர்களோ, வாடிக்கையாளர்களோ அல்லது கடன் பெறுபவர்களோ இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

உதாரணமாக, ஆயுர்வேதம் என்பது இந்திய வேதங்களில் குறிப்பாக அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவ முறை. இதனை எந்த மதத்தை சேர்ந்தவரும் கற்று மருத்துவராக தொழில் புரிய முடியும். இந்து வேதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும்தான் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலும் என்பதில்லை.

அலொபதி மருத்துவத்திற்கு மாற்றாக ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ முறைகளில் மக்களிடையே உள்ள நம்பகத்தன்மையினை விட கூடுதலான நம்பகத்தன்மையினை இஸ்லாமிய வங்கி முறை பெற்றுள்ளது என்று உறுதியாக கூற முடியும்.

-oOo-

தீவிர வலதுசாரி கொள்கையுடைய அரசு நடக்கும் பிரெஞ்சு நாட்டிலேயே எதிர்ப்புகளுக்கிடையிலேயும் இஸ்லாமிய வங்கி முறையினால் கிடைக்கும் லாபத்தினையும், முதலீட்டையும் கருத்தில் கொண்டு சட்டத்திருத்தம் ஏற்ப்படுகின்றது என்றால், இந்தியா மட்டும் பின் தங்கி விட முடியுமா?

எனவேதான் வங்கிச் செயல்பாடுகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் பற்றி ஆராய்ந்த ‘ரகுராம் ராஜன் குழு’வும் இஸ்லாமிய வங்கிகள் இந்தியாவில் ஏற்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

முக்கியமாக, கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பலர் இஸ்லாமியர்கள். இஸ்லாமிய வங்கி தொடங்குவதன் மூலம், இவர்களது கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள முதலீட்டினை பெற்று பெருமளவில் இங்கு பல தொழில்களிலும், நலத்திட்டங்களிலும் பயன்படுத்த முடியும். உலக பொருளாதார தேக்க நிலையில் அதிகளவில் பாதிக்கப்படாத இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யவும் மற்ற நாடுகளில் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஏன், லாபகரமாக இயங்கினால் யார் வேண்டுமானாலும் இவ்விதமாக வங்கிகளில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.

எனவே இஸ்லாமிய வங்கி முறை இந்திய சூழ்நிலையில் சோதித்து அறியப்பட வேண்டிய ஒன்று. ‘கொதிக்கும் பனிக்குழைவு’ என்று எளிதாக தூக்கி எறிந்து விட முடியாது.

-oOo-

கேரள தொழில் முதலீட்டு நிறுவனம், இந்த வங்கிக்கான தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் மேலாளர்கள் (Managers) தேவை என்று தனது வலைப்பதிவில் செய்துள்ள விளம்பரத்தை, சுவாமி தனக்கு சாதகமாக பயன்படுத்தி இடைக்கால உத்தரவினை பெற்றுள்ளார் என்றே நினைக்கிறேன்.

இஸ்லாமிய வங்கி என்பது ஏதோ மத அமைப்பு போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ள சுவாமி, மேற்கண்ட விளம்பரத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி வங்கியின் இயக்குஞர் குழுவிற்கும், ஷரியா ஆலோசனைக்குழுவிற்கும் பதிலளிக்க கடமைப்பட்டவர் (He will report to the Board of Directors and Shariah Advisory Board) என்ற வாசகத்தினை வைத்து, ‘மத அமைப்பு ஒன்றிற்கு கட்டுப்பட்ட முஸ்லீம் தலைமை செயல் அதிகாரியினை கொண்ட வங்கி மதச்சார்புடைய அமைப்பு’ என்று வாதிட்டுள்ளார்.

விளம்பரத்தில் தலைமை செயல் அதிகாரி இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை. ஏற்கனவே கூறியபடி இஸ்லாமிய வங்கி முறை என்பது ஒரு வர்த்தக கோட்பாடே தவிர மதத்தை பின்பற்றுவதல்ல.

ஷரியா ஆலோசனைக் குழு?

வாடிக்கையாளர்களிடம் இருந்து வைப்பீட்டினைப் பெறுவதோடு மட்டும் வங்கியின் பணி முடிவடையாது. பெற்ற பணத்தினை தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும். பிரச்னை, இஸ்லாம் தடை செய்வது வட்டியினை மட்டுமல்ல. சில தொழில்களையும் கூடத்தான். எனவே, இஸ்லாமிய வங்கி மற்ற வங்கிகளைப் போல அனைத்து தொழில்களிலும் முதலீடு செய்து விட முடியாது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்குமா என்ற முடிவினை ஒரு வர்த்தக மேலாளரால் எடுக்க இயலும். ஆனால் அந்த நிறுவனம் நடத்தும் தொழிலை இஸ்லாம் அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுந்தால், அந்த முடிவினை ஒரு ஷரியா சட்டத்தினை அறிந்த அறிஞரால் எடுக்க முடியும்.

எனவே, இஸ்லாமிய வங்கிகள் ஷரியா ஆலோசனைக் குழு என்ற அமைப்பு ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டு அதன ஆலோசனையின் படி தொழில் முதலீடுகளில் ஈடுபடுகின்றன.

ஷரியா கோட்பாடுகளை கற்றுத் தெரிந்த யாரும் இவ்வகையான ஆலோசனைக் குழுக்களை அமைத்து செயல்பட முடியும். ஐ எஸ் ஓ (ISO) தரம் நிர்ணயம் செய்யும் தனிப்பட்ட ஒரு அமைப்பு போல இவையும் செயல்படுகின்றன. இஸ்லாமிய மெளல்வி அல்லது இஸ்லாமியர்கள்தான் அந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்ற விதி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

ஷரியா கூறுவதை வைத்து, இஸ்லாமியர்களுக்கிடையேயான வழக்குகளில் தீர்ப்பு கூறும் இந்து நீதிபதிகளையும், இந்து ஆகமம் கூறுவதை ஆராய்ந்து இந்து கோவில் நிர்வாகப் பிரச்னையில் தீர்ப்பு கூறும் இஸ்லாமிய நீதிபதிகளையும் நாம் இங்கு பார்க்கவில்லையா? அது போலத்தான் இதுவும்.

முக்கியமாக, இஸ்லாம் அனுமதிக்கும் அல்லது தடை செய்யும் தொழில்களைக் குறித்து இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையே கூட பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவது நாம் அறிந்ததே!

இஸ்லாமிய வங்கியோ வேறு வங்கியோ, ஷரியா கோட்பாடுகளுக்கு பாதகமில்லாமல் எந்த ஒரு வங்கியும் இயங்க முடியாது என்ற கருத்தினையும் சிலர் முன் வைக்கிறார்கள். வங்க தேசத்தின் முகமது யூனிஸ் கூட தனது ‘கிராமீன் வங்கிகள்’ ஜாமீன் சொத்து இல்லாதது (Collateral Security) மற்றும் குறைந்த வட்டியில் இயங்குவது போன்றவற்றால் இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு உட்பட்டது என்றுதான் கூறுகிறார்.

எனவே வைப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வைப்பீடானது ஷரியா கோட்பாடுகளுக்கு உட்பட்டே முதலீடு செய்யப்படுகின்றன என்று ஓரளவிற்கு ஒரு உத்தரவாதத்தினை தருவதற்காக இப்படிப்பட்ட குழுக்களின் ஆலோசனைகளின்படி இவ்விதமான வங்கிகள் செயல்பட முன்வருகின்றன.

எனவே ஷரியா ஆலோசனைக் குழு என்பது ஒரு மத அமைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை.

-oOo-

தனது வாதத்திற்கு வலு சேர்க்க சுவாமி நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 27ஐ சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பிரிவு

27. Freedom as to payment of taxes for promotion of any particular religion.- No person shall be compelled to pay any taxes, the proceeds of which are specifically appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion or religious denomination.

இந்தப் பிரிவினை ஒரு வழக்கில் ஆராய்ந்த 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சு கூறிய ஒரு தீர்ப்பில் ‘எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் நிறுவனங்களை முன்னிறுத்துவதற்காக பொதுப் பணத்தை உபயோகிக்க முடியாது’ என்று கூறியதை மேற்கோள் காட்டுகிறார்.

உண்மைதான். ஆனால் இந்து அறநிலையத்துறை ஆணையர், சென்னை எதிர் ஸ்ரீ லஷ்மீந்திர ஸ்வாமியார் மடம் என்ற வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு (AIR 1954 SC 282) சுப்பிரமணிய சுவாமியின் வழக்கிற்கு பாதகமாக அமைந்துள்ளது என்றே நினைக்கிறேன்.

1951ம் ஆண்டு தமிழக அரசு இந்து அறநிலையத்துறை சட்டத்தினை இயற்றியது (Madras Hindu Religious & Charitable Endowments Act’ 1951). அந்த சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளிக்கும் மத உரிமைகளுக்கு பாதகமாக இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய மன்றத்தால் விசாரிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை கண்காணிக்கும் அதிகாரம் அரசின் கைகளில் வந்தது. அதற்காக அரசு இந்து அறநிலையத்துறை என்ற தனித் துறையினை உருவாக்கி அதனை நடத்துவதற்கு ஒரு ஆணையாளரின் (Commissioner) தலைமையில் பல்வேறு அலுவலர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு சம்பளம் போன்ற செலவினங்களை ஈடுகட்ட அந்த சட்டத்தின் பிரிவு 76(1)ன் கீழ் இந்து மத நிறுவனங்கள் அவற்றின் வருமானத்தில் 5% அளிக்க வேண்டும்.

இந்த சட்டப்பிரிவினை எதிர்த்த மடம், மேற்கண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 27ல் ‘ஏதேனும் மதத்தை முன்னேற்றுவதற்காக அரசு வரி எதுவும் வசூலிக்க முடியாது’ என்று கூறப்பட்டுள்ளதால் ‘இந்து மத நிறுவனங்களை பாதுகாக்கவும் முன்னேற்றுவதற்குமாக’ இவ்வாறு வரி வசூலிக்க அரசிற்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.

அரசு சார்பில் பிரிவு 76ன் கீழ் செலுத்த வேண்டியது கட்டணம் (fee) வரி (tax) இல்லை என்று வாதிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் அது வரிதான் என்று கூறி அந்தப் பிரிவு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பு கூறியது. ஆனால் காரணம், அத்தகைய வரி வசூலிப்பதற்கு அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது, மாநில அரசிடம் இல்லை என்பதுதான்.

அது மட்டுமல்ல...மத நிறுவனங்களை கண்காணிக்கும் பணி மத ரீதியிலான நடவடிக்கை இல்லை என்று கூறி அதற்காக செலவிடப்படும் பணம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 27ஐ பாதிக்காது என்றும் கூறியது.

“The purpose is to see that religious trusts and institutions, wherever they exist, are properly administered. It is a secular administration of the religious institutions that the legislature seeks to control and the object, as enunciated in the Act, is to ensure that the endowments attached to the religious institutions are properly administered and their income is duly appropriated for the purposes for which they were founded or exist. There is no question of favouring any particular religion or religious denomination in such cases. In our opinion, Art. 27 of the Constitution is not attracted to the facts of the present case”

இதன்படி இந்து அறநிலையத்துறை என்ற துறை மூலம் அரசு இந்து கோவில் நிர்வாகங்களை கட்டுப்படுத்துவதும், கண்காணிப்பதும் மத ரீதியிலான ஒரு செயல் அல்ல. ஆயினும் இந்து அறநிலையத் துறை கண்காணிப்பாளர் முதல் கீழ்மட்ட அலுவலர்கள் வரை இந்துக்களாகத்தான் இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்து கோவில்களை நிர்வாகம் செய்யும் ஒரு பணி இந்து மதத்தினை முன்னேற்றுவதான அல்லது பாதுகாப்பதான (promote or maintain) பணி இல்லை என்றால், இஸ்லாமிய மதக் கோட்பாடு வலியுறுத்தும் ஒரு வர்த்தகக் கொள்கையினை பின்பற்றி நடத்தப்படும் ஒரு வங்கிக்காக அரசு செலுத்தும் முதலீடு மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மீறியது ஆகாது என்பதே என்னுடைய எண்ணம்.

ஏனெனில் கேரள அரசின் செயல் ஒரு புத்திசாலித்தனமான வர்த்தக செயல்பாடு (prudent business idea). இஸ்லாமிய மதத்தினை முன்னேற்றும் செயலல்ல. இப்படி ஒரு சோதனை முயற்சியில் இறங்குவது புத்திசாலித்தனமான வர்த்தகமல்ல என்றாலும், முதலில் தனியாருக்கு அந்த வாய்ப்பை ஏற்ப்படுத்திக் கொடுத்து பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் ஒரு புத்திசாலித்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

எப்படியாயினும் இந்த வங்கி சுவாமி கூறுவது போல முஸ்லீம் வாக்காளர்களைக் குஷிப்படுத்துவதற்காக (placate) கேரள கம்யூனிஸ்டு அரசு எடுக்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது அல்ல.

மற்றபடி சுவாமி கூறுவது போல என்றால், ஆயுர்வேத மருத்துவமனைகளை அரசு செலவில் நிறுவுவதும், அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு சம்பளமும், ஆராய்ச்சிக்கு உதவி செய்வதும் தவறு. ஜோதிட படிப்பு (Astrology) படிக்க அரசு நிறுவனமான யுஜிசி (Universities Grants Commission) நிதி அளிப்பதும் தவறுதான்.

எந்தவொரு அரசு திட்டப்பணியும் இந்து முறைப்படி அமைந்த பூசையுடன் ஆரம்பிக்கப்படுவதும் தவறுதான்.

வெள்ளிக்கிழமையினை தவிர்த்து ஞாயிற்றுக் கிழமையை பொது விடுமுறையாக அறிவிப்பதும் தவறுதான்.

ஏன், உயர்நீதிமன்ற வளாகத்தை பயன்படுத்தி அதன் அலுவலர்கள் வருடா வருடம் சரஸ்வதி பூசை நடத்துவதும் கூட அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம்தான்.

சுப்பிரமணிய சுவாமி தனது சுய முன்னேற்றத்திற்காக தேவையின்றி ஒரு வம்பு வழக்கினை ஆரம்பித்து உள்ளார். இந்தியாவிற்கோ அல்லது இந்துக்களுக்கோ இந்த வழக்கினால் ஏதும் நன்மை விளையப் போவதில்லை.

மாறாக வளர்ச்சிக்கான சாதாரண ஒரு வர்த்தக முயற்சி இந்த வழக்கின் மூலம் இஸ்லாமியர்களிடையே தேவையற்ற ஒரு அவநம்பிக்கையினை தோற்றுவித்து தேசிய நீரோட்டத்திலிருந்து அவர்களை ஒரு சிறு அளவேனும் விலக்கி வைக்க ஏதுவாக இருக்கும் என்பதே என் அச்சம்!

மதுரை
14/01/10

இக்கட்டுரை எழுதப்பட்ட ஓராண்டில் கேரள உயர்நீதிமன்றம் வழக்கினை தள்ளுபடி செய்து விட்டது. இஸ்லாமிய வங்கி முயற்சி பின் கேரளாவில் தொடரப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் மதுரையில் தொடங்கப்பட உள்ளதாக போன வாரம் செய்தி பார்த்த நிலையில் இக்கட்டுரை மீள்பதிவு செய்வது பலனுள்ளது என நினைக்கிறேன்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....